கொழும்பு அரசியலில் அண்மைய சில நாட்களாக பரபரப்பான சம்பவங்களும், கருத்துக்களும் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது அவை விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றே கூறவேண்டும்.
அரசியல் ஆர்ப்பாட்டங்கள், பொது கூட்டங்கள், அரசியல் வாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள், கைது நடவடிக்கைகள், இரகசிய சந்திப்புகள், புதிய அரசியல் கட்சி என ஏராளமான விடயங்களுடன் கொழும்பு அரசியல் பரபரப்பாக காணப்பட்டது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதானிகளான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான பனிப்போரும் கொழும்பு அரசியலை இன்னும் பரபரப்பாக்கியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் கருத்து முறண்பாடு காணப்படுவதாக கொழும்பு அரசியலில் பேசப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி அண்மையில் வெளியிட்டிருந்த கருத்து அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலின் போதும், ஜனாதிபதி தேர்தலின் போதும் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் கண்டுபிடிக்கப்படும் என தற்போதைய ஆட்சியாளர்கள் வாக்குறுதி வழங்கியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் புலனாய்வுப் பிரிவு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவு உள்ளிட்ட சுயாதீன குழுக்களை ஏற்படுத்தி கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்றதாக கூறுப்படும் மோசடிககள் குறித்து விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்ந விசாரணை நடவடிக்கைகளின் போது கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டதுடன், சிலருக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குறித்த சுயாதீன குழுக்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுவதாக சந்தேகம் வெளியிட்டுள்ள ஜனாதிபதி, இவ்வாறு இடம்பெற்றால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
பிரதமருடன் இணைந்து சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சும் சேர்ந்து இந்த அரசியல் பழிவாங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதா என சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி தனது உரையினை நிகழ்த்தியிருந்தார்.
இவ்வாறு ஜனாதிபதி கருத்து வெளியிட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி மற்றும் பிரதருக்கும் இடையில் பனிப்போர் மற்றும் அதிகார போட்டி என்பன தற்போது வெளிப்படையாகியுள்ளது.
இந்த விடயம் இருவருக்கும் இடையிலான பனிப்போரரை மட்டும் எடுத்து காட்டவில்லை, மாறாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு காத்திருக்கும் பேராபத்தையும் சேர்த்தே எடுத்து காட்டியுள்ளது.
பிரதமருக்கே ஆபத்தாக மாறாக்கூடிய இந்த நிலையில் அரசியல் தீர்வை எதிர்பார்த்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனவும் கானல் நீராகிபோகலாம் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
எனினும், ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டதன் பின்னர் நேற்றைய தினம் கொழும்பு அரசியல் கொஞ்சம் பரபரப்பாகியிருந்த, அதேவேளை பொலிஸ் நிலையங்களுக்கும் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த அவசர எச்சரிக்கை மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தயிருந்தது. அத்துடன், ஜனாதிபதியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
மறுபுறம் பிரதமருக்கு எதிரான வகையில் ஜனாதிபதி வெளியிட்டிருந்த கருத்துக்கு கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் ஜனாதிபதிக்கு பக்க துணையாக இருக்க போவதாகவும் கூறியுள்ளனர்.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத ஆயுத வியாபாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்கள் விசாரிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கோத்தாபய நீதிமன்றுக்கு அழைக்கப்பட்மையை சுட்டிக்காட்டியே ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் புலிகளை தோற்கடித்த தமக்கு கிடைந்த பரிசு என இந்த விடயத்தினை கோட்டாபய கூறியிருந்தார்.
இது இவ்வாறிருக்கையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சராக இருப்பதற்கு சுதந்திரக் கட்சியினர் விருப்பம் இல்லை என தெரிவித்தும் அண்மைய நாட்களாக கொழும்பு அரசியலில் பேசப்பட்டு வந்தன.
இதன் காரணமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஓரம் கட்டிவிட்டு மைத்திரி தலைமையில் ஆட்சி அமைக்கலாம் என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க செய்தை போன்று தனது அதிகாரத்தை கொண்டு ரணில் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்தி, தேர்தலுக்கான நிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருவாக்க விரும்பியிருக்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் பிரதமர் ரணிலுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டு வரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2016ஆம் ஆண்டின் இறுதியில் அரசியல் தீர்வு என கண்டிருக்கும் கனவு கானல் நீராகி போய்வடும் என்பது மட்டும் நிச்சயம்.