ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகளை தன் பக்கம் திருப்பி ஆளெடுக்கும் பணியை மிச்சப்படுத்தவும் ஐஎஸ்ஐஎஸ் முயற்சித்து வருகிறதாம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத் உல் அஹ்ரார் தீவிரவாதிகள் ஏற்கனவே ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக திரும்பி விட்டனர். இந்த அமைப்பு பாகிஸ்தன் தலிபான் அமைப்பிலிருந்து பிரிந்து வந்ததாகும்.
ஜமாத் உல் அஹ்ரார் அமைப்பின் தலைவரான இசானுல்லா இசான் கூறுகையில், நாங்கள் அவர்களை மதிக்கிறோம். முழுமையான இஸ்லாமிய நாட்டை அவர்கள் உருவாக்க முயன்று வருகின்றனர். அதை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களது உதவியை அவர்கள் கேட்டால் நாங்கள் அதுகுறித்துப் பரிசீலிப்போம் என்றார்.
இளைஞர்களைக் குறி வைத்து தனது பக்கம் திருப்பி வருகிறதாம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரில் இந்த வேட்டையை அது தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல் கொய்தாவைப் பொறுத்தவரை அதற்கு இளைய தலைவர்கள் என்று யாரும் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அதன் தலைவர்களாக தற்போது உள்ளவர்களும் வயதானவர்கள்தான்.அவர்களும் கூட ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லைப் பகுதியோடு முடங்கி விட்டனர். முன்பு போல அவர்களால் ஆக்ரோஷமாக செயல்பட முடியாத நிலை. எனவே அல் கொய்தா தீவிரவாதிகளும் ஐஎஸ்ஐஎஸ் பக்கம் சாயும் ஆர்வத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் பெஷாவர், கிழக்கு ஆப்கானிஸ்தானில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு திரட்டும் துண்டுப் பிரசுரங்கள் சமீபத்தில் ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களால் விநியோகிக்கப்பட்டது. இது பாகிஸ்தான் நிர்வாகத்தை கவலை கொள்ளச் செய்துள்ளது.
மேலும் பெஷாவரில் ஐஎஸ்ஐஎஸ் ஸ்டிக்கர் பொருத்தப்பட்ட கார்களையும் காண முடிகிறது. இந்தப் புத்தகங்களை பலரும் ஆர்வத்துடன் வாங்குவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஸ்ரீநகரில் ஐஎஸ்ஐஎஸ் கொடியை சிலர் ஜூன் 27ம் தேதி ஏற்றி பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம். மேலும் சுவர் விளம்பரங்களும் எழுதப்பட்டன.
இருப்பினும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் இந்தியாவுக்கு எத்தகைய ஆபத்துகள் வரும் என்பது தெரியவில்லை. அதேசமயம், பேராபத்துக்கு வாய்ப்பில்லை என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கல்லூரி மாணவர்களிடையே குவியும் ஆதரவு. உலக நாடுகள் அச்சம்.
07-09-2014
ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக தீவிரவாத போராட்டம் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பட்டதாரி ஆண்களும் பெண்களும் நாள்தோறும் இணைந்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேருவதற்காக இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, போன்ற நாடுகளில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருவதாகவும், இவர்கள் ஃப்ரீலேன்ஸாராக அந்தந்த நாடுகளில் இருந்தே தீவிரவாத அமைப்பிற்கு ஆன்லைன் மூலம் ரகசிய தகவல்களை பகிர்ந்து சேவை செய்து வருவதாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருசில முஸ்லீம் கல்லூரி மாணவிகளும் இந்த இயக்கத்தில் இணைந்து தீவிரவாத இளைஞர்களை திருமணம் செய்துகொண்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;
சமீபத்தில் ஸ்காட்லாந்தை சேர்ந்த அக்ஸா மஹ்மூத் என்ற கல்லூரி மாணவி சிரியாவிற்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி ஒருவரை திருமணம் செய்துவிட்டதாக அவரே தனது பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளார். தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால் உலக நாடுகள் பெரும் கவலையில் உள்ளன.