ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத்தெரிவித்து பேரவைக்கு முன்பாக நேற்று இலங்கையர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவின் அனுசரணையுடன் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர் 5000ற்கும் அதிகமான வர்கள் பங்கேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் நேற்று இடம்பெற்றது.
இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ்லாந்து, பிரித்தானியா, நோர்வே, சுவீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வசித்துவரும் நாட்டை நேசிக்கும் இலங்கையர்கள் 5000ற்கும் அதிகமானவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் தூண்டுதலின் பேரில் இலங்கை மீது தேவையற்ற தலையீடுகளை நிறுத்த வேண்டும், இலங்கையிலுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பதில் பணிப்பாளர் ஆகியோருக்கு முகவரியிட்டு இந்த மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் முறைமையைப் பின்பற்றி வரும் நாடு என்பதுடன், சர்வதேச நாடுகளுடன் நல்லெண்ணத்தைப் பேணிவரும் நாடாகும். இலங்கைக்கும் ஐ.நாவுக்கும் இடையில் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் கருத்துக்கள் இருக்க வேண்டும்.
இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையர்கள் என்ற ரீதியில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துக்குப் போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த மகஜரில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்கள் உருவாக்கியிருக்கும் ‘இலங்கையின் ஒற்றுமைக்கான அமைப்பு’ பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. முதலாவது ஆர்ப்பாட்டம் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.