கோவையில், பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லும்போது, 20 அடி மரத்தில் இருந்து தவறி விழுந்த கோயில் பூசாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
அய்யாசமி
கோவை பேரூர் அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியில் அய்யாசாமி கோயில் உள்ளது. பழைமை வாய்ந்த இது, ஊர் மக்களின் பொதுக் கோயில்.
இந்தக் கோயிலில், அமாவாசை, பௌர்ணமி நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக, அப்போது, அய்யாசாமி என்பவர் பூஜை செய்வது வழக்கம்.
மேலும், மகா சிவராத்திரியின்போது இரவு பூஜைகள் நடைபெறும். அப்போது நள்ளிரவில் கோயில் மைதானத்தில் அமைக்கப்பட்ட 20 அடி பூஜை செய்த மரத்தின் மீது அமர்ந்துகொண்டு அய்யாசாமி பக்தர்களுக்கு குறி சொல்வார்.
இந்த நிலையில், மகாசிவராத்திரியை முன்னிட்டு இந்த ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றபோது பூஜை செய்யப்பட்ட மரத்தின் மீது ஏறிப் படுத்துக்கொண்டு அய்யாசாமி ஆக்ரோஷமாக பக்தர்களுக்குக் குறி சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவர் எதிர்பாராத விதமாக, திடீரென நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். பக்தர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அய்யாசாமி உயிரிழந்தார். குறி சொல்லிக் கொண்டிருந்த பூசாரி தவறி விழுந்து இறந்ததால், அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர். பூசாரி மரத்தில் இருந்து தவறி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.