டிசம்பர் மாதம் 16-ம் தேதி, 1971-ம் ஆண்டு.
கிழக்குப் பாகிஸ்தானின் டாக்கா நகருக்குள் இந்தியப்படைகள் வெற்றிகரமாக ஊடுருவியிருந்தன. 14 நாட்கள் நடைபெற்ற இந்தியா—பாகிஸ்தான் போரின் முடிவில், பாகிஸ்தானியர்களால், ‘பெருமைக்குரிய ராணுவம்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட பாகிஸ்தானின் ராணுவம், தோல்வியைக் சந்தித்திருந்தது.
கிழக்குப் பாகிஸ்தானிலிருந்த பாகிஸ்தான் படைகளைத் தலைமையேற்று நடத்தியவர் லெட்டினென்ட் ஜெனரல் நியாசி. இவருக்கு “புலி” என்ற பட்டப்பெயரும் பாகிஸ்தானில் இருந்தது.
“பாகிஸ்தான் ராணுவத்தில் கடைசி நபர் உயிரோடு இருக்கும் வரை இந்தியாவை எதிர்த்துப் போராடுவோம்” என்று சூழுரைத்திருந்த நியாசி, இந்திய ராணுவத்திடம் சடங்கு ரீதியாக சரணடைய வேண்டிய சூழ்நிலை.
கிழக்குப் பாகிஸ்தானில் இந்திய ராணுவம் ஊடுருவிவிட்ட நிலையில், அங்கிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரைக் காப்பாற்றி கொள்ள வேண்டுமானால், இந்தியா தயாரித்திருந்த சரணாகதி ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் ராணுவத் தளபதி கையொப்பமிட வேண்டும்.
பாகிஸ்தானின் சார்பில் கையொப்பமிட நியமிக்கப்பட்டிருந்தவர், லெப்டினென்ட் ஜெனரல் நியாமி.
சரணாகதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதை இந்திய ராணுவத்தினர் ஒரு விழாவாக ஏற்பாடு செய்திருந்தார்கள். மண்டபத்தின் நடுவே போடப்பட்டிருந்த மர மேஜையில் சரணாகதி ஒப்பந்தம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. மேஜையைச் சூழ சிரித்த முகங்களுடன் இந்திய ராணுவ அதிகாரிகள்.
பாகிஸ்தானின் ராணுவ தளபதியின் முகம், அவர் வெடித்து அழுவதற்கு மிக அருகில் இருந்தது. கண்கள் கலங்கியிருந்தன.
“நானும், என்னுடைய ராணுவத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியப் படைகளிடம் சரணடைகிறோம்”என்று ஒப்பந்ததில் இருந்த வாக்கியங்களை உரத்து, ஆனால் உணர்ச்சியற்ற குரலில் படித்த பாகிஸ்தான் தளபதி, சரணாகதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.
அடுத்த காட்டமாக எழுந்து நின்று, தன்னுடைய ராணுவச் சீருடையில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் இலச்சனைகளைக் கழட்டி இந்திய ராணுவத் தளபதியிடம் கொடுத்தவர், தனது துப்பாக்கியையும் இந்தியத் தளபதியிடம் கொடுத்தார்.
துப்பாக்கியையும், இலச்சனையையும் இந்தியாவின் சார்பில் பெற்றுக்கொண்டவர், தலைப்பாகை அணிந்திருந்த சீக்கியரான லெப்டினென்ட் ஜெனரல் அரோரா.
ரம்னா என்ற இடத்தில் நடைபெற்ற இந்தச் சரணாகதி வைபவம் இந்தியத் தரப்பினால் வீடியோவில் படமாக்கப்பட்டது. அந்த வீடியோக் காட்சி பாகிஸ்தான் அரசு டி.வி.-யில் ஒரேயொரு தடவை, அதுவும் சில விநாடிகள் மாத்திரம் ஒளிபரப்பப்பட்டது.
ஒரேயொரு தடவை ஒளிபரப்பப்பட்டதற்கே பாகிஸ்தான் தொலைக்காட்சியின் இயக்குனர் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டார் – நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்திய சம்பவத்தை ஒளிபரப்பு செய்த குற்றத்துக்காக!
அது பாகிஸ்தானில்.
ஆனால், அங்கிருந்து 6000 கி.மீ. தொலைவில், ஐரோப்பாவில், பாகிஸ்தான் ராணுவ தளபதி சரணடைந்ததை தொலைக்காட்சியில் காட்ட எந்தவித தடையும் இல்லை. ஐரோப்பியத் தொலைக்காட்சிகள் அதை விலாவாரியாக, திரும்ப திரும்ப ஒளிப்பரப்புச் செய்தன.
நெதர்லாந்து (டச்சு) நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடந்த டி.வி. ஒளிபரப்பில் காண்பிக்கப்பட்ட பாகிஸ்தான் தளபதியின் சரணாகதிக் காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு முஸ்லீம் இளைஞர்.
மேற்படிப்புக்காக ஐரோப்பா வந்திருந்த அவர் தனது பி.எச்.டி.யை முடிக்கவிருந்த நேரம் அது.
பாகிஸ்தானைச் சேர்ந்த அந்த இளைஞருக்கு தனது நாடு இந்தியாவிடம் சரணடைந்ததைப் பார்த்த போது தாங்கமுடியாத கவலை ஏற்பட்டது. இதுபோன்ற நிலை இனி ஒருபோதும் பாகிஸ்தானுக்கு ஏற்படவே கூடாது என்று நினைத்துக் கொண்டார்.
அந்த இளைஞர்தான் – அப்துல் காதர் கான்.
டாக்டர் ஏ.க்யூ.கான் என அறியப்பட்ட இவர்தான், ‘பாகிஸ்தானின் அணுசக்தியின் தந்தை’ என்று ஒரு காலத்தில் போற்றப்பட்டவர். அதன்பின், “அணுகுண்டை மற்ற நாடுகளுக்கு விற்க முயன்றார்” என்ற குற்றச்சாட்டில், டாப் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டவர்.
“கான் ரகசியமாக அணுகுண்டுகளை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்ய சில ரகசிய டீலிங்குகள் செய்கிறார்” என ஆதாரங்களை பாகிஸ்தான் அரசுக்கு கொடுத்தது, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.தான்!
அதையடுத்து, வேறு வழியில்லாமல் தமது நாட்டின் டாப் விஞ்ஞானியை வீட்டுக் காவலில் வைத்தது பாகிஸ்தான். ஆனால், 2009-ம் ஆண்டு, “அவர் சுதந்திர பிரஜை” என தீர்ப்பளித்த இஸ்லாமபாத் ஹைகோர்ட், கான் பாகிஸ்தானுக்குள் எங்கும் நடமாடலாம் என அனுமதி வழங்கியது.
இப்போதும் அமெரிக்கா, “கான் தேசிய பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே உள்ளார். இவரால் இப்போதும், அணுகுண்டு தயாரிப்பு ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்க முடியும்” என்று கூறிவருகிறது.
பாகிஸ்தான் அதை கண்டுகொள்வதில்லை.
கான் தயாரித்த அணுகுண்டு இருக்கிறதே, அதுதான் பாகிஸ்தான் வரலாற்றிலேயே ராஜதந்திரம், உளவு பார்த்தல், எல்லாவற்றின் கலவையான எபிசோட்!
இந்த கான், அணுகுண்டு தயாரிப்பில் கை வைக்கும் முன்னரே, முதலில் ஜனாதிபதியாகவும், பின் பிரதமராகவும் இருந்த பூட்டோ, செம ராஜதந்திர விளையாட்டுகள் சில விளையாடினார்.
லிபியாவின் கடாபியிடம் போய், “இஸ்லாமிய அணுகுண்டு” என அதிர வைத்தார்.
அணுகுண்டு டீல் பற்றி பேசி முடிக்க, யாருக்கும் சந்தேகம் ஏற்படாத இடம் ஒன்றை தேர்ந்தெடுத்தனர், கடாஃபியும், பூட்டோவும்.
அந்த இடம், பாரீஸ்! பிரான்ஸ் நாட்டின் தலைநகர்!!
அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வுக்கு போக்கு காட்டிவிட்டு, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகர ஹோட்டல்களில் சுமார் 1 ஆண்டு காலமாக பாகிஸ்தானியர்கள் சில ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.
ஒரு பிரென்ச் தயாரிப்பு நிறுவனத்தை அணுகிய ஒருவர் ஒரு சில எந்திர பாகங்களை வாங்குவது பற்றி விசாரித்திருக்கிறார்.
அந்த பாகங்கள் FDO அமைப்பின் யுரென்கோ அணு ஆயுத வேலைத்திட்டத்துக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பாகங்கள். இந்த எந்திரப் பாகங்களைப் பற்றி விஞ்ஞானியற்ற ஒருவர் வந்து சர்வசாதாரணமாக விலை விசாரித்துவிட்டுச் சென்றது பிரென்ச் நிறுவனத்துக்கு உடனே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
விலை விபரங்களைத் தருகிறோம் என்று கூறி அவருடைய போன் நம்பரை வாங்கிக் கொண்டது பிரென்ச் நிறுவனம்.
பின்னர் அந்த போன் இலக்கத்தை அழைத்துப் பார்த்தபோது, இணைப்புச் சென்ற இடம் பெல்ஜியத்திலுள்ள பாகிஸ்தானின் தூதரகம்.
வந்து விலை விசாரித்துவிட்டுப் போன நபர் தூதரகத்தின் இரண்டாம் நிலைச் செயலாளர்!
மற்றொரு பக்கமாக, வெளிநாடுகளில் இருந்த பாகிஸ்தானிய பூர்வீக விஞ்ஞானிகளை அந்த நாடுகளில் இருந்த பாகிஸ்தான் தூதரகங்கள் மூலம், இஸ்லாமபாத்துக்கு கொண்டு வந்தார்கள்.
பாகிஸ்தான் தூதரகங்கள் வெளிநாடுகளில் விஞ்ஞானிகளை வலைவீசி பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அப்துல் காதர் கான் என்ன செய்தார் தெரியுமா?
“என்னிடம் கடிதம் ஒன்று இருக்கிறது. அதை பாதுகாப்பாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்றபடி, தான் கையோடு எடுத்துச் சென்ற கடிதம் ஒன்றைப் பாகிஸ்தான் தூதரிடம் கொடுத்தார்.
தூதரே படிக்க முடியாதபடி, அந்தக் கடிதம் சீல் வைக்கப்பட்டு இருந்தது.
கடிதத்தை பெறுபவர் முகவரியில் இருந்த பெயர்: ஸுல்பிகார் அலி பூட்டோ. பாகிஸ்தான் ஜனாதிபதி (பின்னாட்களில், பிரதமர்)!
கராச்சிக்கு வலிய வந்து சேர்ந்த விஞ்ஞானி கானை ஐரோப்பாவுக்கு அனுப்பி, நெதர்லாந்தில் இருந்து ரகசியங்களை அடித்து வந்தார்கள். அதற்கு முழு சைட்-சப்போர்ட்டும், பெல்ஜியத்தில் இருந்த பாக்ஸ்தான் தூதரகத்தில் இருந்து கொடுக்கப்பட்டது.
கான் கராச்சி செல்ல விமான டிக்கெட் எடுத்ததே, பாகிஸ்தான் உளவுத்துறைதான்! அதை மணந்து பிடித்தது, நெதர்லாந்து உளவுத்துறை!
இதற்குள், நெதர்லாந்து உளவுத்துறை ஒரு விதமான ‘கேம்’ போட்டார்கள். அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., ‘அப்பாவி முகத்துடன்’ வேறு ஒரு ஆட்டம் ஆடியது.
இரு உளவுத்துறைகளுமே, ஆளையாள் வெட்டி, விளையாடினார்கள். கதை கந்தலானதும், இரு உளவுத்துறைகளும் ஆளையான் காட்டி தப்பிக்க பார்த்தார்கள்.
இதற்கிடையே சவுதி அரேபியா கனெக்ஷன் வேறு!
சவுதி மன்னர் இங்கே காசு கொடுத்துவிட்டு, அணுகுண்டு தமது நாட்டு பாதுகாப்புக்கு வரும் என காத்திருந்தார். காசு கொடுப்பதாக சொன்ன லிபியா ஜனாதிபதி கடாபிக்கு, அல்வா கொடுத்தார் பூட்டோ!
எந்தவொரு ஹாலிவூட் த்ரில்லர் படத்திலும், இவ்வளவு விநோத சம்பவங்களை வைத்து திரைக்கதை அமைத்திருக்க மாட்டார்கள்!
இந்த விவகாரமே, ஒரு மாயச் சுழல் போன்றது. ஆனால், பக்கா மசாலா படம் போல, ராஜதந்திரம், உளவு பார்த்தல், துரோக பிசினெஸ், எல்லாமே உள்ள மிக சுவாரசியமான எபிசோட்
தொடரும்…
-ரிஷி-