முகப்புத்தகம் ஊடாக காதலித்த பெண்னை நம்பி யாழ்ப்பாணம் வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவர் 55 இலட்சம் ரூபாய் பணம் நகை என்வற்றை பறிகொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணை நம்பி யாழ்ப்பாணம் வந்தவர், பணத்தை பறிகொடுத்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது, வவுனியாவில் வாழ்வதாக கூறி முகப்புத்தகம் ஊடாக ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவரை குறித்த பெண் காதலிப்பதாக கூறி முகநூலில் கதைத்து வந்துள்ளார்.
அதனை நம்பி குறித்த புலம்பெயர் தமிழர் கோப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த தை மாதம் வந்துள்ளார். அவருடன் அவருடைய முகப்புத்தக காதலியும் வந்து ஒரே வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
இவ்வாறு 14 நாட்கள் கடந்த பின்னர் திடீரென ஒருநாள் முகப்புத்தக காதலி வீட்டிலிருந்த பணம், நகைகள் மற்றும் பொருட்கள் என சுமார் 55 இலட்சம் ரூபாயினை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிவிட்டார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் குறித்த பெண் முல்லைத்தீவை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பான விபரங்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தமிழர் தெரிவித்துள்ளார்.