என்னை விவாகரத்து செய்த பிறகு பொருளாதார ரீதியாக ஜீரோவாக இருந்தேன் என கமல் ஹாஸன் கூறியது தவறு. நிச்சயம் அவரது வீழ்ச்சிக்கு நான் காரணமில்லை, என்று கூறியுள்ளார் வாணி கணபதி.
கமல் ஹாஸனின் முதல் மனைவி வாணி கணபதி. 1978-ல் இருவருக்கும் திருமணம் நடந்தது. 1988-ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
கமல் பேட்டி
சமீபத்தில் ஒரு பேட்டியில், “ஸ்ருதி ஹாஸன் பிறந்த சமயத்தில் நான் எல்லா பணத்தையும் இழந்திருந்தேன். காரணம் வாணியை விவாகரத்து செய்ததற்காக தந்த ஜீவனாம்சம். அதன் பிறகு மீண்டும் ஜீரோவிலிருந்து தொடங்க வேண்டியிருந்தது. குடியிருந்தது கூட வாடகை வீட்டில்தான்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
வாணி கோபம்
இதனைப் படித்து கோபமடைந்த வாணி, இப்போது முதல் முறையாக தன் மவுனத்தைக் கலைத்துள்ளார். கமலின் குற்றச்சாட்டை மறுத்து பேட்டி தந்துள்ளார்.
வாணியின் கேள்விகள்
அவர் கூறுகையில், “இந்தியாவில் விவாகரத்துக்காக தரப்படும் ஜீவனாம்சத்தால் ஒருவர் திவாலாகிவிட முடியுமா? அல்லது விவாகரத்து பெற்ற பெண் வாழ்நாளெல்லாம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு அந்த ஜீவனாம்சத் தொகைதான் கிடைக்கிறதா? இதை நீங்கள் நம்புகிறீர்களா? எந்த இந்திய நீதிமன்றம் பெண்ணுக்கு அந்த அளவு இழப்பீட்டுத் தொகை தரச் சொல்லி உத்தரவிடுகிறது?” என்றார்.
அவருக்கு ஏது சொந்த வீடு?
மேலும் கமல் வாடகை வீட்டில் வசித்ததாகக் கூறியிருப்பது பற்றி வாணி இப்படிச் சொல்கிறார்: “கமல் எப்போது சொந்த வீட்டில் வசித்திருக்கிறார்? திருமணமாகி நாங்கள் வாழ்ந்த பத்தாண்டுகளில் வாடகை வீட்டில்தான் வசித்தோம். எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டில் சில காலம் இருந்தோம்.”
அனுதாபம் தேட... மேலும் அவர் கூறுகையில், “கமல் எப்போதுமே யார் மீதாவது பழி போட முயற்சிப்பவர். எனக்குத் தெரிந்து அவர் ஒருபோதும் திவாலாகிவிடவில்லை. அவரிடம் போதிய பணம் இருந்தது. ஒருவேளை அப்படி ஆகியிருந்தால் அதற்கு நான் காரணமல்ல. வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை,” என்றார்.
நான் அவருடன் பேசுவதில்லை..
இதுகுறித்து கமலுடன் பேசினீர்களா? என்று கேட்டபோது, “இல்லை.. நான் அவருடன் பேசுவதில்லை. பல ஆண்டுகளாகிவிட்டன, கமலுடன் நான் பேசி. ஆனால் கமலின் திறமையை நான் சந்தேகிக்கவில்லை.
தான் திறமைசாலி என்பதற்காக போகிறபோக்கில் யார் மீது வேண்டுமானாலும் பழி போடுவதை அனுமதிக்க முடியாது. மகளிடமிருந்தோ, ரசிகர்களிடமிருந்தோ அனுதாபம் பெற அவர் நினைத்தால், யார் பெயரையும் பயன்படுத்தாமல் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்!” என்றார்.