மீண்டும் ஒருமுறை தமிழகத்தின் முதல்வராகும் வாய்ப்பு ஓ.பி.எஸ். என்றழைக்கப்படும் ஓ. பன்னீர் செல்வத்துக்குக் கிடைத்துள்ளது. ஏற்கனவே ஒருமுறை முதல்வராக பணியாற்றும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்திருந்தது. இது இரண்டாவது முறையாகும்.
முதல்வராகும் சந்தர்ப்பம் தமக்குக் கிடைக்காதா? என்று அ.தி.மு.க விலுள்ள பலர் ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பன்னீர்செல்வத்துக்கே மீண்டும் அந்த வாய்ப்பு கிடைத்திருப்பது அவரது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அ.தி.மு.க. வில் பல சிரேஷ்ட தலைவர்கள், அமைச்சர்கள், எம். எல். ஏக்கள் என நிறைய பேர் இருக்கின்றனர். இருந்தாலும் அவர்கள் மீது நம்பிக்கை வைக்காமல் பன்னீர்செல்வத்தின் மீது ஜெயலலிதா நம்பிக்கை வைத்தமைக்கு பல காரணங்கள் இருக்கின்றன.
முதலாவதாக “இந்த முதல்வர் பதவியை பன்னீர்செல்வத்தைத்தவிர வேறு யாராலும் பத்திரமாக பாதுகாத்து தன்னிடம் திருப்பி ஒப்படைக்க முடியாது” என்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்.
2001ஆம் ஆண்டு டான்ஸி பேர ஊழலில் ஜெயலலிதா முதல்வர் பதவியை வகிக்க முடியாமல் போனது. அப்போது முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்திடமே ஜெயலலிதா ஒப்படைத்து விட்டுச் சென்றார்.
அக்காலத்தில், பன்னீர்செல்வம் தனக்கென்று எந்தவொரு சலுகையும் எடுத்துக்கொள்ளாமல் ஜெயலலிதாவின் வழிகாட்டலுக்கமைய ஆட்சி செய்தார். பின்னர் ஜெயலலிதா திரும்பியதும் மறுபேச்சின்றி முதல்வர் ஆசனத்தை வழங்கி மிகவும் நன்றியுள்ள மனிதராக நடந்து கொண்டார்.
சிலவேளை வேறு யாரிடமாவது இந்த பதவி சென்றிருந்தால் அவர் அப்படியே பிடித்துக்கொண்டு ஜெயலலிதாவை வெளியில் தள்ளியிருக்கலாம்.
அந்த நம்பிக்கையில்தான் இரண்டாவது முறையாகவும் முதல்வர் பதவியை பன்னீர்செல்வத்திடம் ஜெயலலிதா ஒப்படைத்திருக்கிறார்.
இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்று ஏற்கனவே ஜெயலலிதாவுக்குத் தெரியுமாம். அவ்வாறு ஒரு நிலைமை ஏற்பட்டால் எவ்வாறான திட்டங்களை முன்வைக்க வேண்டும்? யாரை முதலமைச்சராக நியமிக்க வேண்டும்? என்றெல்லாம் தீர்மானிக்கப்பட்டிருந்ததாம்.
தீர்ப்புக்கு முன்பாக அவசரம் அவசரமாக அமைச்சரவைக்கூட்டம் கூடியது. அப்போது இவைபற்றி தீர்மானிக்கப்பட்டு விட்டதாம்.
டான்ஸி வழக்கில் ஜெயலலிதா குற்றவாளியாகக் காணப்பட்டு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதில் அவர் ஜாமீன் பெற்றிருந்தாலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனடிப்படையில் 2001இல் இடம்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நான்கு தொகுதிகளில் அவர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. எனினும் அவரது கட்சி பெரும்பாலான இடங்களில் வென்றது.
இதனையடுத்து அப்போது தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி தேர்தலின் மறுநாளே ஜெயலலிதாவை அழைத்து முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சட்டவிதிகளை மீறி ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்ததாக ஆளுநர் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை முதல்வராக்கியது செல்லாது என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் பதவிப்பிரமாணத்தையும் இரத்துச் செய்தது.
இந்தத்தீர்ப்பு வெளியான தினத்தன்று மாலை கூடிய அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் “ஓ. பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக நியமிக்கிறேன்” என்று ஜெயலலிதா அறிவித்தார். இந்த அறிவிப்பை யாராலும் நம்ப முடியவில்லை.
காரணம் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்து பின் அவரது எதிரியாக மாறியவரான தினகரனின் ஆதரவாளராகவே ஓ. பன்னீர்செல்வம் இருந்தார். பன்னீர்செல்வம் பெரியகுளம் எம்.எல்.ஏவாக இருந்த அதேவேளை தினகரன் பெரியகுளம் எம்.பியாக இருந்தார்.
எனவே, ஜெயலலிதா தனது எதிரியான தினகரனின் ஆதரவாளரான ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியமை அனைவராலும் நம்ப முடியாத விடயமாக இருந்தது.
பன்னீர்செல்வம் தினகரனுக்கு மட்டும் ஆதரவாளராக இருக்கவில்லை. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா குடும்பத்தினருக்கும் மிகமிக நெருக்கமானவராக இருந்தார்.
இதுவே அந்த சந்தர்ப்பத்தில் பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி கிடைப்பதற்கு காரணமாக அமைந்தது. அப்போது, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஓ. பன்னீர்செல்வம் வருவாய் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக 10ஆவது இடத்தில் இருந்தார்.
எனினும் தன்னை முதல்வராக அறிவித்தபோது ஜெயலலிதாவின் காலில் விழுந்து “அம்மா எனக்கு பதவி வேண் டாம் அம்மா” என மறுத்தார் பன்னீர்செல்வத்தின் இந்த அடக்கமே ஜெயலலிதாவை கவர்ந்தது.
டான்ஸி வழக்கின் மேன்முறையீட்டில் உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்தது. அதனைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்.
அதுவரை மொத்தமாக 162 நாட்கள் முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் ஜெயலலிதாவிடம் முதல்வர் பதவியை ஒப்படைத்தார்.
தான் முதல்வராக இருந்த காலத்தில் முதல்வர் அலுவலகத்தின் முதல்வர் நாற்காலியில் அமராமல் அதனருகில் இன்னொரு நாற்காலியைப்போட்டு அதில்தான் அமர்ந்து பணிகளைச் செய்தார்.
அந்தக்காலப்பகுதியில் ஜெயலலிதா சிறையில் இருக்கவில்லை. வீட்டில்தான் (போயஸ் கார்டன்) இருந்தார். அனைத்து பைல்களையும் ஜெயலலிதாவிடம் காட்டிய பின்பே கையெழுத்து போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சட்டப்பேரவையைக்கூட்டினால் முதலமைச்சரின் நாற்காலியில் அமர வேண்டும் என்பதற்காக சட்டப்பேரவையைக் கூட்டாமலேயே ஆட்சி செய்த முதல்வரும் பன்னீர்செல்வம்தான்.
தற்போதைய சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று ஜெயலலிதா சிறைக்குச் சென்றுள்ளதால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் முறைப்படி ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக தெரிவு செய்யப்பட்டு கடந்த முதலாம் திகதி பதவியேற்றுள்ளார்.
இதில் கவனிக்கக் கூடிய விடயம் என்னவென்றால் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தாலும் ஆட்சியை நடத்தப்போகின்றவர் பன்னீர்செல்வமல்ல. அவர் கையெழுத்து போடுபவராக மட்டுமே இருப்பார்.
ஆட்சியைக் கவனித்துக்கொள்ளப்போவது முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா பாலகிருஸ்ணன். பாதுகாப்புத்துறையை கவனித்துக் கொள்ள நியமிக்கப்பட்டிருப்பவர் முன் னாள் ஐ.பி.எஸ். அதிகாரி நட்ராஜ்.
இந்த இருவரையும் கலந்து ஆலோசனை செய்யாமல் எந்தவொரு தீர்மானத்தையும் பன்னீர்செல்வத்தால் நிறைவேற்ற முடியாது.
இது வலது கையால் கொடுத்து இடது கையால் பறிக்கும் செயல் என்றே கூறலாம். மீண்டும் ஒரு பொம்மை முதல்வராகவே பன்னீர்செல்வம் செயற்படப்போகிறார் என்பது உண்மை. இம்முறை எத்தனை நாட்களுக்கு பன்னீர்செல்வம் முதல்வராக பதவியில் இருக்கப்போகிறாரோ தெரியவில்லை.
ஏனென்றால் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் எந்தவொரு அமைச்சரும் நீண்ட நாட்கள் பதவியில் இருந்ததாக வரலாறு கிடையாது. எல்லோருக்குமே அற்ப ஆயுசுதான்.
ஜெயலலிதா தலைமையிலான அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில் 16 முறை அமைச்சரவை மாற்றப்பட்டிருக்கிறது. திடீர் திடீரென அமைச்சர்கள் மாற்றப்பட்டனர்.
ஒருவரையொருவர் உளவு பார்த்து வழங்கும் தகவல்களை வைத்து அமைச்சர்களை அடிக்கடி மாற்றினார். இறுதியாக கடந்த செப்டெம்பர் 7ஆம் திகதி அமைச்சரவை மாற்றப்பட்டது.
ஜெயலலிதா சிறைக்கு சென்று விட்டார். இனிமேல் சுதந்திரமாக செயற்படலாம் என்று அமைச்சர்கள் நடக்க முடியாது. ஒவ்வொருவரினதும் செயற்பாடுகள் பற்றியும் அவதானித்து தகவல் வழங்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஷீலா பாலகிருஷ்ணன், நட்ராஜ் ஆகியோரின் கண்களிலிருந்து யாரும் தப்ப முடியாது.
வழக்கமாக தமிழகத்தின் பிரச்சினைகள் பற்றி (மீனவர், காவேரி நீர், மின்சார பற்றாக்குறை போன்ற பல) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் அனுப்புவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். அதையே பன்னீர்செல்வமும் முதல்வர் பதவியையேற்றதும் செய்தார்.
மீனவர் கைது விவகாரத்துக்கு தீர்வு காணும்படி பிரதமர் மோடிக்கு முதலாம் திகதி கடிதம் அனுப்பியுள்ளார். இதேவேளை, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
அத்துடன் அமைதி சீர்குலைந்து காணப்படும் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தவேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய முதல்வர் பதவியேற்ற பின் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும் அதுபற்றி கவனம் செலுத்தப்படவில்லை. தொடர்ந்தும் ஆங்காங்கே வன்முறைகளும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
பல்வேறு தரப்பினரும் நடிகர்கள், வைத்தியதுறையைச் சார்ந்தவர்கள், அரச ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் தினமும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்துமாறு ஆளும் கட்சியின் உயர்மட்டத்தினர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அமைதியை நிலை நாட்டி மீண்டும் இயல்புநிலை ஏற்படுத்த ஓ. பன்னீர்செல்வம் முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
– நல்லதம்பி நெடுஞ்செழியன்