மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியாதென்ற முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் கூற்றில் உண்மையுள்ள போதும், இக்கூற்றின் பின்னணி குறித்து சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி குடும்பத்துக்குள் இன்னொருவர் ஜனாதிபதியாக வர விரும்புவதற்கான முன்னேற்பாடா இதுவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடக வியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் அங்கு மேலும் பேசுகையில்;
நாட்டில் விரைவில் ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறப்போகின்றதென்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகியிருப்பவர் அதற்கு மேலேயும் போட்டியிட முடியும். 4 வருடங்கள் முடிவடைந்தால் அதன் முடிவிலேயே தேர்தலை நடத்தலாமென்ற அரசியலமைப்பின் சட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் 4 வருடம் முடிவடைவதால் தேர்தல் வருமென்ற எதிர்பார்ப்புள்ளது.
இவ்வாறான நிலையில் இந்த எதிர்பார்ப்பை குழப்புவதற்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா ஒரு கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது 18 ஆவது திருத்தம் கொண்டு வருவதற்கு முன்னரே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பித்துவிட்டார்.
அவர் ஆரம்பித்த வேளையிலேயே அது அவருடைய இறுதிக் காலமாக இருக்கின்றதென ஒரு மட்டுப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார். இதன் காரணமாக மகிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாதென சட்டப் பிரச்சினையை கிளப்பியுள்ளார்.
இது சிறந்ததொரு சட்டவாதம். இதனை ஆராய்ந்து பார்த்த போது அதில் வலு இருக்கின்றது. அவர் கூறும் விடயத்தில் சரியான கூற்று உள்ளதென்பது எனது சிந்தனை. எனினும் 3 வருடத்துக்கு பிறகு தற்போது சரத் என்.சில்வா சட்டவாதத்தை முன்வைப்பதற்கான காரணம் என்னவென்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
இது அரசாங்க கட்சிக்குள் வேறு யாராவது ஜனாதிபதி வேட்பாளராக முன்வருவதற்காக வைக்கப்படும் கூற்றா? நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைபற்றி ஆராய்ந்து தங்களுக்கு அறிக்கை கொடுக்கும்படி அவரை கோரிய ஜாதிக ஹெல உறுமயவின் சிந்தனையா?
அல்லது குடும்பத்துக்குள்ளேயே இன்னொருவர் மஹிந்தவுக்கு கொடுத்த சந்தர்ப்பம் போதும் நான் ஜனாதிபதியாக வர வேண்டுமென்று இதை செய்ய வைக்கின்றனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எது எவ்வாறிருப்பினும் அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவு குறைந்திருக்கின்றது என்பது உண்மை. யுத்தத்தை வெற்றிகொண்டோம் என்ற பேச்சு மக்கள் மத்தியில் எடுபடாது போயுள்ளமை நாட்டில் ஊழல், குடும்ப ஆட்சி, மக்களுக்கு வாழமுடியாத சூழ்நிலை மற்றும் அரச அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளாமல் பின்போடுகின்றமை, இவ்வாறான நிலையில் இப்பொழுது இந்தியாவின் அழுத்தம் என பலவிதமான அழுத்தங்களுக்கு அரசாங்கம் முகம் கொடுத்துள்ளது.
அதேநேரம் அரசாங்கத்தின் புகழ் மற்றும் மக்கள் மத்தியிலான ஆதரவு குறைவதால் எதை செய்வது, செய்யாமல் விடுவது எனத் தெரியாமல் அரசாங்கம் திண்டாடிக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் பேரினவாதத்துக்கு அடிமையாகி அதனைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்காது மற்றைய தேசிய இனங்களோடு ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து முன்னேறிச் செல்லும் வழியை பார்க்க வேண்டும்.
இது அரசாங்கம் மட்டும் செய்ய வேண்டிய விடயமல்ல. பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வும் மற்ற இனங்களோடு ஒரு இணக்கப்பாட்டுக்கு வராமல் ஆட்சிக்கு வர நினைப்பது முட்டாள்தனமானது.
இது ஆளும் கட்சியாக இருந்தாலும் பிரதான எதிர்க்கட்சியாகவிருந்தாலும் நாட்டில் வாழும் மற்ற தேசிய இனங்களோடு ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து அரச அதிகாரங்களை என்னவிதமாக முழுமையான விதத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்பதை எங்களோடு பேசி தீர்மானத்துக்கு வரவேண்டும். அப்படி இல்லாதுவிட்டால் தொடர்ச்சியாக எவரும் நாட்டின் ஆட்சியதிகாரத்தில் இருக்க முடியாது என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன் என்றார்.