நிறைவேற்று அதிகாரத்திற்கும் ஈழக்கோரிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினரையும் தொடர்ந்து சிங்களவர்களையும் ஏமாற்றும் ஜனாதிபதியின் கூற்று அர்த்தமற்றது என்பதுடன், அவர் மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப்போடுவதற்கு முனைகின்றார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்குக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்று முன்தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சில அமைப்புக்களும் தமீழழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவதற்கு தயார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் தானும் இந்த நிறைவேற்று அதிகார முறையை மாற்றுவது தொடர்பில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இக் கூற்று தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமச்சந்திரனிடம் வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து வௌியிடுகையில்,
நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனநாயகத்துக்கு மிகவும் அச்சுறுத்தில் மிக்க அதிகாரமாகும். நிறைவேற்று அதிகர ஜனாதிபதி முறையானது தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் பிரச்சினையான ஒன்றானதாகும்.
அவ்வாறிருக்கையில் தற்போது நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கள் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் மத்தியிலும் மேலெழுந்திருக்கின்றன.
குறிப்பாக இடதுசாரி அமைப்புக்கள், எதிர்க்கட்சிகள், பௌத்த மதத் தலைவர்கள் சிலர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பிலான கலந்துரையாடல்ககளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான நெருக்கடி மிக்க சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ஈழக்கோரிக்கையை முன்வைத்து நிறைவேற்று அதிகாரம் தொடர்பான நெருக்கடியை குறைப்பதற்கு கருதுகின்றார்.
ஒரு நாட்டின் ஜனாதிபதி இவ்வாறு கருத்து வௌியிடுவதானது வேடிக்கையாக விருக்கின்றது. உண்மையிலேயே ஈழக்கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது.
இது வெறுமனே சிங்கள மக்களை திசை திருப்புவதற்காக மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப்போடும் ஜனாதிபதியின் முயற்சியாகும்.
ஆரம்பத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்றினார். தொடர்ந்து கற்றுத்தந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உட்பட ஆணைக்குழுக்களாக நியமித்தும் வாக்குறுதிகளை வழங்கியும் சர்வதேசத்தை ஏமாற்றினார்.
தற்போது சிங்கள மக்களை ஏமாற்றுவதற்கு இவ்வாறு கருத்துக்களை வௌியிட்டுள்ளார். அவர்களை முட்டாள்கள் எனக் கருதி வௌியிடப்பட்ட இவ்வறான கருத்துக்களை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை சிங்கள மக்களே தீர்மானிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
தமிழ் மக்களை பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்பட்டால் அவர்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை என்பது உறுதியானது. அதேநேரம் தமிழர்கள் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்காக மட்டும் குரலெழுப்பவில்லை.
தமது உரிமைகள் அபிலாசைகளை பெற்று பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் தமது சொந்த நிலங்களில் வாழ்வதற்கான உரிய தீர்வையே உரிமையுடன் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் இக்கூற்றானது தமிழர்களின் உரிமைப் போராட்டத்தினை அரசாங்கம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் புடம்போட்டுக் காட்டியுள்ளது. இவ்வாறான நிலையில் இந்த அரசாங்கத்திடம் எவ்வாறு தீர்வை எதிர்பார்க்க முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தனையோ தடவைகள் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தௌிவாக கூறியுள்ளது. அவ்வாறான நிலையில் ஜனாதிபதியால் எவ்வாறு இத்தகையதொரு கூற்றை தெரிவிக்க முடியும்.
ஜனதிபதியும், அரசாங்கத்தின் ஏனைய தரப்பினரும் எத்தனையோ தடவைகள் அமெரிக்க, இங்கிலாந்து, கனடா என விஜயங்களை மேற்கொள்கின்றார்கள்.
அங்கு செல்லும்போது இவ்வாறான கருத்துக்களை வௌியிடுவதில்லை. புலம் பெயர் அமைப்புக்களுடன் அவர்களுக்கு பிரச்சினைகள் காணப்பட்டால் அவர்களுடன் பேசுவதற்கு முன்வரவேண்டும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களை தவிர்த்து விட்டு உள்நாட்டில் இனவாத்தை முன்னிலைப்படுத்தும் கருத்துக்களை முன்வைப்பதானது நல்லிணக்கம் தொடர்பில் பேசும் அரசின் செயற்பாடகவுள்ளது.
ஜனாதிபதியின் கூற்றுக்கள் அர்த்தமற்றவையே. இக்கருத்துக்கள் தொடர்பில் சிங்கள மக்களே தௌிவு பெறவேண்டியவர்களாக உள்ளனர் என்றார்.