பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் வீட்டிற்கு சென்று பதவியிலிருந்து விலகுமாறு தான் மிரட்டியதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது. அவரின் அழைப்பினை ஏற்றே நான் அவரது வீட்டிற்கு சென்றேன்.
அவர் எனது நீண்ட கால நண்பர் என மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்தார்.
தற்போதைய நீதியரசர் சட்டத்திற்கு முரணாக நியமிக்கப்பட்டவர். அவரை பதவியிலிருந்து நீக்க அதிகாரம் உண்டு எனவும் சுட்டிக்காட்டினார்.
அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கு அவர் மேலும் விளக்கமளிக்கையில்,
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை தான் அவரது வீட்டிற்கு சென்று மிரட்டியதாகவும் உடனடியாக பதவியிலிருந்து விலக கோரியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக நான் அறிந்தேன்.
இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அவர் எனது நீண்ட கால நண்பராவார். அவர் தனது தொலைபேசியினூடாக விடுத்த அழைப்பின் பிரகாரமே விஜேராம பிரிவிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றேன்.
அங்கே சென்ற வேளை அறிமுகமில்லாத சட்டத்தரணிகள் பலர் அவரது வீட்டில் ஒன்று கூடி இருந்தனர்.
நிதியரசர் மொஹான் பீரிஸ் சென்ற வாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான சந்திப்பில் தனக்கான ஓய்வூதியத்தையும் உத்தியோகபூர்வ வீடும் வெளிநாட்டு தூதுவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தமையையடுத்து அதற்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார்.
எனினும் மறுநாள் இராஜினாமா செய்ய முடியாது என கூறினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டில் சந்தித்த வேளையில் அந்த கோரிக்கையையே என்னிடம் முன்வைத்தார். மேலதிகமாக ஓகஸ்ட் மாதம் வரை தான் பதவியிலிருக்க விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் இது தொடர்பில் பேசி தீர்வினை பெற்றுத் தருவதாக கூறி வீட்டிலிருந்து வெளியேறினேன்.
ஆனால் நேற்று காலை எனக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நான் அவரை மிரட்ட சென்றதால் என்னை அவரது வீட்டு பாதுகாவலர் வீட்டினுள் நுழைய அனுமதி அளித்திருக்கமாட்டார். இவையனைத்தும் அவர்களது அருகில் இருப்போரின் ஆலோசனையாகும்.
தற்போது சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளார். இதன் பிற்பாடு 24 மணி நேரம் வரை ஷிராணி பண்டாரநாயக்கவும் அதன் பிற்பாடு ஸ்ரீபவன் நீதியரசராக நியமிக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில் மைத்திரி ஆட்சியில் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய நிலைமையை தோற்றுவித்துள்ளோம். தற்போது ராஜபக்ஷ குடும்பத்தினரால் விரயமாக்கப்பட்ட பணம் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் சலுகையாக வழங்கவுள்ளோம்.
எனவே ஜனாவரி 8 ஆம் திகதியே சுதந்திரம் இந்நாட்டு மக்களுக்கு கிடைத்தது. எனவே உண்மையான சுதந்திர தினமாக ஜனவரி 8 ஆம் திகதி பிரகடனப்படுத்த வேண்டும்.
இந்நிலையில் இந்த ஆட்சி நீதியான நல்லாட்சியாகும். மஹிந்தவின் ஆட்சிக்கும் மைத்திரியின் ஆட்சிக்கும் வேறுபாடுகள் பல காணப்பட வேண்டும். ஊழல் செய்தவர் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர் என்றார்