உலகின் பணக்கார கடவுள் என கூறப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் வழங்கும் உண்டியல் காணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. 1975இல் வெறும் 6 கோடி ரூபாவாக இருந்த ஆண்டு வருமானம் தற்போது 900 கோடி ரூபாவை நெருங்கியுள்ளது.
ஏழுமலையானை தரிசிப்பதற்காக உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகைத் தருகின்றனர். பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்யும் இவர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர்.
சாமி உண்டியலில் பணம் மட்டுமின்றி தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், கல்யாண பத்திரிகைகள் போன்றவையும் இருக்கும். உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகள் தினந்தோறும் எண்ணப்படுகின்றன. இதில் தேவஸ்தான, வங்கி ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
கடந்த 1975ஆம் ஆண்டுக்கு முன்பு உண்டியல் காணிக்கை, பிரசாதம் விற்பனை, சேவை டிக்கெட்டுகள் விற்பனை ஆகியவை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தையும் தினமும் வரவு வைத்தனர்.
1975ற்கு பிறகு உண்டியல் வருமானம் மட்டும் தனியாக வரவில் வைக்கப்பட்டது. தினந்தோறும் எண்ணப்படும் பணம் அன்றைய தினமே வங்கிக் கணக்கில் வைப்பிலடப்படும்.
இதனால் ஆண்டுதோறும் உண்டியல் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 1975, 76ஆம் ஆண்டுகளில் 5.84 கோடியாக இருந்த உண்டியல் வருமானம், 1985, 86ஆம் ஆண்டுகளில 15.86 கோடியாக அதிகரித்தது. இது 1995, 96ஆம் ஆண்டுகளில் 85.06 கோடியாகவும், 2005, 06ஆம், ஆண்டுகளில் 307 கோடியாகவும் அதிகரித்தது.
2005ஆம் ஆண்டுக்குப் பிறகு உண்டியல் வருமானம் சராசரியாக நாளொன்றுக்கு 1 கோடியாக இருந்தது.
பின்னர் அதிகரிக்கத் தொடங்கி, 2010,11ஆம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 675.85 கோடியாகவும், 2011, 12ஆம் ஆண்டுகளில் 782.23 கோடியாகவும் வருமானம் அதிகரித்தது. இது 2012,13ஆம் ஆண்டுகளில் 859 கோடியானது.
2013, 14ஆம் ஆண்டுகளில் உண்டியல் வருமானம் 900 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
குறிப்பு:- பண விபரம் இந்திய ரூபாய்களில்