தமிழக சட்டசபை வரலாற்றில் 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மறக்க முடியாத நாள். தமிழக மக்களுக்கும்தான்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த தி.மு.க அரசுக்கு பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாள். முதல்வராக கருணாநிதி வீற்றிருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா அமர்ந்திருந்தார்.
முதல்வரும் நிதி அமைச்சருமான கருணாநிதி, தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய எழுந்த போது, ‘பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது’ என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் கடுமையாகக் கிளம்பியது.
தன்னுடைய போன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் ‘அதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என்று உரிமை மீறல் பிரச்னையை எழுப்பினார் ஜெயலலிதா.
அப்போது நடந்த களேபரத்தில், பட்ஜெட் உரை கிழிக்கப்பட்டது; கருணாநிதி மூக்கு கண்ணாடி உடைந்தது, ஜெயலலிதா சேலை கிழிந்தது. சட்டசபையோ அமளி துமளி ஆனது. 29 ஆண்டுகள் முடிந்து 30 ஆம் ஆண்டில் இன்று அந்த சம்பவம் அடியெடுத்து வைக்கிறது. அப்போது நடந்து என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.
1989 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை தி.மு.க-விடம் ஒப்படைத்தது. மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளைத் தவிர்த்து 232 தொகுதிகளுக்கு மட்டும் அப்போது தேர்தல் நடந்தது.
150 தொகுதிகளில் தி.மு.க ஜெயித்தது. தி.மு.க 13 ஆண்டு வனவாசத்தை முடித்து ஆட்சி பீடத்தை கைப்பற்றியது. அ.தி.மு.க (ஜெ) அணி 27 இடங்களையும் ஜி.கே.மூப்பனார் தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி 26 இடங்களையும் அ.தி.மு.க (ஜா) அணி 2 இடங்களையும் கைப்பற்றி இருந்தது.
1989 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் கருணாநிதி 3- வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவராக பிப்ரவரி 9 ஆம் தேதி, ஜெயலலிதா பதவி ஏற்றுக்கொண்டார். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்றவர்களோடு அரசியல் செய்த கருணாநிதிக்கு எதிரில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா அமர்ந்தார். பதவி ஏற்றதோடு சரி, அதன்பிறகு சட்டசபைக்கு வருவதையே ஜெயலலிதா தவிர்த்தார்.
இதற்கிடையே, ஜா-ஜெ அணிகள் இணைந்தன. 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு சட்டசபைத் தொகுதி தேர்தல்களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க ஜெயிக்கும் என்று ஆரூடங்கள் சொல்லப்பட்டன.
தேர்தல் தோல்வியில் துவண்டு கிடந்த ஜெயலலிதா, இந்த இரண்டு தொகுதி தேர்தல் பிரசாரங்களுக்கும் போகவில்லை. ஆனால், ‘இரட்டைஇலை’ கிடைத்த மகிழ்ச்சியில் அ.தி.மு.க தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்ததை, வெற்றி சூத்திரமாக மாற்ற வியூகம் அமைத்துக் கொடுத்தார் எம்.நடராஜன்.
மதுரை கிழக்கு தொகுதிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்., மருங்காபுரிக்கு திருநாவுக்கரசர் ஆகியோரைத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்தார்.
தேர்தல் டெக்னிக்குகளை சொல்லிக் கொடுத்தார். தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்து, அ.தி.மு.க ஜெயித்தது. தேர்தல் வெற்றி குறித்து பேச போயஸ் கார்டனுக்கு போன் போட்டார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். போனை எடுத்து பேசியது நடராஜன்.
”அண்ணாச்சி.. நீங்க சொன்ன பார்முலா நல்லா வேலை செய்துடுச்சி. நாம ஜெயிச்சுட்டோம்” என்று உற்சாகமாக பேசினார். இந்த உரையாடலை இவர்கள் இருவரையும் தாண்டி, ‘மூன்றாவது கண்’ ஒன்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் , சட்டசபை பொதுத்தேர்தலில் 232 தொகுதிகளிலும் பிரசாரம் செய்து 27 இடங்களில் வெற்றி பெற்றது, தேர்தல் பிரசாரம் செய்யாமலேயே ஆளும்கட்சியை வீழ்த்தி இரண்டு தொகுதியில் அ.தி.மு.க ஜெயித்தது போன்றவை எல்லாம் ஜெயலலிதாவுக்கு ஒருவித அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
அந்த மன உளைச்சலால் அரசியலை விட்டே அவர் போகப்போகிறார் என்றும் அப்போது சொல்லப்பட்டது. அந்த பரபரப்பான நேரத்தில், தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்று நடராஜன் கையில் கிடைக்க… அந்த கடிதம் உரியவர்கள் கைக்குச் செல்லாமல் தடுத்தார் நடராஜன்.
இந்த தகவல், போலீஸ் உளவுத்துறை மூலம் முதல்வர் கருணாநிதி காதுக்குபோனது. இந்த நிலையில் நடராஜன் கைது செய்யப்பட்டார். எனவே, ஜெயலலிதாவுக்கு நடராஜன் மீது இருந்த வெறுப்பு, அன்பாக மாறியது.
‘நமக்காக இவ்வளவு சோதனைகளை நடராஜன் சந்திக்கிறாரே’ என்று நடரஜான் மீது ஜெயலலிதாவுக்கு பரிவு ஏற்பட்டது. எனவே, பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி கொடுத்து தி.மு.க அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கொந்தளித்ததோடு, ஆளுநரை பார்த்து, நடராஜனை விடுவிக்க முறையிட்டார் ஜெயலலிதா.
இந்நிலையில், தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்றன. டெல்லியில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் காங்கிரஸ்-அ.தி.மு.க கூட்டணிக்கு அச்சாரமிடப்பட்டது.
அப்போது வர இருந்த நாடாளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க-வுடன் சேர்ந்து சந்திப்பது என்று ராஜிவ்காந்தி முடிவு எடுத்து இருந்தார். இந்த புதிய உறவு, அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதாவை உற்சாகப்படுத்தியது.
இந்தச் சூழ்நிலையில்தான், 1989 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி சென்னையில் தி.மு.க அரசை கண்டித்து கண்டனப்பேரணியை ஜெயலலிதா நடத்தினார்.
பேரணியில் போனவர்கள், கருணாநிதியையும், சென்னை போலீஸ் கமிஷனர் துரையையும் கடுமையான திட்டினர். தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர்.
இதற்கிடையில் 23 ஆம் தேதியும் 24 ஆம் தேதியும் நடந்த, அ.தி.மு.க சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில், அன்று நிலவிய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
25 ஆம் தேதி தி.மு.க பட்ஜெட் தாக்கல் கூட்டத்தில் ‘அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்’ என்றும் விவாதித்தனர். பட்ஜெட் அன்று அ.தி.மு.க வினர் கூட்டம் கூட்டமாக கோட்டைக்கு வந்தனர்.
பல கார்கள் புடைசூழ, எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா கோட்டைக்கு வந்தார். சட்டசபையில் தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது மணி 10.50. முன்னரே, அ.தி.மு.க உறுப்பினர்களும் வந்திருந்தனர்.
காலை 11 மணிக்கு சபை கூடியது. சபாநாயகர் தமிழ்குடிமகன், ஒரு திருக்குறளை வாசித்தார். உடனே, சட்டசபை காங்கிரஸ் துணைத்தலைவர் குமரி அனந்தன் எழுந்து, ”ஜெயலலிதா கடிதம் விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் துரை, சபையின் உரிமையை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருகிறோம்’ என்றார்.
அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா எழுந்து, ”முதல்வர் மீதும் போலீஸ் கமிஷனர் மீதும் உரிமை மீறல் தீர்மானத்தை கொடுத்துள்ளேன். எனது டெலிபோன் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.
முதல்வரும் அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். அதற்கான ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறேன்” என்று பேசினார். வழக்கத்துக்கு மாறாக, சஃபாரி உடையில் வந்திருந்த பி.எச்.பாண்டியன் பேசினார்.
அவர், ‘தி.மு.க-வுக்கு ஆதரவாக பேசினார்’ என்று அ.தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநயகர் தமிழ்குடிமகன், ‘பி.எச். பாண்டியன் இருக்கையில் அமர வேண்டும்’ என்று உத்தரவு போட்டுவிட்டு, ‘இங்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமை மீறல் பிரச்னை குறித்து அலசி ஆராய்ந்து வரும் திங்கள்கிழமை பதில் கூறுகிறேன். இப்போது பட்ஜெட் உரையை முதல்வர் வாசிக்கலாம்’ என்று அறிவித்தார். கருணாநிதி பட்ஜெட் உரையை வாசிக்க எழுந்தார்.
உடனே, ஜெயலலிதா குறுக்கிட்டு எழுந்து ஓர் அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார். ”முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அவர் சொன்னவுடன், கருணாநிதி, ‘மைக்’கை தனது கையால் மூடிக்கொண்டு ஏதோ சத்தமாகச் சொன்னார்.
அதைக் கேட்ட, ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார். அ.தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தனர். அ.தி.மு.க உறுப்பினர்கள் சிலர் முன்னேறி சென்று கருணாநிதி கையில் இருந்த பட்ஜெட் உரையை கிழித்தனர்.
அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் கருணாநிதி மூக்குகண்ணாடி உடைந்தது. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து செருப்புகள் வீசப்பட்டன.
அ.தி.மு.க உறுப்பினர்கள் செங்கோட்டையன், அண்ணாநம்பி, திருநாவுக்கரசர், முசிறி தங்கவேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தி.மு.க-வைச் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம், மு.கண்ணப்பன், துரைமுருகன் ஆகியோர் அன்றைய களேபரத்தில் அவரவர் கட்சிகளில் கதாநாயகர்களாக வலம் வந்தார்கள். காயம் காரணமாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு போனார்கள்.
சபையில் இருந்து வெளியேறிய ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ”துரைமுருகன் எனது சேலையை பிடித்து இழுத்து கிழித்தார். அப்போது கீழே விழுந்ததில் எனது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
முதலமைச்சர் கருணாநிதி மிகவும் ஆபாசமாக ஒரு வார்த்தையைச் சொல்லித் திட்டினார். தி.மு.க-வினர் என்னுடைய தலையைக் குறிபார்த்து தாக்குதல் தொடுத்தனர்.
சட்டசபைக் காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார்கள். ஒரு பெண்ணையே, சட்டசபையிலேயே இப்படி அவமானப்படுத்தினார்கள் என்றால் நாட்டு மக்கள் நிலை என்ன..? யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த அரசு நீக்கப்படவேண்டும்” என்று ஆவேசமாக பேட்டி கொடுத்தார்.
இந்த சம்பவங்கள் நடந்து இப்போது, 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2003 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி அ.தி.மு.க ஆட்சியில் பட்ஜெட் விவாதத்தின் போது மீண்டும் அந்த பிரச்னை காரசார விவாதமானது.
அப்போது பேசிய ஜெயலலிதா, ”இதே சட்டசபையில் எம்.ஜி.ஆர் தாக்கப்பட்டார். அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. 1989 ஆம் ஆண்டு சட்டசபையில் துரைமுருகன் என் சேலையை பிடித்து இழுத்தார். என் சேலை கிழிந்துவிட்டது.
அப்போது நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். ஆளும்கட்சியினர் அப்போது என்னிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லை” என்றார்.
துரைமுருகன்: ”நீங்கள் கூறுவது தவறு. நான் உங்களைத் தாக்கவே இல்லை. நீங்கள் கூறும் இடத்தில் இருந்து நான் அதிக தூரத்தில் இருந்தேன்”.
ஜெயலலிதா: ”அங்கே இருந்திருக்கலாம். ஆனால், இடத்தை விட்டு முன்னேறி வந்து என்னைத் தாக்கினீர்கள். அவமானகரமாக நடந்துகொண்டீர்கள். வீரபாண்டி ஆறுமுகம் மேஜை மீது ஏறி என்னை நோக்கி ஓடிவந்தாரே..?”.
துரைமுருகன்: ”கிரிமினல் முதல்வர் என்றும் ‘குத்துங்கடா’ என்றும் நீங்கள்தான் சொன்னீர்கள். எங்கள் தலைவரை அ.தி.மு.க-வினர் உடனே தாக்கினர். அடித்து கண்ணாடியை உடைத்தனர்”.
ஜெயலலிதா: ”நீங்கள் சொல்வது போல் அன்று நான் எதையும் சொல்லவில்லை. கருணாநிதி கண்ணாடியை உடைக்கவில்லை. அன்றும் உண்மைக்கு புறம்பாக பேசினீர்கள். இன்றும் அப்படியே சொல்கிறீர்கள்”.
க.அன்பழகன்: ”அனைவரும் உணர்ச்சிவசப்படக்கூடிய அளவில் உண்மைக்கு மாறான தகவல்களை ஜெயலலிதா தருகிறார். அவர் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை.
அன்று சட்டசபையில் நானும் இருந்தேன். ஜெயலலிதா கூறுவது போல, அன்று எந்த சம்பவமும் நடக்கவில்லை. அன்றைக்கு ஒரு ஆவேசமான சூழ்நிலை நிலவியது அவ்வளவுதான்.
அன்று கருணாநிதி பட்ஜெட் வாசித்த போது, ”டோன்ட் ரீட், யூ கிரிமினல் டோன்ட் ரீட்..” என்று குரல் கேட்டது. அதை யார் கூறினார்கள் என்று நான் கூற விரும்பவில்லை.
அதன்பின்னர்தான் அசம்பாவிதம் நடந்தது. அந்த சம்பவத்தில் தன் கை உடைந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரி அனந்தன் கையில் கட்டு போட்டுக்கொண்டு வந்தார். இன்னும் இரண்டு நாள் கழித்து மற்றோரு கையிலும் கட்டு போட்டிருந்தார். இப்படித்தான் அந்த சமயத்தில் நடந்ததே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை”.
ஜெயலலிதா: ”நான் சொல்வதுதான் உண்மை. என்னை கடுமையாக தாக்கினார்கள்”.
க.அன்பழகன்: நீங்கள் அன்று பதற்றத்துடன் இருந்தீர்கள். நான் அப்படி இல்லை. நேருக்கு நேர் அனைத்தையும் மிக அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் கூறுவது போல எதுவும் நடக்கவில்லை”.
உண்மை உறங்குவது இல்லை..!