உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராசனைச் சந்திப்பதற்காக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா பரோலில் வெளியே வந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார்.
சிறைத்தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில், சசிகலாவின் கணவர் நடராசன் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையின் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தனக்கு பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று சசிகலா கர்நாடகச் சிறைத்துறையிடம் மனு அளித்தார்.
முதலில் அவர் அளித்த மனுவில், கணவர் நடராசன் உடல்நிலை குறித்த ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்று கூறி, பரோல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, கணவர் நடராசனின் உடல்நிலை குறித்த விரிவான ஆவணங்களுடன் 15 நாள்கள் பரோல் கோரி அவர் மீண்டும் மனு செய்தார்.
அவரது மனுவை பரிசீலித்த கர்நாடக சிறைத்துறை நிர்வாகம், சசிகலாவுக்குச் சில நிபந்தனைகளுடன் 5 நாள்கள் பரோல் அளித்தது. இதையடுத்து, 233 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் 5 நாள்கள் பரோலில் சசிகலா வெளியே வந்தார்.
பெங்களூருவிலிருந்து காரில் இன்று மாலையே சென்னை வரும் சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் வீட்டில் தங்குகிறார்.
சசிகலாவிற்கு கர்நாடக சிறைத்துறை விதித்த நான்கு நிபந்தனைகள் என்ன?
சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட வி.கே. சசிகலா, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை சந்திக்க 5 நாள் பரோலில் வெளியே வந்துள்ளார்.
படத்தின் காப்புரிமை KASHIF MASOOD
பரோலில் விடுக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு கர்நாடக சிறைத்துறை நான்கு நிபந்தனைகளை விதித்துள்ளது.
1. அவசரகால பரோல் அளிக்கப்பட்டுள்ள காலத்தில் சசிகலாவின் கணவர் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இல்லத்தில் மட்டுமே தங்க வேண்டும்.
2. இந்த அவசரகால பரோலின்போது சசிகலா நடராஜனை சந்திக்கவுள்ள மருத்துவமனையிலோ அல்லது தங்கவுள்ள இல்லத்திலோ எந்த வெளியாட்களையும் சந்திக்க கூடாது.
3. அவசரகால பரோலின்போது சசிகலா எவ்வித அரசியல் அல்லது மற்ற பொது நிகழ்வுகள் அல்லது கட்சி தொடர்பான விவகாரங்களில் பங்கேற்க கூடாது..
4. இந்த ஐந்து நாள் பரோல் காலத்தில் சசிகலா பத்திரிக்கை அல்லது மின்னணு ஊடகம் உள்ளிட்ட எவ்விதமான ஊடகத்தையும் சந்திக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.