சொந்த நாடுகளைவிட்டு வெளிநாடுகளில் குடியேறும் மக்கள் அந்த நாட்டின் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறு, விண்ணப்பிக்கையில் பல கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு, சில விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்கப்படும்.
ஆனால், ஸ்விட்சர்லாந்தில் கை குலுக்க மறுத்ததால் ஒரு தம்பதிக்கு குடியுரிமை மறுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள லாசன்னே (Lausanne) நகரில் வசித்துவந்த இஸ்லாமிய தம்பதி, அண்மையில் அந்நாட்டில் குடியுரிமைபெற விண்ணப்பித்திருந்தனர். அவர்களை விசாரிக்க அதிகாரிகள் சென்றுள்ளனர்.
அப்போது, அவர்கள் எதிர்பாலின அதிகாரிகளுக்கு கை குலுக்க மறுத்துவிட்டனர். இதனால், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நகர மேயரிடம் முறையிட்டுள்ளனர் அந்தத் தம்பதியினர். இதன் பிறகு நடைபெற்ற விசாரணையில், எங்கள் வழக்கப்படியே நடந்து கொண்டதாகத் தம்பதி வாதத்தை முன் வைத்தனர். இதையடுத்து, மீண்டும் அவர்களது குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவர்களுக்குக் குடியுரிமை அளிக்க முடியாது என லாசன்னே (Lausanne) துணை மேயர் தெரிவித்துள்ளார்.
இதுபோல், ஸ்விட்சர்லாந்தில் நடைபெறுவது முதல்முறையல்ல. கடந்த 2016-ல் சிரியாவைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு கை குலுக்க மறுத்துவிட்டதற்காக, அவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.