அடகுக் கடையொன்றுக்கு தனது குழந்தையுடன் சென்ற ஒரு நபர் குழந்தையை அடகு வைத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என கேட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
புளோரிடா மாநிலத்தின் சரசோட்டா நகரில் கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரிச்சர்ட் ஸ்லோக்கம் என்பவரே தனது பெண் குழந்iயை அடகு வைக்க முயன்றாராம்.
மேற்படி அடகுக் கடையின் உரிமையாளரான ரிச்சர்ட் ஜோர்டான் என்பவர் இது தொடர்பாக கூறுகையில்,
அந்நபர் தனது குழந்தையை மேசை மீது வைத்துவிட்டு ‘இதை நான் அடகு வைக்க முடியுமா?’ எனக் கேட்டார்.
‘இதை அவ்வளவாக பயன்படுத்தவில்லை. ஏழரை மாத வயது. இது எந்தளவு பெறுமதியானது என நீங்கள் எண்ணுகிறீர்கள்?’ என அவர் வினவினார் எனத் தெரிவித்துள்ளார். வேடிக்கையான வீடியோவொன்றுக்காக தான் இவ்வாறு செய்ததாக மேற்படி குழந்தையின் தந்தையான ரிச்சர்ட் ஸ்லோக்கம் பின்னர் தெரிவித்தார்.
எனினும் கடை உரிமையாளரான ரிச்சர் ஜோர்டான் இதை வேடிக்கையாக கருதவில்லை. இது குறித்து அவர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார். அதன்பின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் ரிச்சர்ட் ஸ்லோக்கமின் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். குழந்தையின் நலன் தொடர்பில் சமூக சேவைப் பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டது.
எனினும், ரிச்சர்ட் ஸ்லோக்கமுக்கு எதிராக உடனடியாக குற்றச்சாட்டு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Florida Man Who Tried to Pawn His Infant Son Says He Was Joking—’This Is Not Funny’