• இலங்கை குறித்த உபகுழு கூட்டத்தில் பெரும் களேபரம் ரத் வீரசேகரவுக்கும் புலம்பெயர் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம்
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற உப குழு கூட்டமொன்றில் இலங்கையிலிருந்து கலந்து கொண்டிருக்கும் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினருக்கும் புலம்பெயர் தமிழர்களுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் உப குழு கூட்டத்தில் பெரும் களேபரமான நிலைமை ஏற்பட்டதுடன் இரண்டு தரப்பினரும் கடும் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போது நேற்று முன்தினம் இலங்கை தொடர்பில் விசேட உபகுழுக் கூட்டம் நடைபெற்றது.
இலங்கையிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற அடிப்படையில் கலந்துகொண்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர குழுவினர் இந்த உபகுழுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த உப குழு கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிடுகையில்,
யுத்தத்தின் இறுதி கட்டத்தில் நந்திக் கடல் களப்பில் புலிகளின் தலைவர் பிரபாகரன் 300 பொது மக்களை சூழ வைத்துக் கொண்டு பாதுகாப்பாக இருந்தார். அத்துடன் ஆயிரக் கணக்கான குண்டுகளையும் புதைத்திருந்தார். இவ்வாறுதான் அவர் அங்கு இருந்தார் என்றார்.
இவ்வாறு சரத் வீரசேகர உரையாற்றிக் கொண்டிருந்தபோது புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகள் குறுக்கிட்டு கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்போது புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் குறிப்பிடுகையில்,
யுத்த காலத்தில் வன்னிப் பகுதியில் 70ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதாக அரசாங்கம் கூறி வந்ததது. ஆனால், இறுதியில் 2 இலட்சத்து 80ஆயிரம் பேர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறினார்.
உடனடியாக இதற்கு பதிலளித்த சரத் வீரசேகர அதனால் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இதன்போது புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் வாதங்களை முன்வைத்தனர். இதேவேளை சரத் வீரசேகரவின் குழுவில் இணைந்திருந்த மற்றுமொரு பிரதிநிதியான நாலக்க கொடஹேவா இதன்போது கருத்து வெ ளியிட்டார்.
அவர் குறிப்பிடுகையில், நீங்கள் 2009ஆம் ஆண்டுவரை சிங்கள மக்களை கொலை செய்தீர்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. எனினும் நீங்கள் இதைத்தான் செய்தீர்கள். இதனை புரிந்துக் கொள்ளுங்கள் சேர் என்றார்.
இவ்வாறு தொடர்ச்சியாக இரண்டு தரப்புக்குமிடையில் வாதப் பிரதிவாதங்கள் குறித்த உப குழுக் கூட்டத்தில் நீடித்துக் கொண்டிருந்தன. இதனால் உப குழுக் கூட்டத்தில் களேபரமான நிலைமை காணப்பட்டது.