போராட்ட இயக்கங்களை தீண்டதகாதவர்கள் என எவரும் கூறமுடியாது. அவ்வாறு கூறுபவர்களை தமிழின துரோகிகள் என கூறுவோம் என வடமாகாண சபை உறுப்பினர். எம்.கே சிவாஜிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆயுத குழுக்களுடன் சார்ந்து செயற்பட முடியாததால் தான் தமிழரசு கட்சியுடன் சார்ந்து நிற்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக தனது கருத்தினை சிவாஜிலிங்கம் தெரிவிக்கும் போதே அவ்வாறு கூறினார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (07) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வல்வெட்டித்துறையிலே பிரபாகரன் மாவீரன் என்று கூறியவர் அக் காலப்பகுதியில் எம்முடன் சேர்ந்து போட்டியிட்டவர் இன்று ஆயுத குழுவுடன் சார்ந்து செயற்பட முடியாது என கருத்து தெரிவிக்கின்றார்.
வடமாகாண சபையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் 30 உறுப்பினர்களில் 13 உறுப்பினர்கள் முன்னாள் ஆயுத போராட்ட குழுக்களை சார்ந்தவர்களே. ஈ.பி.ர்.எல்.எப்பை சேர்ந்த 6 உறுப்பினர்கள் ரெலோவை சேர்ந்த 5 உறுப்பினர்கள் புளோட்டை சேர்ந்த 2 உறுப்பினர்களின் ஆதரவுடனயே விக்னேஸ்வரன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.
தற்போது ஆயுத குழுக்களுடன் சார்ந்து செயற்பட முடியாது எனின் வடமாகாண சபையில் உள்ள முன்னாள் ஆயுத போராட்ட குழுவை சேர்ந்த 13 உறுப்பினர்களின் ஆதரவும் தேவையில்லையா ?
ஆயுத போராட்டம் தொடங்கிய காலப்பகுதி முதல் முன்னாள் தமிழ் அரசியல் தலைவர்கள் அவ் ஆயுத போராட்ட குழுக்களுடன் பகிரங்கமாகவே நல்லுறவை பேணியே வந்தார்கள்.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள நாம் கடந்த 27 வருடங்களுக்கு முன்பே ஆயுத போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம் தற்போதும் எம்மை ஆயுத போராட்ட குழு என்பதை ஏற்க முடியாது.
தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட எந்தவொரு ஆயுத போராட்ட குழுக்களும் தீண்டத்தகாதவர்கள் அல்ல. இந்த ஆயுத போராட்ட குழுக்களை சேர்ந்த 30 ஆயிரம் போராளிகளின் உயிர் தியகத்தினாலையே இன்று எமது பிரச்சினை சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது.
எங்கள் ஆதரவுடன் எங்கள் தோள் மீது ஏறி நின்று எம்மை தீண்டத்தகாதவர்கள் என்று கூற முடியாது. எமது தேசிய விடுதலை போராளிகளை கொச்சைப்படுத்துபவர்களை நாம் தமிழின துரோகிகள் என கூற வேண்டிய நிலைக்கு எம்மை தள்ளாதீர்கள்.
இனிவரும் காலங்களில் முதலமைச்சரோ வேறு எவருமோ தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் – என அவர் மேலும் தெரிவித்தார்.