நாட்டில் குழந்தைகள், பெண்கள் மீதான துஷ் பிரயோகங்களும் அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் எல்லைமீறிச்செல்லும் போக்கையே அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
இதில் இளைஞர், யுவதிகள் மத்தியில் பிரபல்யம் பெற்று விளங்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கும் கணிசமான பங்கு உரித்தாகிவருவதை நோக்கலாம். இதன் தவறான உபயோகத்தினால் பாடசாலை செல்லும் சிறுமிகள் சிலர் அநியாயமாக தற்கொலை செய்துகொண்டமையை காணக்கூடியதாக இருந்தது.
அதேபோல், இரண்டு மாதங்களுக்கு முன் கலவான பகுதியிலும் கூட யுவதியொருவரின் நிர்வாணப்படமொன்றை வெளியிடப்போவதாக மிரட்டல் விடுத்த இளைஞனொருவனை பொலிஸார் கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது. இவற்றைத் தடுக்க பொலிஸார் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையை நினைவுகூரவேண்டியது கட்டாயமானதாகின்றது.
அந்தவகையில் கடந்த இருவார காலப்பகுதியில் இரு பெண் குழந்தைகளும் ஓர் இளம் யுவதியும் துஷ்பிரயோகத்துக்கும் படுகொலைகளுக்கும் ஆளாகியுள்ளமையை அவதானிக்கத்தக்கதாகவுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருவளை அளுத்கமையில் குடும்பத்தகராறின் காரணமாக ஒரு வயதும் ஒன்பது மாதங்களுமேயான பெண் குழந்தையொன்று தனது தந்தையின் வெறித்தனமான செயலின் காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்தது.
அக்குழந்தையை அதன் தாய் வந்து கூட்டிப்போக மறுத்தமையால் கற்பாறையில் அடித்துக் கொன்றுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த 13 ஆம் திகதி 13 வயதான சிறுமியொருவரால் 6 வயதான தங்கை ஒன்பது இடங்களில் கத்திக்குத்துக்கிலக்காகி மரணத்தை தழுவியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள், இவற்றுக்கு காரணமானவர்கள் என கண்டறியப்படுபவர்களுக்கெதிராக நீதிமன்றங்களும் காவல்துறையினரும் சட்ட ரீதியாக தக்க தண்டனை வழங்குவதற்காக பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்வதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது..
அந்தவகையில் குடும்பத்தகராறு ஒன் றின் விளைவாக ஒரு வயதும் ஆறுமாதமுமான குழந்தையின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது. அச்சம்பவமே இம்முறை பதிவாகின்றது.
ஆம். கடந்த திங்கட்கிழமை பேருவளை, புபுலவத்த பிரதேசத்திலுள்ள விகாரையொன்றின் அருகாமையில் பச்சிளம் குழந்தையை ஆண் ஒருவர் அங்கிருந்த கற்பாறையில் மிகவும் முரட்டுத்தனமாக தூக்கி அடிப்பதை 14 வயதான சிறுமியொருவர் கண்ணுற்றுள்ளார்.
அன்று பகல் ஒரு மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனைப் பார்த்த மாத்திரத்தில் அச்சிறுமி கை, கால்கள் நடு நடுங்க உடலெங்கும் வியர்த்துக்கொட்ட திகைத்துப்போய் அங்கிருந்து பொலிஸ் நிலையத்திற்கு ஓட்டம் பிடித்துள்ளார்.
அங்கே சென்ற மாத்திரத்தில் அச்சிறுமி உடனடியாக பொலிஸ் நிலையத்துக்குச் செல்லவில்லை. அச்சிறுமிக்கு உடனடியாக அத்துணை தைரியமும் தெம்பும் பிறக்கவில்லை. சிறிதுநேரம் அங்குமிங்கும் சந்தேகத்திற்கிடமான முறையில் அலைந்துதிரிந்துள்ளார்.
இதனைக் கண்ணுற்ற பொலிஸார் அச்சிறுமியைப் பிடித்து விசாரித்துள்ளனர். சற்று திக்குமுக்காடிப்போன அச்சிறுமி அந்த சம்பவத்தைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீண்டெழ சிறிது நேரம் சென்றுள்ளது. அதன் பிறகு சுயநிலைக்குத் திரும்பிய அச்சிறுமி, தான் காண நேரிட்ட கொடூரத்தை விலாவாரியாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
அதனை பொலிஸார் அச்சிறுமியின் முறைப்பாடாக ஏற்றுப் பதிவு செய்துள்ளனர். இக்காட்சியை சம்பவ இடத்திலிருந்து பார்த்த வயோதிப பெண்ணொருவரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
இப்பெண்ணின் அலறல் அங்கு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பிரதேசவாசிகளை சென்றடைந்துள்ளது. அந்த சற்று நேரத்திற்குள் அங்கு கூடிய பிரதேசவாசிகள் அந்நபரை அடித்து துவம்சம் செய்துள்ளனர்.
அது மட்டுமல்லாமல், அந்தக் கொடூரனின் வெறியுணர்ச்சிக்கு ஆட்பட்டு குற்றுயிராக சாவுக்கும் வாழ்வுக்குமான போராட்டத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த அப்பச்சிளங்குழந்தையை களுத்துறை நாகொடை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில், குழந்தையின் உயிர் சற்றுநேரத்திற்குள் பிரிந்துள்ளது. சந்தேகநபர் பிரதேசவாசிகளின் பிடியில் இருந்து பல பிரயத்தனங்களை மேற்கொண்டு தப்பிக்க எத்தனித்த பொழுதிலும், அவனது முயற்சிகள் வீண்போயின. தகவலறிந்த பொலிஸார் அங்கு வந்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அக்குழந்தையை அந்நபர் ஏன் கற்பாறையில் கொடூரமாக தூக்கி அடித்துக்கொலை செய்ய வேண்டும்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது எமக்குப் புரிகிறது. அதுமட்டுமல்ல, அந்த நபருக்கும் அக்குழந்தைக்குமிடையிலான தொடர்பு என்ன? என்ற வினாவும் அடிமனதில் இருக்கவே செய்யும்.
இச்சம்பவத்தில் பலியானதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படும் அக்குழந்தை வேறுயாருடையதுமல்ல.
இவரே அக்குழந்தையின் தந்தையாவார். அக்காட்சியைப்பார்த்து அலறிய வயோதிபப் பெண்மணி சம்பவத்தில் கொலையுண்ட குழந்தையின் பாட்டியாவார். இச் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான அந்த 14 வயது சிறுமி அப்பிரதேசத்தில் வசித்து வருபவராவார்.
இச்சம்பவத்தில் பலியான குழந்தை யின் பெற்றோர் மூன்று வருடங்களுக்கு முன்னர் பயாகலையில் சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பு இவர்கள் இருவரையும் திருமண பந்தத்தில் இணைத்துள்ளது.
அதன்பிறகு ஒருவாறு பல்வேறு தடை கள், இடையூறுகள் என்பனவற்றுக்கு மத்தியில் அந்நபர் சம்பவத்தில் பலியான குழந்தையின் தாயை கரம்பிடித்துள்ளார். ஆரம்பத்தில் இவ்விருவரும் மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கையை நடத்தியுள்ளனர்.
ஆனால், இவர்களது குடும்ப வாழ்வின் இன்பத்தை புரட்டித் தலைகீழாக கவிழ்த்த சூறாவளியும் அவ்வப்போது வீசத் தவறவில்லை. அவ்வப்போது இருவருக்கிடையில் எழும் கருத்து முரண்பாடுகளும் வாய்த் தகராறுகளும் கைகலப்பு வரை சென்று நாளடைவில் இருவரையும் இரு துருவங்களாக மாற்றின.
இதன் விளைவாக, அந்நபரின் மனைவி அவளது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நபர் அங்கு மிங்கும் கிடைக்கும் கூலி வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். மூன்றுமாதத்துக்கு முன்னர்தான் இருவரது உறவிலும் விரிசல் ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
ஆனாலும் இவர் சட்ட பூர்வமாக விவாகரத்து பெறவில்லையென பொலிஸ் பரிசோதகர் துமிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். இதன்படி இருவரும் தமது குழந்தையை வாரத்தில் ஒரு தடவை புபுலவத்தையிலுள்ள விகாரையில் வைத்து பரிமாறிக்கொள்வதாக தங்களுக்குள்ளே ஒரு உடன்படிக்கைக்கு வந்துள்ளனர்.
ஏனெனில், சம்பவத்தில் பலியான குழந்தையின் தாய் தனது கணவரின் வீட்டிற்குச் செல்ல விரும்பவில்லை. ஆதலால் அவரது வீட்டிற்குச் செல்லும் வழியிலுள்ள அந்த விகாரையில் வைத்து அக்குழந்தையை தனது கணவனிடம் ஒப்படைத்துவிட்டுச்செல்ல தீர்மானித்துள்ளார்.
அதன்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் புபுலவத்தையில் அவ்விகாரை அமைந்துள்ள இடத்துக்கு வரும் அக்குழந்தையின் தாய் அதனை தனது கணவனிடம் ஒப்படைத்து விட்டுச்செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இது கடந்த மூன்று மாதகாலமாக நடைபெற்றுவந்துள்ளது. இதன்போது காலையிலேயே குழந்தையை வந்து பெற்றுச்செல்லும் அந்நபர் மாலையில் அக்குழந்தையை அதன் தாயிடம் அதாவது தனது மனைவியிடம் திருப்பி ஒப்படைத்து வருவதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்.
இவ்வாறிருக்கையில் கடந்த 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அக்குழந் தையை அதன் தகப்பனிடம் ஒப்படைக் கும் நாளாகும். அன்றைய தினம் வழமைபோல காலையில் குழந்தையை சுமந்து குறித்த விகாரை அமைந்துள்ள பகுதிக்கு வந்துள்ளார்.
அச்சமயம் அங்கு வந்திருந்த அக்குழந்தையின் தகப்பன் குழந்தையை பெற்றுக் கொண்டு தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கே சென்றதும் அக்குழந்தையிடம் அதன் பாட்டியும் இந்நபரும் கொஞ்சி விளையாடியுள்ளனர். அதன் பிறகு குழந்தையின் இயல்பில் சற்று மாறுதல் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
குழந்தை அழ ஆரம்பித்துள்ளது. சிறிது நேரத்திற்கெல்லாம் குழந்தை வாந்தியெடுத்துள்ளது. இதனைக் கண்டு நிலை தடுமாறிய அந்நபரும் அவரது தாயும் இயன்றவரை குழந்தையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை பலனளிக்கவில்லை.
அதனையடுத்து, குழந்தையை அதன் தாயிடமே கொண்டுசென்று கொடுத்துவிடுமாறு அந்நபரின் தாய் கூறியுள் ளார். அதன் பிறகு இந்நபரும் அக்குழந்தையை அவசர அவசரமாக. அதன் தாயிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டு சென்றுள்ளார்.
செல்லும் வழியில் தனது மனைவிக்கு குழந்தையை எடுத்துச் செல்லுமாறு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திக் கூறியுள்ளார்.
அதற்கு அவர் தனக்கு வர முடியாதுள்ளதெனக் கூறியுள்ளார். இதனால் இருவரிடையே பரஸ்பர கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. குழந்தையை எடுத்துச்செல்ல தன்னால் வர முடியாதெனவும் தனது அம்மா அங்கே வந்து குழந்தையை எடுத்துச் செல்வார் என்றும் கூறியுள்ளார்.
இதனைக்கேட்டு ஆத்திரத்தினாலும் எரிச்சலாலும் தனது கையில் இருப்பது பச்சிளம் குழந்தையென்றும் பாராமல் அதனை அங்கிருந்த கற்பாறையில் அடித்துள்ளார்.
இக்காட்சியை நேரில் கண்டதால் அதிர்ச்சியில் உறைந்து போன அக்குழந்தையின் பாட்டி வாய்விட்டு அலறியுள்ளார். அந்த வழியால் சென்றுகொண்டிருந்த சிறுமி இக்காட்சியை நேரில் கண்டுள்ளார். இது அச்சிறுமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அங்கிருந்து விறுவிறுவென ஓடி அருகாமையிலுள்ள பொலிஸ்நிலையத்தை அடைந்துள்ளார். இசம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பேருவளை புபுலவத்தையை வதிவிடமாகக் கொண்ட 29 வயதுடையவராவார். இந்நபரின் மனைவி பயாகலையைச் சேர்ந்தவராவார்.
இந்நபர் பொலிஸாருக்கு அளித்த வாக்கு மூலத்தில், நானும் எனது மனைவியும் எமக்கிடையிலான கருத்து வேறுபாட்டினால் பிரிந்துள்ளோம். அதன்படி எனது மனைவி அவளது தாயின் வீட்டில் மூன்றுமாதகாலமாக வசித்து வருகிறாள்.
குழந்தையின் மீது தகப்பன் என்ற முறையில் எனக்கு உரிமையிருப்பதால் ஒவ்வொரு வார இறுதியிலும் ஞாயிற்றுக்கிழமையில் குழந்தையை சில மணித்தியாலங்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று பார்வையிடுவதென்று உடன்பாடொன்றுக்கு வந்தோம்.
அதற்கமையவே கடந்த ஞாயிற்றுக்கிழமையும் அக்குழந்தையை பார்வையிடுவதற்காக அதனை எனது வீட்டுக்கு எடுத்துச்சென்றேன். அங்கே நன்றாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் வாந்தியெடுத்தது.
அதனால் எனது மனைவியை தொலைபேசிவாயிலாக தொடர்புகொண்டு குழந் தையை எடுத்துச் செல்லுமாறு கூறி னேன். ஆனால் அவளோ அதனை தன் தாய் வந்துபெற்றுச் செல்வாள் என்று கூறினாள்.
இதனால் எனக்கு ஆத்திரம் வந்தது. அதனால் அச்சமயத்தில் என் சுயநினைவையே இழந்து இச்செயலைசெய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
சந்தேநகநபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பேருவளை பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக் ஷ, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரணவீர மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஜயந்த ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
-கே.நிரோஷ்குமார்-