‘உயிர் வாழும் பலர் மரண தண்டனை பெற வேண்டியவர்கள். மரண தண்டனை பெறவுள்ள பலர் உயிர் வாழ வேண்டியவர்கள். உங்களால் உயிரைத் தர முடியுமா?
எனவே, உங்கள் தீர்ப்பில் மரணத்தைக் கையாள அதிக ஆர்வம் காட்ட வேண்டாம், என்பார், பிரபல ஆங்கில தத்துவ ஞானியும் எழுத்தாளருமான ஜே.ஆர்.ஆர்.ரொல்கீன். மரண தண்டனை பற்றிய அவரது கருத்து அது.
அந்தக் கருத்து எந்த சூழ்நிலையுடன் பொருந்துமென எவரேனும் கேட்கலாம். இன்று மரணத்தின் வாசலில் நிற்கும் ஒரு தமிழனின் சூழ்நிலைக்குப் பொருந்துவதைப் போல வேறெந்த சூழ்நிலைக்கும் அது பொருந்துமா என்பது தெரியவில்லை.
அவரின் பெயர் மயூரன் சுகுமாரன். 33 வயதுள்ள மனிதர். இந்தோனேஷியாவின் பாலி தீவிலுள்ள கெரோபொக்கான் சிறைச்சாலையில் தமது வாழ்வின் இறுதி நாட்களைக் கழிப்பவர் இன்றோ, நாளையோ அவர் மீதான மரணதண்டனை நிறைவேற்றப்படலாம்.
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பான இந்தோனேஷிய காவல் குழுவின் துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் குண்டுகள் மயூரனின் உயிரைக் குடிக்கலாம்.
மயூரன் மட்டுமல்ல, மயூரனுடன் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட அன்ட்ரூ சான் என்ற 31 வயது மனிதருக்கும் இதே கதி.
இன்று இராஜதந்திர உலகில் அதிகம் பேசப்படும் விவகாரம், இவர்கள் மீதான மரணதண்டனை இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
மனித உயிரின் பெறுமதி, ஒரு இறைமையுள்ள தேசத்தின் சட்டதிட்டங்கள், சட்டத்தை நிலைநாட்டுவதில் தேசங்கள் கொண்டுள்ள நியாயாதிக்க உரிமைகள், இரு நாடுகள் மத்தியிலான இராஜதந்திர உறவுகள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவற்றிற்கு மேலான விடயமொன்றும் இருக்கிறது. அது வேறொன்றும் அல்ல. மனிதாபிமானம்.
இன்று சுகுமாரனையும், சானையும் வாழ விட வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. இந்தக் கோரிக்கைகளின் பின்புலத்தில் பல நோக்கங்கள் இருக்கலாம். எந்தவொரு நோக்கத்தை விடவும் மனிதாபிமானம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.
மயூரனும், சானும் அவுஸ்திரேலிய பிரஜைகள். மயூரன் லண்டனில் பிறந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வளர்ந்தவர்.
சீனாவில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய தம்பதியின் மகன், சான். இருவரும் நண்பர்கள் என்பதை விடவும் பாலி-நைன் என்றழைக்கப்படும் கும்பலின் அங்கத்தவர்கள் என்பது சாலப் பொருந்தும்.
2005ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவின் பாலி தீவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்த முயன்ற சமயத்தில் கைதானவர்கள். இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2006ஆம் ஆண்டில் இருவருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தம்மீதான தண்டனைகளுக்கு எதிராக இவர்கள் செய்த மேன்முறையீடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை. மேன்முறையீடுகளை இந்தோனேஷிய உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
தமக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு இருவரும் விடுத்த கோரிக் கைகளும் விழலுக்கு இறைத்த நீராகின. இவர்கள் சமர்ப்பித்த கருணைமனுக்களை இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ தள்ளுபடி செய்தார்.
இந்தோனேஷியா என்பது இஸ்லாமியர்கள் செறிந்து வாழும் நாடு. இங்கு போதைப்பொருள் கடத்தல் என்பது பெரும் குற்றமாக கருதப்படுவதில் வியப்பில்லை.
போதைப்பொருள் பாவனை என்ற கொள்ளை நோயில் இருந்து இந்தோனேஷிய சமூகத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்களுக்கு மரணதண்டனை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது விடோடோவின் வாதம்.
ஒரு இறையாண்மையுள்ள தேசத்தின் ஆட்புலத்திற்குள் எவரேனும் குற்றமிழைத்தால், இந்தத் தேசத்திலுள்ள விதிமுறைகளுக்கு அமைய குற்றவாளிக்கு தண்டனை அளிப்பது தேசத்தின் உரிமை. குற்றவாளி அதே தேசத்தின் பிரஜையாக இருக்கலாம். வேறு நாட்டின் பிரஜையாகவும் இருக்கக்கூடும்.
இது பற்றிய சட்டரீதியான கேள்விகள் எதுவும் கிடையாது.
ஒரு நாட்டில் மரண தண்டனைக்கு உள்ளாகின்ற குற்றவாளி வேறு நாட்டைச் சேர்ந்தவராக இருக்கையில், சில இராஜதந்திர ரீதியான சிக்கல்கள் எழுகின்றன.
ஒரு நாட்டிற்குரிய நீதித்துறையின் நியாயாதிக்கம் என்பதைத் தாண்டி, இரு நாடுகளுக்கு இடையிலான கௌரவம் என்ற பிரச்சினையும் தலைதூக்குகிறது. இது தீவிர பின்விளைவுகளுக்கும் வித்திடுகிறது.
இன்று இந்தோனேஷியாவிற்கும், அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர நெருக்கடிகள் தீவிரம் அடைந்திருப்பதற்கு இதுவே காரணம். (15ஆம் பக்கம் பார்க்க)
மரணத்தின் வாசலில்….
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை அனுசரிக்கும் இந்தோனேஷிய அரசாங்கம் கடந்த வாரம் ஆறு பேர் மீதான மரணதண்டனையை நிறைவேற்றியது. இவர்களில் ஐந்து பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் இவர்களில் பிரேஸில், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள்.
மரண தண்டனைக்காக காத்திருப்பவர்களின் பட்டியலில், மயூரன் – சான் ஆகியோரது பெயர்கள் மாத்திரமன்றி, 60 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா, பாகிஸ்தான் முதலான 18 நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
தமது பிரஜைகள் மீதான மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை குறித்து பிரேசிலும், நெதர்லாந்தும் ஆத்திரத்தை வெளிப்படுத்தின. தமது தூதுவர்களையும் திருப்பி அழைத்திருந்தன.
பிரேசிலைச் சேர்ந்த பிரஜையொருவருக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் வெளிநாடொன்றில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல் தடவை என்பதன் மூலம், பிரேஸிலின் ஆத்திரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
மயூரன், சான் விவகாரம் அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் ஒரு கௌரவப் பிரச்சனை தான். இருந்தபோதிலும், இவர்கள் இருவருக்காகவும் ராஜதந்திர உறவுகளை தாரை வார்க்க வேண்டுமா என்ற கேள்வியும் அவுஸ்திரேலிய ஆட்சியாளர்கள் மத்தியில் இருக்கிறது.
அவுஸ்திரேலியாவும், இந்தோனேஷியாவும் அயல்நாடுகளாக இருப்பது இதற்குக் காரணம்.
இந்தோனேஷியாவின் முன்னாள் ஜனாதிபதியை அவுஸ்திரேலிய உளவு பார்த்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், இந்தோனேஷியாவில் இருந்து அவுஸ்திரேலியாவை நோக்கிப் படையெடுக்கும் அகதிப் படகுகளை திருப்பி அனுப்பியமை போன்ற விவகாரங்களின் அடிப்படையில் இவற்றிற்கு இடையிலான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இந்த உறவுகள் சீரடைந்து வரும் சமயத்தில், மயூரன் – சான் விவகாரத்தைக் கையாள்வதற்காக அவுஸ்திரேலியத் தலைவர்கள் கடுமையான நிலைப்பாட்டை அனுசரிப்பார்களா என்பது சந்தேகமானது தான்.
மயூரன் – சான் விவகாரத்தில் ராஜதந்திர ரீதியில் முடிந்தளவு கடுமையான முறையில் முறையிடப் போவதாக பிரதம மந்திரி ரோனி அபொட் உறுதியளித்திருந்தாலும், தாம் இந்தோனேஷியாவுடனான உறவுகளை சீர்குலைக்கப் போவதில்லையெனக் கூறியிருப்பதை சுட்டிக்காட்டலாம்.
அவுஸ்திரேலிய பிரதமரின் நிலைப்பாடு எதுவாக இருந்தபோதிலும், மயூரன் – சான் விவகாரத்தை மனிதாபிமான கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டுமென்ற அழுத்தம் தீவிரம் பெற்றுள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது.
தமது கருணை மனு நிராரிக்கப்பட்டதாக தகவல் அறிவிக்கப்பட்ட சமயம் மயூரன் முன்வைத்த கேள்விக்கு இன்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் முன்னுரிமை அளித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
தம்மைக் கொல்வதால் கிடைக்கக்கூடிய பயன் என்னவென மயூரன் கேட்டிருக்கிறார்.
மயூரனின் கேள்வியில் நியாயம் இருக்கிறது. தமது 25ஆவது வயதில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, கடந்த எட்டு வருடகாலம் மரணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதை விடவும் கொடுமையான தண்டனை வேறெதுவும் இருக்கிறதா? இந்தக் கேள்விக்கான விடையை ஆத்மார்த்தமாக ஆராய்ந்தால், மயூரனைப் புரிந்து கொள்ளலாம்.
மறுபுறத்தில், மயூரன் என்ற மனிதர்; தமது குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார். தாம் மரணத்தை எதிர்;பார்த்துக் காத்திருந்த ஒவ்வொரு கணத்தையும் பயனுள்ள வகையில் பயன்படுத்தியுள்ளார்.
தற்காப்புக்கலையில் வல்லுனராகத் திகழ்ந்த மயூரனை சிறைவாழ்க்கை தலைசிறந்த படைப்பாளியாக மாற்றியுள்ளது. இந்த மனிதரை சிறையில் சந்தித்த அவுஸ்திரேலிய ஓவியர் ஒருவர், இவரின் படைப்பாற்றலைக் கண்டு வியந்திருக்கிறார்.
தமது உள்ளக்கிடக்கையைப் படைப்புகளாக வெளிப்படுத்துவதுடன் மாத்திரம் நின்று விடாமல், சக கைதிகளையும் நல்வழிப்படுத்துவதில் மயூரன் வெற்றி கண்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
எந்த வகையில் நோக்கினாலும் மயூரன் வாழ வேண்டியவர். கொடுமையான முறையில் நிகழக்கூடிய மரணதண்டனையில் இருந்து மயூரனைக் காப்பாற்றுவதன் மூலம் தீர்ப்புக்களைத் திருப்பி எழுத முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு இந்தோனேஷிய அரசாங்கத்திற்கு உள்ளது.
தீர்ப்புக்களைத் திருப்பி எழுதுமாறு அழுத்தம் தொடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் முடியாவிட்டால், மனிதநேயத்தை விரும்பும் சக்திகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டு அந்தக் காரியத்தை சாதிக்க முடியும்.
உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் ஒன்று கூடினாலே போதும்.
சர்வதேச தகவல் வலைப்பின்னலால் பிணைக்கப்பட்ட சமகால உலகில் அதற்குரிய வசதிகளும், கருவிகளும் சாத்தியமே.
– சதீஸ் கிருஸ்ணபிள்ளை-