மொனராகலை ஹம்பேகம என்ற இடத்தில் தான் பிரசுவித்த சிசுவை பற்றைக்குள் வீசிய தாயை பொலிசார் கைது செய்ததுடன் பற்றைக்குள்ளிருந்த சிசுவையும் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
ஹம்பேகம என்ற இடத்தில் பற்றைக்குள் சிசுவொன்று அழுவதைக் கண்டு அங்கிருந்தவர்கள் 119 என்ற அவசர பொலிஸ் பிரிவிற்கு தகவலை வழங்கியதையடுத்து ஹம்பேகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த இடத்திற்கு விரைந்து பற்றைக்குள்ளிருந்த சிசுவை மீட்டனர்.
இதையடுத்து அங்கு மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சிசுவின் தாய் கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் குறித்த தாய் நோய்வாய்ப்பட்டிருந்தமையினால் அவர் பொலிஸ் பாதுகாப்புடன் ஹம்பேகம கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். அந்த தாய்க்கு ஏற்கனவே மூன்று பிள்ளைகள் உள்ளனர். அத்தாய் 34 வயது நிரம்பியவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வறுமை காரணமாகவே பிரசவிக்கப்பட்ட மறுதினமே சிசுவை பற்றைக்குள் எறிந்ததாக அப்பெண் பொலிசாருக்களித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில் சிசு வைத்தியசாலையில் சுகதேகியாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த சிசு ஆண் குழந்தையென்பதும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.