தமிழ் சித்திரைப் புத்தாண்டில் ஜெயம் ரவியை சந்தித்தபோது, சுவாரஸ்யமான பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டி:
நீங்கள் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘போகன்’ படம் பற்றி சொல்லுங்கள்?
”இது எக் ஷன், அதிரடி கதையம்சம் கொண்ட படம். கதாநாயகி ஹன்சிகா. சகோதரர் அரவிந்தசாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பிரபுதேவா தயாரிக்கிறார்.
லட்சுமண் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.
உங்களது திரை உலக வெற்றிப்பயணம் எப்படி இருக்கிறது?
இதற்கு முன்பு தெரியாமல் சில தவறான படங்கள் பண்ணி இருக்கேன். அதன் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்தன.
அந்த அனுபவத்தின் அடிப்படையில் கதைகளை தெரிவு செய்தேன். அது பெரிய பலனை கொடுத்தது.
இடைப்பட்ட காலம் எனக்கு போராட்டமாகவே அமைந்தது. கதாநாயகர்கள் பட்டியலில் இருந்தே என்னை நீக்கி விட்டனர். அதில் மனம் தளராமல் இருந்தேன்.
நல்லதுக்குத்தான் என்று நினைத்துக்கொண்டு உழைத்தேன். இப்போது எனது படங்கள் தொடர் வெற்றி பெறுவதில் சந்தோஷப்படுகிறேன்.
கதை தெரிவில் நீங்கள் எடுக்கும் அக்கறை?
இப்போது கூடுதலாக அக்கறை செலுத்துகிறேன். இன்று ரசிகர்களின் ரசனை மாறி இருக்கிறது. அந்த மாற்றத்தை வளர்ச்சி என்றும் சொல்லலாம்.
அதற்கு இணையாக நாம் கதைகளை தேர்ந்தெடுக்காவிட்டால் பின்தங்கி விடுவோம். ரசிகர்களைவிட அதிகமாக நாம் யோசிக்கணும். அப்படி யோசித்தால்தான் ரசிகர்கள் ஆச்சரியமாக பார்ப்பார்கள்.
வெற்றியை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்யப்போகிறீர்கள்?
ஒரே ஒரு வழிதான் இருக்கு. நல்ல கதையை தேர்ந்தெடுக்க வேண்டும். வேறு எதுவும் இல்லை. நூறு கதைகளை கேட்கலாம். கேட்டதை எல்லாம் பண்ணணும் என்று அவசியம் இல்லை.
அதில் எது நம்ம மூளையை தைக்கிற மாதிரி இருக்கிறதோ, அதை விட்டுவிடக்கூடாது. எனக்கு இப்ப வருகிற படங்கள் எல்லாம் அந்த மாதிரி சவாலான படங்களாகத்தான் இருக்கு. என்னுடைய திறமையையும், உழைப்பையும் சோதிக்கிற படங்களாகத்தான் இருக்கு.
அடுத்து டைரக்டர் விஜய்கூட நான் பண்ணும் படம், முற்றிலும் புதிய கதை. இதுவரை நான் செய்யாத கதாபாத்திரம். அதுபோல் டைரக்டர் சக்திதாசன், விண்வெளியில் எடுக்கிற மாதிரி ஒரு கதை சொல்லியிருக்கிறார்.
அதை எடுக்கலாம் என்று திட்டம் இருக்கு. ஆசியாவில் இதுவரை யாரும் இந்த மாதிரி படம் எடுக்கலை. முதல் தடவையாக இதை பண்ணணும் என்ற பெரிய ஆசை இருக்கு. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. பாதி படம் விண்வெளியில் நடப்பது போன்ற கதை அது.
உங்கள் அண்ணன் டைரக் ஷனில் மீண்டும் எப்போது நடிக்கப் போகிறீர்கள்?
எனது 25- ஆவது படத்தை அவர் இயக்க வேண்டும் என்பது எங்கள் இருவரின் ஆசை. அதற்கான வேலை நடக்கிறது. அந்த படத்துக்கான கதையை அண்ணன் என்னிடம் சொல்லி விட்டார்.
‘தனி ஒருவன்’ என்ன மாதிரியான தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியதோ, அதை விட பல மடங்கு அதிகமான தாக்கத்தை அந்த படத்தின் கதை ஏற்படுத்தும்.
படிக்கிற காலத்தில் உங்கள் கனவுக்கன்னி யார்?
சிம்ரனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய நடனத்தை ரசிப்பேன். நடிப்பும் பிடிக்கும். அவர்தான் என் கனவுக்கன்னியாக இருந்தார்.
உங்களுடன் நடித்த நடிகைகளில் உங்களை கவர்ந்தவர் யார்?
என்னுடன் நடித்த ஒவ்வொரு கதாநாயகிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதுதான் அவர்களை சிறந்தவர்களாக்கி இருக்கிறது.
பல நாயகிகள் என்னுடன் நடித்தார்கள். சிலர் எனக்கு முன்பே வந்தவர்கள். இன்னும் அவர்கள் ‘நம்பர்-1’ ஆக இருக்கிறார்கள் என்றால் அவர்களின் தனித்தன்மைதான் காரணம்.
நயன்தாராவிடம் கதை பற்றிய அறிவை நிறைய பார்க்கலாம். கதைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது அவருக்கு நன்றாக தெரியும்.
த்ரிஷாவை எடுத்துக்கொண்டால், அவர் எந்த காட்சியில் நடித்தாலும் அது நம்பக்கூடியதாக இருக்கும்.
கிராமத்து பெண் மாதிரியோ, நகரத்து பெண் மாதிரியோ அவர் எப்படி நடித்தாலும், அதுமாதிரியே மாறி விடுவார். ஹன்சிகாவிடம் நிறைய ‘எனர்ஜி’ இருக்கும்.
சில கதாநாயகர்கள் மீது கால்ஷீட் பிரச்சினை, சம்பள பிரச்சினைகள் பற்றி சர்ச்சைகள் வருவது உண்டு? உங்கள் மீது அந்த சர்ச்சைகள் வருவதில்லையே?
அப்படி பிரச்சினைகள் வந்தால்தான் கேள்வி கேட்பார்கள். வராமலும் கேள்வி கேட்கிறீர்களே?(சிரிப்பு) இதெல்லாம் என் அப்பாகிட்ட இருந்து கற்றுக் கொண்டது.
அவர் பார்க்காத வெற்றி இல்லை. எவ்வளவுதான் வெற்றியை பார்த்தாலும் வீடு, அலுவலகம் என்று சராசரி மனிதராகத்தான் இருந்தார்.
அவரைப்போல் இருக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் அந்த மாதிரி இருக்க முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் நல்ல பெயர் வாங்கணும்.
கெட்ட பெயர் வாங்கி கொடுத்து விடக்கூடாது என்று நினைத்து எல்லா விடயங்களிலும் எச்சரிக்கையாக இருப்பேன்.
அப்படியே வளர்ந்து விட்டேன். இப்போது மக்களிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஓட்டு போடுவீர்கள்?
நான் மனசாட்சிப்படி கண்டிப்பாக ஓட்டுப் போடுவேன். நியாயமாக யாருக்கு ஓட்டு போட வேண்டுமோ, அவருக்கு கண்டிப்பாக ஓட்டுப் போடுவேன்.
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் திட்டம் உண்டா?
இப்பவும் நான் அரசியலில்தான் இருக்கிறேன். ஏன்னா நான் ஓட்டுப் போடுகிறேன். என் தலைவனை தேர்ந்தெடுக்கிற அறிவு எனக்கு இருக்கிறது.
அது எல்லாருக்குமே இருக்கிறது. அப்ப நாம் அரசியல்வாதிகள்தான். அதற்காக கட்சியில் சேர வேண்டும் என்ற அவசியம் இல்லை.