பெங்களூர்: பெங்களூரில் குழந்தை கறுப்பாக பிறந்த காரணத்தினால் மனைவியைக் கொடுமை படுத்தி குழந்தைக்கு பால் கொடுக்க விடாமல் தடுத்த கணவரிடமிருந்து நீதிமன்றம் மனைவிக்கு விவாகரத்து அளித்துள்ளது.
டெல்லியில் தொழிலதிபர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கணவன், மனைவி. இவர்களுக்கு கடந்த 2011 நவம்பர் 9 ஆம் தேதி டெல்லியில் திருமணம் நடந்தது.
கொட்டிக் கொடுத்த பெண் வீட்டார்: கோடிக்கணக்கில் பணம் நகையை வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்திருந்தனர். பல கோடி செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் நடத்தினர்.
பெங்களூரில் குடியேற்றம்: தேனிலவுக்கு சுவிட்சர்லாந்து நாட்டுக்கு அனுப்பினர். பின்னர் தம்பதியினர் பெங்களூரில் குடியேறினர். கணவன் ஹெச்.ஏ.எல் இரண்டாவது ஸ்டேஜில் சொந்தமாக தொழில் துவங்கினர்.
மீண்டும் வரதட்சணை: சில மாதங்களிலேயே பெண்ணின்தந்தை உயிரிழந்தார். அப்போது மனைவி வீட்டாரிடம் 20 லட்சம் ரூபாயை கணவன் பெற்று கொண்டார்.
கடும் சித்ரவதை: வரதட்சணையாக பணம் கேட்டு மனைவியை கடும் சித்ரவதை செய்துவந்தார். இதற்கிடையே அப்பெண் கர்ப்பம் அடைந்தார்.
கறுப்பாக பிறந்த குழந்தை: கணவன் வீட்டார் அவரை சரியாக கவனிக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை கறுப்பாக இருந்ததை காரணமாக காட்டி உடல் மன ரீதியாக மனைவியைக் கொடுமைப்படுத்தினர்.
தாய்ப்பால் கொடுக்கத் தடை: குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட விடாமல் பிரித்து வைத்து கொடுமைப்படுத்தினர். இதனால் வேதனை அடைந்த அப்பெண்மணி விவாகரத்து கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
விவாகரத்து அளித்த கோர்ட்: இருவருக்கும் கவுன்சலிங் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. சேர்ந்து வாழ இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து கோர்ட் விவாகரத்து அளித்தது. அத்துடன் ஒன்றரை வயதான குழந்தை 18 வயது நிறைவடையும் வரை தாய் பராமரிப்பில் இருக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.