வாசகர்களே,
• மாவிலாறு அணைக்கட்டு விவகாரமே விடுதலைப்புலிகளின் இறுதி முடிவை நோக்கிய விவகாரமாக அமைந்தது.
• ஒரு புறத்தில் பேச்சுவார்த்தைகள் நோர்வே அனுசரணையுடன் நடந்தபோது மறு பக்கத்தில் போருக்கான தயாரிப்புகளும் இரு பக்கத்திலும் நடந்தேறின.
• உலக நாடுகளின் கவனம் இலங்கை அரசின் பக்கம் இருந்ததால் போரை உக்கிரப்படுத்துவதற்கான தருணத்தை அரசு எதிர்பார்த்திருந்தது. இதற்கான வாய்ப்பை புலிகள் தங்கத் தாம்பாளத்தில் கொடுத்தார்கள்.
நீங்கள் இதுவரை நோர்வே அனுபவங்களை படித்ததிலிருந்து சர்வதேச அரசுகள் மிகவும் கவனமாகவே காய்களை நகர்த்தி ராணுவத்தைப் பலப்படுத்தி வந்த நிலமைகளை நீங்கள் ஊகித்திருக்க முடியும்.
இவற்றைப் புலிகள் எதிர்பார்த்திருக்கவில்லை என்ற முடிவுக்கும் எம்மால் செல்ல முடியாது. ஏனெனில் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும், ராணுவத்தைச் சீண்டுவது, கண்காணிப்புக்குக் குழுவின் முயற்சிகளை சிதறடிப்பது, நோர்வேயினதும், இதர நாடுகளினதும் முயற்சிகளைப் பல்வேறு காரணங்களைக் கூறி வீணடிப்பது போன்றன அதன் எதிர் விளைவுகளை அறியாமல் செய்திருக்க முடியாது.
அரசாங்கம் போர் நிலமைகளை 30 வருடங்களுக்கு மேலாக நீடித்துச் சென்றதும், அதன் விளைவாக தமிழ் மக்கள் களைத்து விட்ட நிலமைகளும், அதனைத் தொடர்ந்து சிங்கள அதி தீவிரவாத சிங்கள பேரினவாத சக்திகள் தமது இருப்புகளைப் பலப்படுத்தியதும் தற்செயல் நிலமைகள் அல்ல.
இவை மிகவும் திட்டமிடப்பட்ட தயாரிப்புகளாகும்.
இவ்வாறான புறச் சூழல் தற்போது எழுந்து வருவதும், அதாவது அரசியல் அமைப்பு வழிகள் மூலம் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் பின்னணியில் அதனைத் தடுக்க தமிழ், சிங்கள தரப்புகளில் உள்ள தீவிரவாத சக்திகள் எவ்வாறு செயற்படுகின்றன? என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.
குறிப்பாக அரசியல் அமைப்பு மாற்றத்தில் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் குறித்த விவாதங்கள் நிகழும் வேளையில் சுயநிர்ணய உரிமை என்ற பெயரில், கூட்டமைப்பிற்கு அழுத்தங்கள் வழங்குவது என்ற பெயரில் பேரவைகள் அமைக்கப்படுவதும், அதன் பின்னணியில் அரசியல் ரீதியாக மக்களால் தோற்கடிக்கப்பட்ட சக்திகள் செயற்படுவதும், பொலீசாரினால் சுடப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் விவகாரம் அரசியலாக்கப்பட்டு அதற்குள் அம் மரணங்களின் விசாரணை காணாமல் போவதும் கடந்த கால அரசியல் போக்கினை ஞாபகமூட்டுவதாக இல்லையா?
உணர்ச்சியூட்டப்பட்ட மக்களே விலை கொடுத்தார்கள்.
தற்போதைய சூழலில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு மிகவும் சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை நாம் காணலாம். அவர்களால் மாணவர்களின் மரணங்களை அரசியலாக்க முடியவில்லை.
அரசியலமைப்பு ஏற்பாடுகளைக் குழப்பிச் செல்ல தயாராக இல்லை. மாணவர்களும் அம் மரணங்களை அரசியல்வாதிகளின் கைகளில் ஒப்படைக்க தயாராக இல்லை.
ஆனால் சில அரசியல் சக்திகள் நிலமைகளைத் தீவிரப்படுத்தி அரசியல் லாபம் தேட முயற்சிக்கின்றன.
ஊதாரணமாக மாவிலாறு அணைக்கட்டு விவகாரம் நாலாவது ஈழப் போருக்கு வித்திட்டு சகல வாய்ப்புகளையும் நிர்மூலமாக்கியது போல, அரசியல் அமைப்பு வழிகள் மூலம் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எட்டும் வேளையில் மீண்டும் சயநிர்ணய உரிமைக் கோஷங்கள் எழுப்புவது சிங்கள தேசியவாத சக்திகளுக்கு தீனி வழங்குவது போலாகிறது.
அரசியல் அமைப்பு வழிகளுக்கு தாழ்ப்பாள் போடுவதாகிறது. கூட்டமைப்பின் முயற்சிகளைச் சிதறடிப்பதாகிறது.
வாசகர்களே,
2006ம் ஆண்டு யூலை மாத மூன்றாம் வாரத்தில் வெருகல் ஆற்றுப்படுக்கைக்கு அருகாமையில் வாழும் கிராம மக்கள் அதன் அணைக்கட்டினைப் பூட்டியுள்ளதாக கண்காணிப்புச் செயலகத்திற்கு தகவல்கள் கிடைத்தன.
இவ் அணைக்கட்டு புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த குளத்திலிருந்து நீர் வெளியேறுவதை கட்டுப்படுத்துகிறது.
இக் குளம் அரச கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலுள்ள 15000 குடும்பங்களின் விவசாயத்திற்கு நீரை வழங்குகிறது.
வழமை போலவே இப் பிரச்சனைக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என புலிகள் ஆரம்பத்தில் கையை விரித்தனர்.
பதிலாக அப் பகுதியிலுள்ள உள்ளுராட்சி அமைப்பு தமிழ் மக்கள் வாழும் பகுதியில் தண்ணீர் தாங்கி ஒன்றைக் கட்டித் தருவதாக உறுதி செய்தும் அதனைக் கட்டிக் கொடுக்கத் தவறியதாலும், அப் பகுதியிலுள்ள சிங்கள மக்களுக்கே முன்னுரிமை வழங்கியதாலும் ஏற்பட்ட விரக்தியே இவற்றிற்குக் காரணம் எனக் கூறியது. இவ் விளக்கம் பிரச்சனைக்குரிதாக காணப்பட்டது.
கண்காணிப்புக் குழுவினர் அரச அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அவ் விளக்கத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கவில்லை.
புலிகளும் அரசுடன் மோதுவதற்கான வாய்ப்பான சம்பவமாக அதனைப் பயன்படுத்தினர்.
சகல மக்களுக்கும் நீர் கிடைப்பதை உறுதி செய்தல் என்பது தடுக்கப்படுவது அரசுடன் நேரடி மோதலுக்கான சவாலாகவே காணப்பட்டது.
சகல மக்களுக்கும் நீர் கிடைப்பதை அரசு உறுதி செய்வது அவசியம் என்பதால் அணைக்கட்டினைத் திறப்பதற்கு பலத்தை உபயோகிக்க வேண்டியிருந்ததாக வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர விளக்கமளித்தார்.
ஆனால் அரசு பேசித் திர்ப்பதற்குப் பதிலாக தாக்குதலைத் தேர்ந்தெடுத்து தமது நிலைகளைத் தாக்கி உள் நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ளதாக புலிகள் கூறினர்.
அரச விமானங்கள் மாவிலாறு பகுதியில் யூலை 26ம் திகதி தாக்குதலை ஆரம்பித்தன.
இவை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்னர் இருந்த நிலமைகளை விட மோசமாக இருந்தது.
படிப்படியாக தாக்குதல்கள் அதிகரித்து முழுமையான போருக்கான ஆரம்பமாக அவை காணப்பட்டன.
மரணங்கள் அதிகரித்து போரும் திருகோணமலை மாவட்டம் முழுவதும் தொடர்ந்தது.
ஆகஸ்ட் 1ம் திகதி சம்பூரிலிருந்து சீனன்குடா கடற்படைத் தளத்தை நோக்கி புலிகள் தாக்கினார்கள்.
அதே நேரம் 850 கடற்படையினரை ஏற்றி வந்த கப்பல் மீதான புலிகளின் தாக்குதல் கடற்படையினரின் தலையீட்டால் தவிர்க்கப்பட்டது.
விமானத் தாக்குதல்கள் மட்டக்களப்பு பகுதிக்கும் விஸ்தரிக்கப்பட்டது. புலிகளின் எதிர்ப்புகள் மூதூரை நோக்கி போரைத் திருப்பின. ராணுவம் பல்குழல் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதால் போரின் தன்மை மிக உக்கிரமாகியது.
புலிகளால் இவற்றிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
மாவிலாறு அணைக்கட்டு விவகாரம் முக்கிய பிரச்சனையாக மாறிய வேளையில் அவற்றைப் பேசித் தீர்க்கும் பொருட்டு நோர்வே விசேட தூதுவர் இலங்கை வந்திருந்தார்.
சமாதான செயலகத்தின் முக்கிய அதிகாரியான பாலித கோகனவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும், புலிகளுடன் சோல்கெய்ம் நடத்திய பேச்சுவார்த்தைகளும் மனிதாபிமான அடிப்படையில் அணைக்கட்டைத் திறக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இப் பிரச்சனையில் நோர்வே விஷேட தூதுவர் கன்சன் போவர் கிளிநொச்சியில் பிரபாகரனைச் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து தெரிவிக்கையில்..
“தனது வாதங்களைக் கேட்டபின் பிரபாகரன் அணைக்கட்டைத் திறக்க சம்மதித்ததாகவும், தாம் அதனை மங்கள சமரவீரவிற்கும், கண்காணிப்புக் குழு தூதுவருக்கும் தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்த அவர் இச் சம்பவங்களிற்கு சில காலத்தின் பின்னர் அரச தரப்பினர் இச் செய்தி தமக்கு கிடைக்கவில்லை எனவும் அதனால் தாம் தாக்குதலைத் தொடர்ந்ததாகவும் பாசாங்கு காட்டினர் என்றார்.
ஆனால் இச் சம்பவங்கள் குறித்து கண்காணிப்புக் குழுத் தலைவரின் (General Henricsson) அனுபவம் வேறு விதமாக அமைந்திருந்தது.
புலிகள் அணைக்கட்டைத் திறக்க சம்மதித்ததைத் தொடர்ந்து புலிகள் தரப்பினருடன் தாம் அணைக்கட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது பாலித கோகன தொலைபேசி மூலம் அழைத்து அங்கு விரைவில் சரமாரியாக எறிகணைகள் ஏவப்படும் என்பதால் அங்கு செல்ல வேண்டாமெனக் கூறினார்.
அப்போது தாம் நீங்கள் விரும்பினால் போரை ஆரம்பிக்கலாம். ஆனால் நாம் எங்கே நிற்கிறோம் என்பதும், நாம் எதற்காக அங்கு நிற்கிறோம் என்பதும் உங்களுக்குத் தெரியும் எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.
அப்போது அவர்கள் அணைக்கட்டிலிருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தனர்.
கண்காணிப்புக் குழுத் தலைவர் கென்றிக்ஸனின் ( General Henricsson) பிரதான குற்றச்சாட்டு என்னவெனில் தானும், புலியைச் சார்ந்த சிலரும் அங்கு நிற்பது தெளிவாக தெரிந்து கொண்டும், இவ்வாறு நடந்துகொண்டது பிரச்சனையைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதற்கு அரசு தயாராக இல்லை என்பதையும், பலத்தை உபயோகிக்கவே எண்ணினர் எனவும் அதுவே இறுதியில் நடந்தது எனவும் தெரிவித்தார்.
இரண்டு நாட்களின் பின்னர் புலிகள் அணைக்கட்டைத் திறந்தபோதும் ராணுவத்தின் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. பதிலாக முன்னேறியது.
மாவிலாறு சம்பவங்கள் தொடர்பாக பாலித கோகன இன் அனுபவங்கள் பின்னர் இவ்வாறு இருந்தன.
ஜெனரல் கென்றிக்ஸன் ( General Henricsson) அங்கு நின்று தன்னுடன் தொடர்பு கொண்டார் எனவும், அவர் வெறும் ராணுவ அதிகாரி மட்டுமல்ல துடிப்பான செயற்பாட்டாளரும் கூட என்றார். தொடர்ச்சியாக என்னுடன் தொடர்புகொண்டு உங்களுடைய ஆட்கள் சுடுவதை நிறுத்தம்படி கூறுங்கள் எனக் கூறியபோது,
புலிகள் அங்கிருந்து வெளியேறினால் தாக்குதலை அவர்களும் நிறுத்துவார்கள் எனத் தான் தெரிவித்ததாக கூறினார். அதன் பின்னர் திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலம் தாக்குதல்கள் நடந்தன.
அத் தருணத்தில் புலிகள் மூதூரிலிருந்து முஸ்லீம் மக்களை துரத்தி தாம் அங்கு தங்கினர். பின்னர் ராணுவம் மீண்டும் அப் பகுதியைக் கைப்பற்றியது.
மூதூரை ராணுவம் கட்டுப்படுத்தியிருந்த வேளையில் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் திகதி கோதபயவைச் சிறப்புத் தூதுவர் சந்தித்த வேளையில் மாவிலாறுப் பிரச்சனையில் அனுசரணையாளர்களின் உதவி தேவையில்லை எனவும். அப் பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
2006ம் ஆண்டு 4ம் திகதி மூதூர் பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தபோது பிரான்ஸ் நாட்டின் பட்டினிக்கெதிரான இயக்கத்தினைச் சார்ந்த இலங்கையர்கள் 17பேர் முகம் கவிழ்ந்த நிலையில் தலையில் சுடப்பட்டு மரணித்திருந்தனர்.
இவர்களில் 16பேர் தமிழர்கள், ஒருவர் முஸ்லீம் ஆகும். இவர்கள் அனைவரும் 35 வயதிற்கு உட்பட்டவர்கள். அத் தொண்டர் நிறுவனத்தின் அங்கிகளை அணிந்திருந்தனர்.
இப் படுகொலையைக்கு ராணுவமே பொறுப்பு என கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்ததைத் தொடர்ந்து ராணுவம் அவர்களை அங்கு செல்ல பாதுகாப்பு காரணங்களைக் கூறி அனுமதி மறுத்தனர்.
அவர்களின் குற்றச்சாட்டுகளை அரச சமாதானச் செயலகம் மறுத்தது. ஆனால் இன்றுவரை அக் குற்றச்சாட்டுகளின் முடிவுகள் இல்லை.
மாவிலாறு சம்பவம் தொடர்பாக எரிக் சோல்கெய்ம் இன் எண்ணம் இவ்வாறு இருந்தது….
அதாவது அரச தரப்பினர் கடுமையான போக்கிற்குச் செல்லக்கூடாது என்பதில் புலிகள் கவனமாக இருந்தனர்.
கோதபய முழுமையான போரை எதிர்பார்த்திருந்தார். அது அவருக்குக் கிடைத்தது.
இத் தருணத்தில் இலங்கை ராணுவம் இப் போரில் வெற்றி பெறும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.
மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து, போர் குறித்து சர்வதேசம் ஏற்றுக்கொண்ட நியதிகளுக்கு ஏற்ப செயற்படுவார்கள். எனவே தற்போது கடைப்பிடிக்கும் தந்திரோபாயங்களையே தொடர்வார்கள் என தாம் எதிர்பார்த்தாகவும் தெரிவித்த அவர்….,
தென் இலங்கையில் புலிகளின் தாக்குதல்களை ராணுவத்தினர் நிறுத்தியது மிகவும் ஆச்சரியமானது எனவும், அவ்வாறான செயல்களை வெள்ளை வான் கடத்தல்கள், சித்திரவதைகள் என்பன மூலமாக அவர்கள் கட்டுப்படுத்தினர்.
அதன் காரணமாக அரசாங்கத்தின் கை படிப்படியாக ஓங்கிய நிலையில் அந்த நிலமைகளைப் பயன்படுத்தி புலிகளுடன் புதிய நிபந்தனைகளுடன் பேச முன்வரலாம் எனத் தாம் எதிர்பார்த்ததாக தெரிவித்தார்.
புதிய ஆயுதங்களைப் பெறுவதற்காக பாராளுமன்றம் ஏனைய தேவைகளை நிறுத்தி, அதற்கான பணத்தை ஒதுக்கியிருந்தமையும், போரில் இறக்கும் ராணுவத்தினரின் தொகையை ஊடகங்களுக்கும், மக்களுக்கு மிகவும் திட்டமிட்ட வகையில் மறைத்தமையும் வாய்ப்பாக அமைந்தன.
மாவிலாறு சம்பவங்களின் விளைவு பாரிய போரை நோக்கித் திருப்பலாம் என்பதை உணர்ந்திருந்த ஒரே மனிதர் பாலசிங்கம் மட்டுமே எனத் தெரிவித்த சோல்கெய்ம் தனது மரணத்தின் இறுதிக் காலத்தில் புலிகள் கிழக்கினை விரைவாக இழப்பார்கள் எனவும், வடக்கை இழந்தாலும் இழக்கலாம் என்றார்.
2006ம் ஆண்டு கோடை காலத்தின்போது இந்திய மக்களைச் சென்றடைவதற்காக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருந்தார்.
ராஜிவ் காந்தியின் படுகொலையைப் புறம் ஒதுக்கி அச் சம்பவம் தொடர்பாக நேரடியான மன்னிப்பாக அது இல்லாவிடினும் அதற்குக் அண்மையாக சென்றார்.
அவரது இக் கூற்றைக் கண்டித்து தொலைபேசி மூலம் தமிழ்ச்செல்வன் கண்டித்தார்.
தமிழ்ச்செல்வன் போன்ற மிக இளையவர் அவரது நடத்தையைக் கண்டித்தமை அதுவும் பிரபாகரன் கூறியிருந்தாலும் பரவாயில்லை. இச் செயல் பாலசிங்கத்தின் மனநிலையைப் பெரிதும் பாதித்திருந்தது.
அதன் பின்னர் பிரபாகரனுடன் பாலசிங்கம் பேசவில்லை என தாம் எண்ணுவதாக சோல்கெய்ம் தெரிவித்தார்.
வாசகர்களே!
மாவிலாறு சம்பவங்கள் எவ்வாறு போரை விரிவடையச் செய்தன? என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
தொடரும்…..
Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்.