கோவை: கோவையில் காதலித்தவனுடன்தான் வாழ்வேன். நீ எனக்கு வேண்டாம், அவனுடன் போய் த்தான் வாழ்வேன் என்று தினசரி கணவரிடம் சண்டை போட்டு வந்த மனைவியை, கனவர் வெறித்தனமாக வெட்டிக் கொன்று விட்டார்.
கோவை மாவட்டம், பிள்ளையார்புரம், அய்யப்பன் வீதியை சேர்ந்தவர் சரவணன் (30). இவருக்கும், ரத்தினபுரியை சேர்ந்த வளர்மதியின் மகள் சத்யபிரியா (27) என்பவருக்கும், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஏழு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
ஆனால் திருமணமானதிலிருந்தே சத்யப்பிரியா கணவருடன் சண்டை போட்டபடி இருந்தார். அவருடன் தினசரி சண்டை பிடிப்பாராம். உங்களுடன் வாழப் பிடிக்கவில்லை. நான் ஒருவரைக் காதலித்தேன். அவருடன்தான் வாழ விரும்புகிறேன்,நீங்கள் வேண்டாம் என்று சண்டை போட்டபடி இருந்துள்ளார்.
இந்த சண்டைக்கு மத்தியில் குழந்தையும் பிறந்துள்ளது. எந்தக் கணவரும் ஒரு மனைவி இப்படிச் சொன்னால் கொடூர வெறியுடன் கிளம்பி விடுவார்கள். ஆனால் சரவணன், மிகப் பொறுமையாக, சத்யப்பிரியாவை சமாதானப்படுத்தி வாழ்ந்து வந்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு, கணவருடன் தகராறு செய்துவிட்டு, ரத்தினபுரி சென்று விட்டார் சத்யப்பிரியா. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, சத்யபிரியாவின் தாய் வளர்மதி தனது மகளுக்கு புத்திமதி கூறி, மகளை சரவணனின் வீட்டில் விட்டுச் சென்றார்.
நேற்று காலை சரவணன் வேலைக்கு சென்றுவிட்டு, மதியம் சாப்பிட வந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களது வீட்டின் அருகே வசிக்கும் சரவணனின் சகோதரி சுகன்யா அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது, கனவன் மனைவி இருவரும் போட்ட சண்டையை பார்த்து குழந்தை அழுததால், அதனை துாக்கிக்கொண்டு, அருகில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும், தனது தாயார் வசந்தாவை கூட்டிக்கொண்டு வரச்சென்றார்.
பின் இருவரும் வீட்டிற்கு வந்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் கொண்ட வசந்தா, கடப்பாரையால் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சமையலறையில் கழுத்தின் பின்புறத்தில் இரு வெட்டுக்காயங்களுடன், ரத்தம் வழிந்தோடிய நிலையில், தலைகுப்புற கவிழ்ந்தவாறு, சத்யபிரியா சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீஸாருக்குத் தகவல் போனது. போலீசார் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், சத்யபிரியா திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்துள்ளார்.
ஆனால், அவரது விருப்பத்துக்கு மாறாக, சரவணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். நேற்று மதியம் நடந்த வாக்குவாதத்தின்போது கூட சத்யபிரியா, உன்னுடன் வாழ பிடிக்கவில்லை.
ஒரு குழந்தையை பெற்றுவிட்டேன். இருந்தாலும், அவனுடன்தான் வாழ்வேன் என கூறியுள்ளார். மனைவி மீது அதிக பாசம் வைத்திருந்த சரவணன், நேற்று மதியம் வீட்டிற்கு வரும்போது, மனைவிக்காக இரண்டு கிலோ ஆப்பிள் வாங்கி வந்துள்ளார்.
ஆனால் அதைக் கூட கண்டு கொள்ளாமல், காதலன்தான் வேண்டும் என்று பிடிவாதமாக பேசிய மனைவியைப் பார்த்துக் கொதித்துப் போன இவர், அரிவாளை எடுத்து மனைவி சத்யபிரியாவை வெட்டி கொலை செய்து விட்டு போய் விட்டார். சரவணனை போலீஸார் தேடி வருகின்றனர்.