தமிழர்கள் சுயமரியாதையுடன் நியாயபூர்வமான அபிலாஷைகளைப் பெற்றுக் கெளரவமாக வாழ்வதற்குரிய இலக்கை அடைவ தற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய பின் கூறிய கருத்தும் மொனராகலையில் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தும் இன்றைய அரசியல் போக்கில் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பற்றும் கருத்தாகக் கொள்ளப்படுகிறது எனலாம்.
மொனராகலை – விபுலானந்த வித்தியாலய வைபவமொன்றில் இவ்வாரத்தின் முற்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கலந்துகொண்டு தமிழில் பின்வருமாறு உரையாற்றி யிருந்தார்.
தமிழ் மக்களுக்கு இலங்கையே தாய்நாடு. நமக்கென்று வேறுநாடுகள் எதுவுமில்லை. தமிழ் மக்களுக்கு எந்த நாடும் தாயகமல்ல. எனவே, அவர்களை எவரும் பொறுப்பேற்கவும் மாட்டார்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்ததோடு பின்வருமாறும் கூறியிருந்தார்.
”எமக்கு வடக்கு, தெற்கு, சிங்களம், தமிழ் என்ற பேதமில்லை. நாம் அனைவரும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வகையில் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தையும் நாட்டையும் பாதுகாப்போம்” என ஜனாதிபதி சூளுரைத்திருந்தார்.
இதேவேளை, அமைச்சர் சம்பிக்க ரணவ க்க இவ்வாறு கூறியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ இலக்கிற்கு இந்தியாவின் புதிய அரசாங்கமும் துணைபோவது எமக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த இந்தியா முயற்சிக்குமாயின் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி, தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகிய மூவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நிலை சார்ந்த கருத்துக்களை கூறியிருந்தாலும் யதார்த்த அரசியலில் இம்மூவருடைய கருத்துக்களும் வெவ்வேறு அளவில் கனதி கொண்டதாகவே பார்க்கப்பட வேண்டும்.
இலக்கை அடைய இந்தியா உறுதுணை புரியும் என்று சம்பந்தன் கூறியிருக்கும் கருத்து இலங்கை அரசாங்கத்தாலும் அதன் தலைமைத்துவங்களாலும் கொள்ளப்படுகின்ற அர்த்தங்கள் விபரீதமானவையா என எண்ண வைக்கின்றது.
சம்பந்தன் தனது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின் தமது விஜயத்தின் பெறுபேறுகள் பற்றி அவர் விளக்கியபோதே மேற்கண்ட கருத்தைக் கூறியிருந்தார்.
தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகள், குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள், மீள்குடி யேற்றப்படாத நிலையில் இன்னமும் மக்கள் இருக்கிறார்கள். உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படாது இருப்பதுடன் இராணுவப் பிரசன்னம் அதிகமாகக் காணப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலைக்குள் வாழும் தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென்பது பற்றி கலந்துரையாடியுள்ளோமென சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி உட்ப ட்ட அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு கூட்டமைப்பினருக்கு வெற்றியளித்துள்ளதா? இல்லையா? என்பதற்கு அப்பால் இலங்கை அரசாங்கத்தையும் அது சார்ந்த தலைவர்களையும் கடுமையான சீற்றத்துக்கு உள்ளாக்கிவிட்டிருக்கிறது என்பது வெளிப்படையாக உணரப்படுகிற உண்மையாகும்.
அதன் ஒரு வெளிப்பாடாகவே அமைச்சர் சம்பிக்க ரணவக்க, கூட்டமைப்பின் தமிழீழத்துக்கு இந்திய அரசாங்கம் துணைபோகிறது எனச் சாடியிருந்தார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் கருத்துப்படி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனி நாட்டுக்கான முன்னெடுப்புக்களை சர்வதேச மயப்படுத்துகின்றது என்பது ஒரு குற்றச்சாட்டு. மறுபுறம் இந்தியாவின் புதிய அரசாங்கம் அதற்கு துணைபோய்க் கொண்டிருக்கிறது என்பது மறுபக்க குற்றச்சாட்டு.
இதில் முன்னைய விடயத்தை கருத்தில் எடுத்துக்கொள்ளுவோமாயின் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் முன்னைய காலப்பகுதியிலும் சரி, அதற்குப் பின்னைய காலப்பகுதியிலும் சரி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒன்றுபட்ட நாட்டுக்குள் சுயநிர்ணய உரிமையுடன் தமிழ் மக்கள் வாழும் அரசியல் தீர்வு சார்ந்த விடயத்தையே பேசிவந்திருக்கிறார்கள்.
நாட்டை துண்டாட வேண்டும். பிரிக்கப்பட வேண்டுமென்ற கருத்தை அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் வலியுறுத்தியதாகவில்லை. இரா.சம்பந்தன் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதை பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தியுள்ளார்.
இது மட்டுமன்றி விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதப் பல சமநிலை பெற்றிருந்த காலத்திலும் வடகிழக்குப் பிராந்தியத்துக்கு சுயாட்சி முறையான தீர்வொன்று கிடைக்கும் சந்தர்ப்பம் உருவாகுமானால் அதை ஏற்றுக்கொண்டு முன்னோக்கி நகர்வதற்கு முயற்சிக்க வேண்டுமென்பதை விடுதலைப் புலி அமைப்பினரிடமும் பகிரங்கமாகவும் இரகசியமாகவும் கூட மதியுரை நல்கியதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார்.
அதுவுமன்றி விடுதலைப் புலிகளுக்கும் இலங்கையரசாங்கத்துக்கும் பேச்சுவார்த்தைகள் நோர்வேயின் அனுசரணையுடன் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் சம்பந்தன் போன்ற அரசியல் ஞானம்பெற்றவர்களை முன்னிலைப்படுத்தவில்லையென்பதையும் இங்கு கவனம்கொண்டு பார்க்க வேண்டும்.
திம்பு பேச்சுவார்த்தைக்கு பின்னால் ஆன எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அரசியல்ஞானம் கொண்டவர்கள் உள்வாங்கப்படாததன் காரணமாக, குறிப்பாக வட கிழக்கின் பூகோள அரசியல் விவர்ணகர்த்தாக்கள் சேர்க்கப்படாததன் காரணமாக ஆயுத பலத்துக்கு சமமாக அரசியல் பலமோ, நியாயப்படுத்தல்களோ இல்லாததன் காரணமாக இனத்துவ சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள் மீது பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டதை நாம் அறிவோம்.
இந்த படுபயங்கரமான குற்றச்சாட்டுக்க ளின் கூட்டு மொத்த விளைவுகளே ஒரு இனத்தின் நியாயமான கோரிக்கைகளைக் கூட சின்னாபின்னப்படுத்தியுள்ளது என்பது உலகம் அறிந்த விடயம்.
அடுத்த விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கை அடைய இந்தியா துணை நிற்கப் பார்க்கிறது என்பது இலங்கையரசாங்கத்தின் இன் னொரு வகைக் குற்றச்சாட்டாகும்.
இலங்கைத் தமிழர்களின் சுதந்திரப் போரா ட்டம் அகிம்சை மயம்கொண்டதாகவே 1956 ஆம் ஆண்டு முதல் உருவாகி வளர்ந்து வந்திருக்கிறது. ஆயுதம் அல்லது தேசப்பிரி ப்பு என்ற சொல்லை அவர்கள் எச்சந்தர்ப்ப த்திலும் உச்சரித்ததாக வரலாற்றில் எந்த வரியிலும் குறிப்பிடப்படவில்லை.
1983 ஆம் ஆண்டுவரை அகிம்சைத் தத்துவம் கொண்ட உள்ளகம் கொண்ட போராட்ட ங்களையே தமிழ்மக்கள் நடத்திவந்திருக்கிறார்கள்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் 1978 மே 19 பயங்கரவாதத் தடைச்சட்டம் அதனைத் தொடர்ந்து 1979 ஜூலை 20 கொண்டு வரப்பட்ட பின்னைய பயங்கரவாதத் தடைசட்டம் 1981 ஆம் ஆண்டு (31.05.1981) இனக்கலவரம் 1983 ஆம் ஆண்டு உருவா கிய ஜூலைக்கலவரம் இதுதவிர யாழ்.நூலக எரிப்பு, யாழ்.தமிழாராய்ச்சி மகாநாட்டு (10.01.1974) குழப்பங்கள் போன்ற பல நூறு இனத்துவ துவாம்ஷங்கள் இந்தியாவின் உள்நுழைவுக்கு காரணமாகியது.
எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தேசம் கடந்து இந்தியப் பிராந்தியத்துக்கு கொண்டு சென்றவர்கள் விடுதலைப் போராளிகள்.
இதன் காரணமாக இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் புதிய பரிமாணங்களை சுமந்துகொண்டு புதிய திசைக்கு திரும்பிக்கொண்டது. ஆனாலும்கூட ராஜீவ் காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து அதன் வீரியம் வலு விழந்துபோன நிலையில் இந்தியாவின் கைகளிலிருந்து நழுவிக்கொண்டதையும் ஐரோப்பிய மத்தியஸ்தம் என்ற பரிமா ணத்தைப் பெற்றுக்கொண்டதும் உண்மையே.
இவ்வாறு இருக்கும்போது இந்தியாவின் புதிய அரசாங்கம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ இலக்குக்கு துணைபுரியப் பார்க்கின்றது என்ற குற்றச்சாட்டு புதிதாக முன்வைக்கப்பட்டுவருகின்றது.
இந்தியாவைப் பொறுத்தவரை அதன் தேசியக் கொள்கையும் பிராந்தியக் கொள்கையும் மிகவும் கவனமாகவும் தீர்க்கமாகவும் ஆராய்ந்து திட்டமிடப்படுகின்றவையாகும். இவ்வாறானதொரு நிலையில் தமிழீழ இலட்சியத்துக்கு இந்தியா துணைநிற்கின்றது என்பது ஒரு அர்த்தமற்ற கதைப்புனைவு என்றே கூறவேண்டும்.
புதிய இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை இலங்கை தமிழ்மக்கள் பலமான சுதந்திரத்துடன் தன்னாட்சி மயப்பட்ட தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் நியாயமான கரிசனை கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்பது உண்மையே.
அதற்கு ஏற்ற வழிமுறையாக தம்மால் முன்மொழியப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை பூரணமாக அமுல்படுத்த வேண்டுமென அழுத்தம் கொடுப்பதற்கு அவர்கள் பின்நிற்கப் போவதில்லை.
அதிலும் நரேந்திரமோடியின் திடகாத்திரமான கொள்கையில் எவரும் செல்வாக்கு செலுத்தமுடியாது என்பதும் அனைவரும் அறிந்த விடயமே. இப்படியான சூழ்நிலையை வைத்துக்கொண்டு புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக நடக்கப் பார்க்கிறது என்று கூறுவது ஒரு அர்த்தமற்ற கட்டுகதையாகவே நினைக்கத் தோன்றுகின்றது.
அடுத்த விடயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக ஷ மொனராகலையில் ஆற்றிய உரையின் நிதர்சனம் எவ்வாறு இருக்கின்றது என்பதை நோக்குவோம்.
தமிழ் மக்களுக்கு இலங்கையே தாய்நாடு. வேறு நாடுகள் அவர்களுக்கு தாயகமல்ல. எமக்கு வடக்கு, தெற்கு, தமிழ், சிங்களம் என்ற பேதமில்லை.
நாம் அனைவரும் இந்நாட்டில் பிறந்தவர்கள் என்ற கருத்துடன் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தையும் நாட்டை யும் பாதுகாப்போமென ஜனாதிபதி உயர்ந்த உண்மைகளை எடுத்துக் கூறியிருந் தார்.
”தமிழ் மக்களுக்கு இலங்கையே தாய்நாடு’‘ என்ற உண்மைக் கருத்துக்கு மாற்றுக் கருத்தேயில்லை. இருக்கவும் முடியாது. ஆனால், யதார்த்தம் அவ்வாறாகவா இருக்கின்றது என்பதை தேடிப் பார்க்கின்றபோது தான் உண்மை நிலை வேறாகக் காணப்படுகிறது.
சுதந்திரத்துக்குப் பின்னைய 66 வருடகால அனுபவங்களை உரைத்துப் பார்க்கின்றபோது கிடைக்கும் விடைகள் பூஜ்ஜியமாகவே காணப்படுகின்றன. உரிய அரசியல் சமத்துவம் கொண்டுவரப்படவில்லை. இவ்வாறு எவ்வளவோ காரியங்களில் தமிழ்மக்கள் மாற்றான்தாய் மனப்பாங்கோடே நடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தின் அதிர்வலைகளை ஜீரணிக்க முடியாத நிலையில் இவ்வாறான தாய்நாட்டுப் பற்று வியாக்கியானம் செய்யப்படுகின்றது.
அதுவுமன்றி கூட்டமைப்பினர் தமது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகத்திலுள்ள தலைவர்களையும் சந்தித்து வந்தமையும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றார்கள் என்ற செய்திகளும் இலங்கை அரசாங்கத்துக்கு கடும் விசனத்தை உண்டாக்கியிருக்கின்றதன் காரணமாகவே தமிழ் மக்களுக்கு இலங்கையே தாய்நாடு. வேறு நாடுகள் தாயகமல்ல என்ற கருத்து வலியுறுத்திக் காட்டப்பட்டிருக்கிறது.
தெரிந்தோ, தெரியாமலோ மொழி பண்பாடு, பாரம்பரியங்கள் ஆகியவற்றின் மூலவேராக இருப்பவர்கள் தமிழ்நாட்டு மக்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.
இலங்கைத் தமிழர்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக அனுபவித்து வரும் கொடுமைகளை அவர்கள் கண்ணூடாகவே கண்டு துன்பப்படுகின்றவர்கள். இவர்களின் தலையீ ட்டை உருவாக்கியவர்கள். இலங்கை அரசாங்கமே தவிர தமிழ் மக்கள் அல்லர் என்பதேயுண்மை.
இனவழிப்பு, இனச்சங்காரம், இன ஒடுக்கல் என்ற இன்னோரன்ன அட்டூழியங்களின் ஒன்றுதிரண்ட கொடுமையின் புறப் போரே! இன்றைய தமிழக மக்கள் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக மேற்கொண்டுவரும் போராட்டங்களா கும்.
இவற்றை சகிக்க முடியாத நிலையில் சுடலைஞானம் போல் தாய்நாடு இலங்கை தான் என்று பற்றுக்கோட்டை உருவாக்க முனைவது பயனற்ற விதைப்பாகவே இருக்க முடியும்.
இப்பற்றை உண்மையில் கொண்டுவர வேண்டுமானால் நியாயமான பரிகாரத்தை இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு காண வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால் இலங்கை மீது அதிக விசுவாசம் கொண்டவர்களாக அவர்களே இருந்திருக்கிறார்கள்.
அதன்மாற்று நிலைக்கு காரணகர்த்தாக்களாக விளங்குபவர்களே இனவாதிகளும் இலங்கையரசாங்கமுமாகும். ஜனாதிபதியின் இன்னொரு கருத்து மிகவரவேற்கத்தக்கதும் பாராட்டப்பட வேண்டிய கூற்றாகவும் கருதப்பட வேண்டியது. எமக்கு வடக்கு தெற்கு தமிழ் சிங்களம் என்ற பேதமில்லை என்ற கூற் றாகும்.
வடக்கு, தெற்கு பேதம் என்பது அரசாங்கத்தால் பார்க்கப்படவில்லையென வைத்துக்கொண்டாலும் இனவாத அமை ப்புக்களின் இன்றைய போக்குக்கள் சிறு பான்மை சமூகத்தின்மீது எத்தகைய அட்டூ ழியங்களை விளைவித்துவருகின்றது என் பது வெளிப்படையாகவே தெரியப்படுகின்ற உண்மைகளாகும்.
இந்த அரசாங்கத்தின் ஆட்சி அமைப்புக்குப் பிறகு ஜே.வி.பி., பொதுபலசேனா, ஜாதிக ஹெல உறுமய, பொதுசவிய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், ஜாதிக பலசேனா போன்ற இனவாத அமைப்புக்களின் கெடுபிடிகள் எவ்வளவு வேகமாக வளர்ச்சி கண்டுள்ள மையையும் இவற்றை கட்டுப்ப டுத் துவதற்கு ஆளும் அரசாங்கம் எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமையும் வெளிச்சம்போட்டு காட்டப்படக்கூடியவை.
இந்த இனவாத அமைப்புக்களுக்குப் பின்னால் அரசாங்கம் நின்று கொண் டிருக்கிறது என்ற குற்றச்சாட் டுக்கள் சிறுபான்மை சமூகத்தால் முன்வைக்கப் படுகின்றன. இந்த அமைப்புக்கள் வடக்கு கிழக்கு அதிகாரம் வழங்கப்படக்கூடாது.
வளப்பங்கீடு செய்யப்படக்கூடாது. பேரின சமூகத்தின் தயவிலேயே சிறுபான்மை சமூ கம் இருக்க முடியும். பெளத்தமும் சிங்கள முமே தேசியத் தன்மையுடையது என்று வலியுறுத்திவருகின்ற நிலையில் பேதம் பார் க்கப்படவில்லையென்பதில் என்ன உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.
இலங்கைக்கு கிடைக்கப்பட்ட சுதந்திரம் என்பது பிராந்திய விளைவுகளின் பரிசு. இச்சுதந்திரத்தை மனப்பூர்வமாகவோ ஏற்றுக் கொள்ளக்கூடிய விதத்திலோ தமிழ் மக்கள் அனுபவிக்கவிடப்படவில்லை.
சுதந்திரத்துக்குப்பின் உண்டாக்கப்பட்ட அரசியல் அமைப்பு திட்டங்கள் இன முஸ்தீப்புகள் ஒடுக்குமுறைகள் குறிப்பாக 2009 ஆம் ஆண்டுக்குப்பின் ஆயுதப் போரை முடிவு கட்டியதாக கூறப்படும் அகங்கார நிலையில் இரா.சம்பந்தன் கூறியதுபோல்….
வட கிழக்கின் இனப்பரம்பலை இல்லாது ஒழிக்கும் சாதுரியமான திட்டங்கள் இந்தப் பிரதேசத்துக்கு சொந்தமான தனித்துவமான பண்பாடுகளையும் பாரம் பரியங்களையும் மூடி மறைக்கும் செயல்கள் காணி அளப்புக்கள் என்ற இன் னோரன்ன செயல்கள் இந்த தேசத்தை தாய் நாடென்றோ இங்குதான் நாம் பிறந் தவர்கள் என்றோ பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை பேணவேண்டுமென்றோ எணணத் தூண்டப்படவில்லை.
அந்த எண்ணம் தூண்டப்பட வேண்டுமாயின் சிறு பான்மை மக்கள் சம உரிமை கொண்டவர்களாக சுயமுறையான வாஞ்சை கொண்டவர்களாக வாழ வழி சமைக்கப்படவேண்டும் அந்த அரசியல் மலர்வு கொண்டுவரப்படவேண்டும்.