ஹட்டன் நோர்வூட் பகுதியில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றி வரும் யுவதிகள் பேய் பிடித்தது போன்று அசைவுகளை காண்பித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் ஒன்று கிடைத்தது. இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (09.10.2017) நடந்தது.
இதுகுறித்து எமது செய்தியாளர் நோர்ட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன் தகவல் வழங்கினார்.
அட்டன் நோர்வூட் ஆடைத்தொழிற்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக திடீர் சுகயீனமுற்று சுமார் 200 இற்கும் மேற்பட்டவர்கள் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
சிகிச்கையின் போது அவர்களுக்கு சுவாச சிரமம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொழிற்சாலையில் காற்றோற்றம் அற்ற நிலையில் யுவதிகள் தொழில் செய்து வந்ததால் போதிய ஒட்சிசன் கிடைக்காமல் சுவாசிக்க சிரமப்பட்டு மயக்கமுற்றனர் என கூறப்பட்டது. சம்பவத்தின் பின்னர் தொழிற்சாலை புனரமைக்கப்பட்டு நல்ல காற்றோட்டமாக தொழிற்சாலை மாற்றப்பட்டது.
ஆனால், இன்று பிரச்சினை வேறுவிதமாக வந்துள்ளது. சுகயீனமுற்று சிகிச்சைப்பெற்றிருந்த பெண்கள் இன்று மீண்டும் பணிக்குத் திரும்பினர்.
வழமைபோலவே வேலைகளை ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் கண்களைப் பெரிதாக்கி, ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்துக்கொள்வதும், கழுத்து பகுதியை இறுக்கி பிடிக்கவும் தொடங்கியுள்ளனர்.
கூடவே கூக்குரல்களும் எழுப்ப ஆரம்பித்தனர். சில அலறல் சத்தங்களும் கேட்டுள்ளன. சிலர் கூச்சிட்டு புன்னகை செய்துள்ளனர்.
அந்தச் சமயத்தில் பணி செய்தவர்களில் சுமார் 20 பெண்கள் இப்படி விசித்திரமாக பாவனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
பயம் கொண்ட ஏனையவர்கள் தொழிற்சாலைக்கு வெளியே ஓட்டம் பிடித்தனர். கூச்சலிட்டவர்கள் மாத்திரம் அவர்களின் அந்த பாவனைகளைத் தொடர்ந்துள்ளனர்.
சாதாரணமாக இருந்தவர்கள் அனைவரும் தொழிற்சாலைக்கு வெளியே வந்ததும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தவர்கள் தொழிற்சாலை முழுவதும் ஓடித்திரிய தொடங்கிவிட்டனர்.
தனது விருப்பதிற்கு சத்தமிட்டு கதைப்பதும், காற்றிடைவெளியில் சைகையில் உரையாடுவதும் புன்னகைப்பதுமாக இவர்களின் செயற்பாடுகள் இருந்துள்ளன.
பெண்களின் விசித்திரமான பாவனைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் நோர்வூட் காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்களும் வரவழைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன. பெண்கள் அனைவரும் பயந்த மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளனர். பின்னர் யுவதிகளுக்கு மனநல சிகிச்சை வழங்க தீர்மானிக்கப்பட்டது.
சம்பவத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என சக ஊழியர்களிடம் பேசக்கிடைத்தது. ஆடைத்தொழிற்சாலைக்கருகில் உள்ள முனீஸ்வர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் வருடந்தோரும் செய்து வந்தோம் ஆனால் அண்மைக்காலமாக முனீஸ்வரர் ஆலய வழிபாடு செய்யாமல் தடைபட்டு விட்டது. இதுதான் இந்த அமானுஷய செயல்களுக்கு காரணம் என உறுதியாக கூறுகின்றனர்.
காவல்தெய்வ வழிபாடுகள் செய்துவரும் பட்சத்தில் அவை இடைநடுவில் கைவிடக்கூடாது என்பதே முன்னோர்களின் ஐதீகமாக இருக்கிறது.
இது ஆவிகளின் தொலையாக இருக்கக்கூடும் என்று ஊர்மக்களில் சிலர் கூறுகின்றனர்.
விடைதெரியாத கேள்விகளை எழுப்பியுள்ள இந்த அமானுஷ சம்பவங்களினால் அந்த ஆடைத் தொழிற்சாலைக்கு வேலை செல்வதற்கு பெண்கள் அஞ்சிவருகின்றனர்.
– நன்றி மலையக குருவி