இலங்கையில் நாளொன்றுக்கு சாராசரியாக 8 பேர் தற்கொலை செய்கின்றார்கள். தற்கொலை செய்பவர்களில் ஆண்களே முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவல் துறையின் தகவல்களின் படி 2015ம் ஆண்டு 2389 ஆண்கள் உள்ளிட்ட 3058 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 2016ம் ஆண்டு 2339 ஆண்களும் 668 பெண்களும் தற்கொலை செய்துள்ளனர்.
இந்த வருடம் முதல் 6 மாத காலங்களில் 1597 தற்கொலைகள் அறிக்கையிடப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கையில் 1275 பேர் ஆண்கள், 322 பேர் பெண்கள் என்று அறிய முடிகின்றது.
கடந்த இரு தசாப்தங்களில் உள் நாட்டில் வருடாந்தம் தற்கொலை வீதத்தை பாதிக்கும் கூடுதலாக குறைக்க முடிந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறுகின்றது.
1995ம் ஆண்டு 8500 பதிவாகியிருந்த தற்கொலைகள் 2005 இல் பாதிக்கும் மேலாகக் குறைந்து 2015ல் 3025 ஆக குறைந்துள்ளது என்றும் சுகாதார அமைச்சு அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் உளவள ஆற்றல் சேவைகள் குறிப்பாக நாடு தழுவியதாக அரசு வைத்தியசாலைகளில் இளைஞர்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுவருகின்றது.
இதன் வழியாக மன அழுத்தத்தை கையாளுதல் , சாதகமாக சிந்தித்தல் , இளைஞர்களின் ஆற்றலை கட்டியெழுப்புதல் போன்றவற்றை சுகாதார அமைச்சு எதிர்பார்க்கின்றது.
கோபம் மற்றும் முரண்பாடுகளை கட்டுப்படுத்தும் தன்மை மக்கள் மத்தியில் வளர்க்கப்பட வேண்டும்.
மது பாவனை மற்றும் உள ரீதியான பிரச்சினைகள் உள்ளவர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குதல் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும் என உள நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.