யாழ். சிறைசாலையில் இருக்கும் கணவருக்கு முட்டை பொரியலுக்குள் கஞ்சாவை மறைத்து கொண்டு சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைசாலையில் இருக்கும் தனது கணவருக்கு நேற்று திங்கள் கிழமை (15) மாலை உணவு கொண்டு சென்ற மனைவி முட்டை பொரியளுக்குள் கஞ்சாவை மறைத்து எடுத்து சென்றுள்ளார்.
குறித்த பெண் கொண்டுவந்த உணவை பரிசோதித்த சிறைசாலை உத்தியோகத்தர் ஒருவர் முட்டை பொரியளுக்குள் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டு உடனே அப்பெண்ணை கைது செய்து யாழ் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
பொலிஸார் குறித்த பெண்ணை யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அப்பெண்ணை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிணையில் வெளியேறினார் கமலேந்திரன் (வீடியோ)
16-09-2014
வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சிதட தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணையில் செல்ல ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், இன்று செவ்வாய்க்கிழமை (16) அனுமதியளித்தார்.
இந்நிலையில், 2 இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில், கமலேந்திரன் விடுவிக்கப்பட்ட நிலையில் வெளியேறினார். கமலேந்திரனின் உறவினர்களில் ஒருவரே அவரை பிணையில் எடுத்தார்.
கமலேந்திரனை பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் கடந்த ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அனுமதி வழங்கினார்.
அத்துடன், வழக்கு முடிவடையும் வரையில் யாழ்ப்பாணத்தில் கமலேந்திரன் இருக்க முடியாது எனவும், வாரத்தில் ஒரு நாள், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
பிணை வழங்கப்பட்டு இதுவரை காலமும் பிணையெடுப்பதற்கு ஆட்கள் இல்லாமல் இருந்த கமலேந்தினை அவரது உறவினர் ஒருவரே இன்று செவ்வாய்க்கிழமை (16) பிணையிலெடுத்தார்.
அத்துடன், இந்த வழக்குடன் தொடர்புடைய றெக்ஷிசனின் மனைவி அனிடா, கடந்த 9ஆம் திகதி பிணையில் விடுதலையானார்.
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன், கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த கொலை தொடர்பில், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி, பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கொழும்பில் வைத்து கைது செய்தனர். அத்துடன் றெக்ஷிசனின் மனைவி அனிடா மற்றும் மேலும் ஒரு இளைஞர் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொலை தொடர்பிலான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்ற நிலையில், கடந்த 9 மாதங்களாக இடம்பெற்று மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கமலேந்திரன் மற்றும் அனித்தா ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கடந்த பெப்ரவரி மாதம் யாழ்.மேல் நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த பிணை மனுவிற்கு இணங்க ஓகஸ்;ட் 29ஆம் திகதி கமலேந்திரன், அனிடா ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. எனினும், மூன்றாவது சந்தேகநபரான இளைஞருக்கு பிணை மனு தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.