“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எங்கிருந்தோ வருமானம் வருகின்றது என்பதால்தான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமது தலைமையில் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக வடக்கு மாகாண சபையே பொறுப்பெடுத்து நடத்தி வருகின்றது.
அன்றைய காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் பங்குகொள்ளவில்லை. ஆனால், இப்போது வந்து நாங்கள் கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளோம், எம்முடன் இணைய விரும்புபவர்கள் இணையலாம் என்று அறிக்கை விடுகின்றனர்.
இவர்களின் செயற்பாடுகளைப் பார்க்கும்போது மாணவர்களுக்கு எங்கிருந்தோ வருமானம் வருகின்றது. இதனால்தான் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்போல் தெரிகின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் பங்களிப்புச் செய்வது என்றால் ஆரம்பத்திலேயே எம்முடன் கதைத்து ஆலோசனையைப் பெற்றிருக்கலாம்.
அதனை விடுத்து ஊடகங்கள் வாயிலாக நாம் நடத்தவுள்ளோம்; இணைய விரும்புபவர்கள் வரலாம் என்று கூறுவது சரியானதல்ல. எது எவ்வாறாயினும் பல்கலைக்கழக மாணவர்கள் எமக்கு எதிரி அல்ல. எனவே, எம்முடன் சேர்ந்து எப்படிப் பயணிக்க முடியும் என்பதையே அவர்கள் சிந்திக்க வேண்டும்.
வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்பட நான் அவர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்” – என்றார்.
இந்நிலையில் “முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை வடக்கு மாகாண சபை பொறுபேற்று நடத்தக் கூடாது என்று கூறப்படுவதற்கு பின்னால் அரசியல் சக்திகள் உள்ளனவா?” என்ற கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிக்கும்போது, “வடக்கு மாகாண சபைக்கு எதிராகச் செயற்படுகின்றனர் என்றால் இதுவரைக்கும் எத்தனையோ பேர் மாகாண சபைக்கு எதிராகச் செயற்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவராக யாராவது செயற்படக் கூடும். இவற்றை எல்லாம் நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.