யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் பெண்ணொருவர் நீண்ட நேரமாக கிணற்றினுள் பதுங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரமாக குறித்த பெண் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
காணிக் கிணற்றினுள் கன நேரமாகப் பதுங்கியிருந்த பெண்; அதிர்ச்சிக் காரணம்!
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
குடும்பத்தின் கஸ்ட நிலை காரணமாக வடமராட்சி பகுதியில் ஒரு குடும்பப் பெண் 3 நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்றிருந்தார். அதற்காக வாராந்தம் பணத்தை செலுத்தி வந்துள்ளார்.
பின்னர் அவரால் தொடர்ந்தும் செலுத்த முடியாமல் போன போது, இரு வாரங்களின் பின்னர் 3 நிதி நிறுவனங்களின் ஊழியர்களும் பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் தகாத வார்த்தைகளை பிரயோகித்து குறித்த பெண்ணைத் திட்டியுள்ளதோடு வீட்டை விட்டு செல்ல மாட்டோம் என கூறி அங்கேயே இருந்துள்ளனர்.
இதானல் பயந்துபோன குறித்த பெண் அருகிலுள்ள காணியில் இருந்த கிணற்றில் இறங்கி பதுங்கி இருந்துள்ளார்.
குறித்த நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு மணி நேரமாகியும் வீட்டை விட்டு செல்லாத காரணத்தினால் அவர் நான்கு மணி நேரமும் கிணற்றுக்குள்ளேயே பதுங்கி இருந்துள்ளார்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னே அவர் வெளியே வந்துள்ளார். இந்த சம்பவம் அப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் மாவட்டம் உள்ளிட்ட வட மாகாணத்தில் நுண் கடன் திட்டங்கள் என்ற பெயரில் சில நிதி நிறுவனங்கள் அப்பாவி மக்களை சிக்கலிலும் கஸ்டத்திலும் ஆழ்த்திவருவது அறிந்ததே.
இந்த திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய மத்திய வங்கி ஆளுநர் குமாரசுவாமி இந்திரஜித், வடபகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார் என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.