மட்டக்களப்பு, வாகனேரி பகுதியில், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் சடலத்தை வைத்து, பிரதேச மக்கள், இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரியும் காட்டு யானைகள் கிராமத்துக்குள் வருவதைத் தடுப்பதற்காக வேலி அமைக்க வேண்டுமனெ வலியுறுத்தியுமே, பிரதேச மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகனேரி சுற்றுலா விடுதி வீதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் குமார் (வயது 34) என்பவர், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, நேற்று (10) மாலை உயிரிழந்துள்ளார்.
இவர், மாடுகளை மேய்த்து விட்டு, பின்னர் வாகனேரி குளத்தில் குளிப்பதற்காக சென்ற போது, குளத்துக்கு வந்த யானையால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வாகனேரி குளத்துக்கு அருகில் காணப்பட்ட சடலத்துக்கு முன்பாக, பொதுமக்கள் கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யானைகளின் தொல்லையில் இருந்து தம்மை பாதுகாக்கும் முகமாக, உடனடியாக வேலி அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் இதன்போது வலியுறுத்தினர்.
வாகனேரி பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்கி இதுவரையில் இருபத்தைந்து பேர் மரணமடைந்துள்ளதாகவும், பல காயமடைந்து காணப்பட்டதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் இரவு எட்டு மணியளவில் வாகனேரி பிரதேசத்தினுள் யானை நடமாட்டமே காணப்படுவதுடன், சன நடமாட்டம் எதுவும் இல்லாமல் மக்கள் பயத்தின் மத்தியில் வீட்டினுள் இருக்க நேரிடுவதாகவும் கூறுகின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் யாரும் வெளிச்சத்தோடு வருகை தந்தால் அவர்களை யானை துரத்துவதாகவும், அவ்வாறு துரத்தியதும் வெளிச்சத்தை விட்டு ஓடினால் அந்த வெளிச்சத்தை தூக்கி கொண்டு யானை வீதியால் வருவதாகவும், மக்கள் பயணிக்கின்றனர் என நினைத்து அதன் அருகே சென்றால் யானை தம்மை தாக்குவதாகவும் மக்கள் தெரிவிப்பதுடன், இதனால் தமது வாகனங்களும் சேதமாக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் மீன் பிடி தொழிலையும், விவசாயத்தையும் நம்பி வாழ்கின்றனர். ஆனால் யானைகளி; நடமாட்டத்தால் எந்த தொழிலும் செய்ய முடியாமல் பெரும் கஸ்டத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே யானை தொல்லையில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக உடனடியான யானை வேலி அமைத்து மக்களை காப்பாற்ற உரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் முன்வர வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.