சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு பகுதியில் ஷூவுடன் கடந்து சென்ற பொலிஸ் அதிகாரியை தடுத்த மருத்துவரை முதலமைச்சர் ஜெயலலிதா சிறையில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு பகுதியில் காலணியுடன் கடந்து சென்ற பொலிஸ் அதிகாரியை மருத்துவர் கருணாநிதி தடுத்ததாக கூறப்படுகிறது.
இது முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரிய வரவே குறிப்பிட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து 70 வயதான மருத்துவர் கருணாநிதி ஒரு இரவு சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த 2013 ஆம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிரபல தமிழ் நாளேட்டின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை சென்று கண்டு நலம் விசாரிக்கும் பொருட்டு முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அவருடன் பொலிஸ் அதிகாரி ஆசைத்தம்பியும் உடன் சென்றிருந்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவு பகுதியில் முதல்வருடன் சென்ற ஆசைத்தம்பியை, சிவந்தி ஆதித்தனாரின் தனிப்பட்ட மருத்துவர் கருணாநிதி தடுத்ததாக கூறப்படுகிறது. பொலிஸ் அதிகாரி தனது காலணியுடன் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் சென்றுள்ளார்.
இது நோயாளிக்கு கெடுதலை அளிக்கும் என்பதால் மருத்துவர் கருணாநிதி அவரை அப்போது தடுத்துள்ளார். ஆனால் இச்சம்பவத்தை குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி திரித்து கூறி மருத்துவர் கருணாநிதியை கைது செய்ய வைத்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி என்றும் பாராமல் குறிப்பிட்ட மருத்துவர் வசைபாடியாதகவும், தம்மை எட்டித் தள்ளியதாகவும் அந்த பொலிஸ் அதிகாரி புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிந்து மருத்துவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவத்தை அடுத்து தமிழக மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர். மட்டுமின்றி பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு பிரபல மருத்துவர் நோயாளியின் நலன் கருதி கூறிய கருத்துக்கு பொலிஸ் துறை வஞ்சம் தீர்த்துள்ளது எனவும் மருத்துவர்கள் சங்கம் நீதிமன்றத்தில் வாதாடியது.