தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மணிராஜ் என்ற இளைஞரும் ஒருவர். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் மணிராஜின் மரணம் அவரது குடும்பத்தை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
தூத்துக்குடி தாமோதர நகரில் காவல்குடியிருப்புக்கு எதிரே எலக்ட்ரிகல் கடை நடத்தி வந்தவர் மணிராஜ். கடந்த பிப்ரவரியில் இவருக்கும் அனுஷியா என்ற பெண்ணுக்கும் திருமணமானது.
2 மாத கர்ப்பிணியான மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பியிருந்ததால், அடிக்கடி அங்கு சென்று பார்த்துவந்த மணிராஜ் கடந்த 22 ஆம் தேதியும் மனைவியை பார்க்கச் சென்றபோதுதான் துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகிவிட்டார்.
மூப்பின் தள்ளாமையில் மகனின் இறப்பு தந்தையை வேதனையில் தள்ளியுள்ளது.
மணிராஜ் கொல்லப்பட்ட தகவல் அறிந்து சென்ற சகோதரர்கள், மருத்துவமனையிலும் காவல்துறையின் தடியடிக்கு ஆளானதாகவும், அந்தக் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் வேதனையுடன் கூறுகிறார்கள்.
மணிராஜின் திருமண ஆல்பமோ, திருமண வீடியோவோ கூட இன்னும் கைக்கு வரவில்லை. அதற்குள் இப்படி ஒரு கொடூர முடிவுக்கு ஆளாகிவிட்டார். வாழ்க்கைப் பயணத்தில் அடியெடுத்து வைத்த இந்த இளைஞருக்கு நேரிட்ட மரணம் அவரது குடும்பத்தினரை தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.