இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு எமது நாட்டில் தயாரிக்கப்படும் கோவணம் மற்றும் கைக்குட்டைகளை விற்பனை செய்ய முடிந்தால், அது நாட்டுக்கு நன்மையான நிலைமையை ஏற்படுத்தும் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எட்கா உடன்படிக்கையை இலங்கை மிகவும் சாதகமான முறையில் தயாரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எட்கா உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, வாத விவாதங்களை நடத்தி, மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, மாற்றங்களை செய்ய வேண்டுமாயின் மாற்றங்களை செய்து அதனை அமுல்படுத்துவோம்.
இந்தியா போன்ற பெரிய நாடு இலங்கை போன்ற சிறிய நாட்டில் வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொள்வது போன்றவை தொடர்பான தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது.
இலங்கை போன்ற சிறிய நாட்டிடம் இருந்து இந்தியா போன்ற நாடு பெற்றுக்கொள்ளக் கூடிய நன்மை மிக சொற்பமே. எனினும் இந்தியா என்பது பிராந்திய வல்லரசு என்பதால், பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவது உண்மைதான்.
இதன் காரணமாக இலங்கை சீனா, பாகிஸ்தான்,அமெரிக்கா போன்ற நாடுகள் பக்கம் ஆழமாக கால்பதிப்பது தொடர்பில் இந்தியா குழப்பமடையும்.
எமது மொழி, மதம், உறவுமுறைகள் போன்றன இந்தியாவில் இருந்தே வந்தன என்பதால், பிராந்திய வல்லரசான இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வது எந்த வகையில் பார்த்தாலும் நன்மையானது எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.