9 வயதான மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலயம் ஒன்றின் பூசகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியலையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அர்ச்சகரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி என்.சிறிகாந்தா பிணை விண்ணப்பம் செய்தபோதும் பாதிக்கப்பட்ட மாணவியின் நலன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ், கடுமையான ஆட்சேபனையை முன்வைத்த நிலையில் சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரித்து விளக்கமறியலை நீதிமன்றம் நீடித்தது.
கடந்த நவம்பர் 27ஆம் திகதி பாடசாலையில் குறித்த மாணவி கைத்தொலைபேசி வைத்திருப்பதை ஆசிரியர் ஒருவர் கண்டறிந்தார். இதுதொடர்பில் மாணவியிடம் விசாரித்தபோது, வல்வெட்டித்துறை ஆலயம் ஒன்றின் பூசகர் அதனை வாங்கிக் கொடுத்ததாகவும் அவர் தனக்குப் பிரசாதம் தருவதற்காக அழைப்பதற்கு கைத்தொலைபேசியைத் தாந்தார் எனவும் கூறியுள்ளார்.
மாணவியின் தகவலில் சந்தேகம் கொண்ட ஆசிரியர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறிவித்தார். அவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
பூசகர் தன்னை ஆலய மடப்பள்ளியில் வைத்து துன்புறுத்தலுக்குள்ளாகியதாகவும் தனக்கு அதிகளவான பணத்தை அவர் தந்ததாகவும் மாணவி விசாரணையில் தெரிவித்தார்.
மேலும் தனது உறவினர் ஒருவரும் இவ்வாறு தன்னை துன்புறுத்துவதாகவும் மாணவி தெரிவித்திருந்தார். அத்துடன், பூசகரால் வழங்கப்பட்ட பணத்தின் ஒருதொகையையும் மாணவி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
மாணவியின் கைத்தொலைபேசியின் சிம் அட்டை அர்ச்சகரின் பெயரிலேயே இருந்தமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 72 வயதான பூசகரும், சிறுமி குறிப்பிட்ட 50 வயதுடைய சிறுமியின் உறவினரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.