கடந்தவாரம் குருணாகல், வெல்லவ பிரதேசத்தில் கடத்தப்பட்டு, பின்னர் மீட்கப்பட்ட நாலரை வயது சிறுமி தமாரா கேஷனி என்ற சிறுமியை கடத்தியவர் பிரதேச வாசிகளின் உதவியுடன் நேற்று முன்தினம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
குறித்த கைதுசெய்யப்பட்ட 31வயதான ‘கிறீஸ் காமினி என அழைக்கப்படும் சந்தேக நபர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் என விசாரனைகளிலிருந்து தெரியவந்துள்ளதா குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக புதையல் ஒன்றை எடுப்பதற்கு பலிகொடுப்பதற்காகவே குறித்த சிறுமியை சந்தேக நபர் கட்த்தியிருக்கலாம் என சந்தேகம் நிலவியது.. எனினும் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட சிறுமி பெரியவளானதும் தான் திருமணம் செய்துகொள்ளவே தான் கடத்தியதாக குறித்த சந்தேக நபர் பொலிசாரிடத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
சிறுமியை கடத்திய கிறீஸ் காமினி உள்ளாடைகளை திருடுபவராம்: பொலிஸ் விசாரணைகளில் தகவல்
15-09-2014
குருணாகல், வெல்லவ பொலிஸ் பிரிவில் கனேவத்தை – பன்னவ,அம்பகொலவெவ பிரதேசத்தில் நாலரை வயது சிறுமி தமாரா கேஷனி பண்டார விஜேகோன் என்ற சிறுமியை கடத்திய ‘கிறீஸ் காமினி’ எனப்
படும் 32 வயதுடைய பிரதான சந்தேக நபருக்கு எதிராக பெண்களின் உள்ளாடைகளை திருடிய குற்றச்சாட்டுக்கள் பொலிஸ் நிலையத்தில் உள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரை தடுத்து வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமியை மீட்ட போது தப்பிச் சென்ற குறித்த பிரதான சந்தேக நபரான ‘கிறீஸ் காமினி’ என அழைக்கப்படும் காமினி என்பவரை பொதுமக்களின் உதவியுடன் வெல்லவ பொலிஸ் பிரிவின் தீகம பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
நேற்று மாலை 6.00 மணியாகும் போதும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விஷேட குழு அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் முன்னதாக கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒன்பதாம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் சிறுமியை கடத்திய சந்தேக நபர் முதலில் அவரை அரங்கல எனும் பெயரால் அழைக்கப்படும் மலைக்கு கொண்டு சென்று அங்கு இரண்டு நாட்கள் சிறுமி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன் சிறுமி கடத்தப்பட்டது முதல் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயம் தெரிந்த எவரேனும் அதுகுறித்து தெரிந்திருந்தும் பொலிஸாருக்கு தகவல் கொடுக்காது இருந்திருப்பின் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று முன் தினம் பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது வெல்லவ பொலிஸ் நிலையத்தை சுற்றி ஊர் மக்கள் ஒன்றிகூடியிருந்தனர். இந் நிலையில் கைது செய்ய முன்னர் பொதுமக்களால் சந்தேக நபர் தாக்கப்பட்டுள்ளமையும் பொலிஸார் சென்று அவரை கைது செய்யும் போது அவர் நிர்வாணமாக காயங்களுடன் இருந்ததாகவும் விசாரணைக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இதனிடையே குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கடத்தப்பட்ட சிறுமி தமாரா கேஷினியும் நேற்று முன் தினம் வீடு திரும்பினார்.
அத்துடன் சிறுமி கடந்த வெள்ளியன்று மாலை மீட்கப்படும் போது கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரின் தாயையும் சகோதரரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருணாகல் நீதிவான் நீதிமன்றின் மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன் தினம் இரவு அவர்கள் நீதிவானின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சிறுமி தமாரா கேஷனி கடத்தப்படும் போது அவரது வீட்டு பொலித்தீன் சுவரும் நுளம்பு வலையும் வெட்டப்பட்டிருந்ததுடன் அங்கிருந்த சிறுமியின் தாயாரின் இரவு நேர உடைகளும் துண்டு துண்டாக வெட்டப்பாட்டிருந்தன.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய விசாரணைக் குழு கடத்தல் காரர் ஏதேனும் மன நிலை தொடர்புடைய நோயை கொண்டிருக்க வேண்டும் என சந்தேகத்திருந்தனர்.
இந் நிலையில் பிரதான சந்தேக நபரான கிறீஸ் காமினி இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுபவர் என்பதும் பெண்களின் உள்ளாடைகளை திருடிய குற்றச்சாட்டுக்கள் அவர் மீது இருப்பதும் தெரியவந்துள்ளது. மனைவியை விட்டு பிரிந்து வாழும் குறித்த நபர் பலவேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பதால் சிறுமியை கடத்தும் ஒப்பந்ததை இவருக்கு வேறு எவரேனும் வழங்கினார்களா எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
இதனிடையே தனது பிள்ளை கைக்கு கிடைக்கும் வரை எவரும் தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் எனவும் பிள்ளை கிடைத்ததும் எல்லாவற்றையும் கூறுவதாகவும் சிறுமி தமாரா கேஷனியின் தாய் ஊடகங்களிடம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட விடயமும் பொலிஸாரின் விசாரணைகளில் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
புதையலுக்கு பலியிட சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் வேறு காரணங்கள் கடத்தல் தொடர்பில் உள்ளதா என்ற கோணத்தில் சிறுமியின் தாயின் கூற்றை தொடர்புபடுத்தி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.