இன்றோடு ஒரு மாதமாகிறது!. 1984ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போலோவில் ஒரு மாதம் வரை சிகிச்சைக்காகத் தங்கி இருந்தார்.
அவருக்கு அடுத்து நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெரும் தமிழக முதல்வர் ஜெ., தான்.
கடந்த செப்22ல் அப்போலோவின் விவிஐபி-க்களுக்கான அறை எண் 2008ல் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அது தொடங்கி, அவருக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, நாட்பட்ட சர்க்கரை வியாதி, நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, சுவாசப் பிரச்னை, இதயம் சார்ந்த நோய் என்று பல்வேறு செய்திகளைத் தன் அறிக்கை வழியாகப் பகிர்ந்து வருகின்றது அப்போலோ.
அது தொடர்பான சிகிச்சைகளுக்காக லண்டன், சிங்கப்பூர் மற்றும் டெல்லியிலிருந்து நிபுணத்துவம் பெற்ற பல டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த அக்டொபர் 10ல் ஜெ., நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தங்கியிருக்க வேண்டும் என்ற செய்தியுடன் தனது அறிக்கைப் படலத்தைத் தற்காலிகமாக முடித்துக்கொண்டது அப்போலோ.
நீண்ட நாட்கள் என்பது எத்தனை நாள் என இறுதி செய்யப்படாத நிலையில் முதல்வரது அப்போலோ வாசம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. முதல்வருக்கு உடலில் இதுதான் சிக்கல் என்று இன்றளவும் எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை.
இந்நிலையில் ஜெ. வின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, உட்கார்ந்திருக்கிறார்.
மயக்க நிலையில் வைத்திருக்க மருந்துகள் எதுவும் தரப்படவில்லை, இது அவரது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பெரிய முன்னேற்றம் என்கிற தகவல்களை மருத்துவமனை வட்டாரங்கள் பகிர்ந்துள்ளன.
மேலும் அவர் நுரையீரல் நீர் வீக்கத்திற்காகத்தான் மருத்துவமனையில் தங்கி நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்துவருகிறார்.
தற்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குழு, மருந்தின் அளவுகளில் மாற்றம் கொண்டுவந்துள்ளதால்தான் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.
அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் மருத்துவர்கள் வட்டாரமே இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
பல்மனரி எடீமா என்றால் என்ன?
பல்மனரி எடீமா (Pulmonary Oedema) எனப்படும் இந்நோய் நுரையீரலின் சுவாசப்பைகளில் அதிகமான நீர்க்கோர்ப்பு ஏற்படுவதால் உண்டாகிறது.
இதயத்திலிருந்து ரத்தம் எடுத்துச் செல்லும் வால்வுகளில் பழுது ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடு பாதிக்கும்.
அதன் காரணமாக சுவாசப்பைகளில் திரவங்களின் சேர்மாணம் ஏற்படும். அது சுவாசத்தைக் கட்டுப்படுத்தும். நுரையீரலை வீக்கப்படுத்தும்.
வாழ்வினுடைய செயல்பாடுகளை சரிசெய்வது மட்டுமே இதற்கான சிகிச்சை முறை. திடீரென அதிகமாக வியர்ப்பது, மூச்சுப் பிரச்னை, சில நேரங்களில் இருமல் ஏற்படும்போது ரத்தம் கசிவது, சருமம் வெளுத்துப்போவது இவை தவிர கால்கள் வீங்கி கொள்வது, கல்லீரல் வீக்கம், மூச்சு விடும்போது ஒரு விதம் சத்தம் ஏற்படுவது, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும்.
இந்நிலையில், நேற்று வெளியிட்ட அறிக்கையில் அதிதீவிர சிகிச்சைபிரிவு மருத்துவ நிபுணர்கள், நுரையீரல் நோய் நிபுணர்கள், இதய நோய் நிபுணர்கள், மூச்சு பிரச்னைக்கான சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், நீரிழிவு நோய் நிபுணர்கள் மற்றும் ஹார்மோன் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை குழுவினர் உள்ளடங்கிய மருத்துவர்கள் குழு, முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும் முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா? எப்போது மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார் என்பது போன்ற தகவல்கள் எதுவும் அதில் இல்லை.
நீண்ட நாட்கள் முதல்வருக்கு ஓய்வு தேவை என்று சொல்லி இருந்தார்கள். அது இன்னும் நீண்டபடி..!
-ஐஷ்வர்யா
ஜெ.வுக்கு சிங்கப்பூர் டாக்டர்களின் பிசியோதெரபி எதற்காக? முன்னாள் அமைச்சர் ஹண்டே எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதகாலமாக உடல் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தைக் காண லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.கடந்த 10 நாட்களாக அறிக்கை எதுவும் வெளியிடாத அப்பல்லோ மருத்துவமனை நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ நிபுணர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஊட்டச் சத்து துறையினர் வழங்கும் ஆலோசனையின்படி முதல்வர் உணவு எடுத்து கொள்கிறார்.
முதல்வரின் உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது. அவர் டாக்டர்களுடன் பேசுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஊடகங்களில் இந்த தகவல் வெளியானதில் இருந்தே அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்தும், அவரது உடல்நலத்தில் என்ன பிரச்சினை என்பது குறித்தும், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது பற்றியும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக 10 ஆண்டுகாலம் பணியாற்றிய டாக்டர் ஹெச்.வி. ஹண்டே, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்தும் அவர் குணமடைந்து வருவது குறித்து அளித்த பேட்டி…
முதல்வர் உடல்நலம் எப்படி இருக்கிறது?
முதல்வர் ஜெயலலிதாவிற்கு தற்போது உடல்நிலை சீரான முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அவரது நுரையீரலில் சளி அதிகமாக சேர்ந்திருந்தது. அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரின் பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து 2 பெண் மருத்துவ நிபுணர்கள் வந்துள்ளனர்.
இருவரும் முதல்வருக்கு நல்லமுறையில் சிகிச்சை அளித்து வருவதால் அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நுரையீரலில் இருக்கும் சளியை ஆன்டி பயாட்டிக் மூலம் வெளியேற்றுவதற்கு பதிலாக பிசியோதெரபி அளிக்கும்போது வேகமாக வெளியே வந்துவிடும்.
அதனால் ஆன்டிபயாட்டிக்கின் தாக்குதல் இருக்காது. அத்துடன் நுரையீரலுக்கும் காற்று நன்றாக போகும். முன்பு இருந்த பிரச்சினைகள் அவருக்கு குணமாகிவிட்டது. எங்களுடைய மருத்துவமனையிலும் இதுபோன்ற சிகிச்சைகள் நோயாளிகளுக்கு அளிக்கப்படுவதுண்டு.
அவர்கள் கூறியது எனக்கு திருப்தியாக இருந்தது. ஒரு வாரத்தில் முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
முதல்வர் உடனடியாக பணிக்கு திரும்ப இயலுமா?
எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்த போது அறிக்கைகள் கொடுத்தீர்களே?
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1984ம் ஆண்டு மருத்துவமனையில் இருந்த போது இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் அறிக்கை அளிக்கவில்லை.அப்போது நாவலர் நெடுஞ்செழியன். ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் அரசாங்கத்தை கவனித்துக்கொண்டனர். ஒரு மருத்துவர் என்ற முறையிலும், சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையிலும் நான் அறிக்கைகள் அளித்தேன்.