அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் கால் பதித்த ஒவ்வொருவரின் மனதிலும், முதலமைச்சர் எப்படி இருக்கிறார் என்ற கேள்வியோடு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு எவ்வளவு செலவு ஆகிருக்கும் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது.
செப்டம்பர் 22 ஆம் திகதி உடல் நலக்குறைவால் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 16 நாட்கள் ஆகின்றன.
முதலமைச்சர் ஜெயலலிதா தங்கியுள்ள அப்பல்லோ மருத்துவமனையில், இரண்டாவது தளத்தில் மொத்தம் 30 அறைகள் உள்ளன. முதல் 2 நாட்களுக்கு மற்ற நோயாளிகளும் அதில் இருந்தனர். அதன் பின்னர் அங்கு இருந்த அனைவரும் மாற்றப்பட்டு முதல்வர் மட்டுமே அந்த தளத்தில் இருக்கிறார்.
அவருக்கென தனியாக அறை ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையின் அறை வாடகை பட்டியல்படி பார்த்தால், உயர் ரக அறையான சூட் ரூமின் ஒரு நாள் வாடகை 26,300 ரூபாய்.
இரண்டு சூட் ரூம்களை இணைத்து புது அறையாக மாற்றப்பட்டு இருந்தால் ஒருநாளைக்கு முதல்வர் அறைக்கு மட்டும் 52 ஆயிரத்து 600 ரூபாய் வாடகையாக இருக்கும்.
இதுபோக அந்த தளத்தில் உள்ள மற்ற 28 அறைகளில் 8 அறைகள் பொது வார்டாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. பொது வார்டுக்கு, அறை ஒன்றுக்கு 3,500 ல் இருந்து 5,200 ரூபாய் வரை நாள் வாடகை வசூலிக்கப்படுகிறது.
அடுத்த 10 அறைகள் தனி வார்டுகள் ஆகும். அறை ஒன்றுக்கு ரூ.8,500-ல் இருந்து ரூ.8,800 வரை உள்ளது. அதன்படி 10 நாட்களுக்கு ரூ. 85 ஆயிரம் ஆகிறது.
மீதம் உள்ள அறைகள் மூன்று வகை சூட் ரூம்கள் உள்ளன. அதன் தொடக்க வாடகை 12,500 ரூபாயில் இருந்து 26,300 வரை உள்ளது. மொத்தம் முதல்வர் தங்கிய, தங்காத என அந்த தளத்துக்கான ஒரு நாள் வாடகை மட்டும் 3 லட்சத்து 18 ஆயிரத்து 600 ரூபாய். 12 நாட்களுக்கு 38 லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய் வரை ஆகும் என்கின்றனர்.
இதற்கு முன்பு சிகிச்சை அளிக்க வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்கள், ஒரு முறை அப்பல்லோ வந்து செல்ல 50 லட்ச ரூபாய் வரை வாங்கியதாகக் கூறுகின்றனர்.
இங்கேயே தங்கி சிகிச்சை அளித்தால் அந்த தொகை மேலும் அதிகரிக்கும். முதல்வர் சிகிச்சைக்காக லண்டன் மருத்துவர்கள் இதுவரை 2 முறை வந்து இருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து அவர்கள் விலையுர்ந்த மருந்துகளையும் கொண்டு வந்ததாக கூறுகின்றனர்.
லண்டன் மருத்துவருக்கு முன்பு புகழ் பெற்ற இந்திய மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று வந்து சிகிச்சை அளித்து விட்டு சென்றது. அதேபோல் வெளிநாட்டு மருத்துவர்கள், சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்க, கன்சல்டிங் தொகையாக நிமிடத்திற்கு லட்சங்களில் வாங்குவது வழக்கம்.
முதல்வரின் உடல்நிலை குறித்த ரிப்போர்ட் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களிடம் ஆலோசனை பெறபட்டது.
ஆறாம் திகதி அப்போலோ வெளியிட்டு உள்ள அறிக்கையில், தற்போது இதய, சுவாச ,சர்க்கரை நோய் நிபுணர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறியுள்ளது.
இவர்கள் அனைவருமே உலகில் முதல் நிலை மருத்துவர்கள். இவர்களின் கட்டணங்கள் எல்லாம் மணிக்கு இவ்வளவு என்று தான் வாங்கப்படும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.