யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகிவிட்டன. ஆறாவது வருடத்தை நோக்கி காலம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் இனப்பிரச்சினைக்கும் அந்தப் பிரச்சினையில் இருந்து கிளைவிட்டுள்ள எத்தனையோ பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்குரிய சமிக்ஞைகளைக்கூட காண முடியவில்லை.
இனப்பிரச்சினைக்கோ அல்லது அதன் காரணமாகப் பல்கிப் பெருகியுள்ள பிரச்சினைகளுக்கோ தீர்வு காண வேண்டும் என்ற அக்கறையோ ஆர்வமோ அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லை.
மேலும் மேலும் பிரச்சினைகளை உருவாக்கி அவற்றில் மக்களின் கவனத்தையும், தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளின் கவனத்தையும் திசை திருப்புவதிலேயே குறியாக இருப்பதைத்தான் அரசாங்கத் தரப்பில் காண முடிகின்றது.
தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்று அரசாங்கம் ஒற்றை வரியில் தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்கு இதுவரையில் முன்வரவில்லை.
ஆனால், பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகளை உருவாக்கிவிட்டு, வெளியுலகிற்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆர்வம் கொண்டிருப்பதாகவும், அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் காட்டுவதில் மிகவும் தீவிரமாக இருக்கின்றது.
மோசமான ஒரு யுத்தத்திற்கு முகம் கொடுத்து, அழிவுக்கு உள்ளாகியிருக்கின்ற நாட்டை அந்த அழிவுகளில் இருந்து மீட்டு, மீண்டும் கட்டியெழுப்புவதில் நேர்மையாகவும், உளப்பூர்வமாகவும் ஈடுபட்டிருப்பதாக அரசாங்கம் காட்டி வருகின்றது.
பாரிய செலவில் கண்டோரை மயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காப்பட் வீதிகளும் புதுப்பொலிவோடு தகதகக்கின்ற புதிய கட்டிடங்களும் அரசாங்கத்தின் இந்த ஷோ காட்டலுக்குப் பெரிதும் கைகொடுத்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.
யுத்த காலத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்டு குண்டும் குழிகளுமாக இருந்த வீதிகள், இப்போது வாகனங்கள் இலகுவாக வழுக்கியோடத்தக்க வகையில் – ஒரு சில மணித்தியாலங்களிலேயே நாட்டின் ஒரு மூலையில் இருந்து மறு மூலைக்குச் சென்றுவிடத்தக்க விதத்தில் மறுசீரமைக்கப்பட்டிருக்கின்றன.
நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும், அங்கிருந்து வெளியிடங்களுடன் இலகுவாகத் தொடர்புகளை ஏற்படுத்தத்தக்க வகையிலான நவீன தொலை தொடர்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
இதற்கும் மேலாக மேற்கத்தய நாடுகளைப் பின்பற்றி, செல்லுமிடங்களில் எல்லாம் நல்ல உணவுகளை உண்டு, வசதியாகத் தங்கியிருப்பதற்குரிய சுற்றுலா விடுதிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் முன்னர் மோதல்கள் இடம்பெற்ற இடங்கள் எல்லாம் அத்தகைய மோதல்கள் இடம்பெற்றனவா என்று சந்தேகத்தோடு கேட்கத்தக்க வகையில் உருமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன என்றே கூற வேண்டியிருக்கின்றது.
ஓமந்தை சோதனைச்சாவடி
யுத்த காலத்தில் இருந்த கடுமையான கெடுபிடிகள் எதுவும் இப்போது கிடையாது. வீதித்தடைகள் இல்லை. யாரும் எங்கும் செல்லலாம். எந்த வேளையிலும் எந்த இடத்திற்கும் போய் வரலாம் என்ற வகையில் நிலைமைகள் இப்போது மாற்றப்பட்டிருக்கின்றன.
இதனால், யுத்தம் முடிவடைந்ததையடுத்து மக்கள் மீள்குடியேற்றப் பகுதிகளில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றார்கள் என்று வெளியிடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களை இலகுவாக நம்பத்தக்க வகையில் அரசாங்கத்தினால் கூறக் கூடியதாக இருக்கின்றது.
யுத்த காலத்தில் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல முடியாது. இந்தப் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விடுதலைப்புலிகள் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அவர்கள் மோசமான பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்று அரசாங்கம் வாய்கூசாமல் இப்போது கூறக் கூடியதாக இருக்கின்றது.
யுத்தம் நடைபெற்ற பிரதேசங்கள் மீது மோசமான பொருளாதாரத் தடைகளையும், பிரயாணத் தடைகளையும் அரசாங்கம் மேற்கொண்ருந்தது என்பதும், அதேபோன்று யுத்தச் சூழலுக்கு ஏற்ற வகையில் தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் விடுதலைப்புலிகளும் பல்வேறு தடை நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தார்கள் என்பதுதான் அப்போதைய யதார்த்தமாகும்.
ஆயுத மோதலில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினருமே தமது பாதுகாப்பிற்காகப் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அப்போது நடைமுறைப்படுத்தியிருந்தார்கள். அதனால் பொதுமக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
மொத்தத்தில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்றும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்றும் இரண்டாக நாடு அப்போது பிளவுபட்டுக் கிடந்தது.
ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்குச் செல்பவர்கள், ஒரு நாட்டில் இருந்து மற்றுமொரு வேற்று நாட்டிற்குச் செல்லும் உணர்வுடனேயே சென்று வந்தார்கள். அந்த அளவில் கட்டுப்பாடுகளும், போக்குவரத்து நடைமுறைகளும் அப்போது நடைமுறையில் இருந்தன.
இந்த நடைமுறைகளின் கஷ்டங்களையும் சிரமங்களையும், நேரில் கண்டவர்களும், அவற்றை அனுபவித்தவர்களும் நன்கு அறிவார்கள்;. இவற்றின் ஓர் அடையாளமாகவே இப்போதும், வவுனியாவுக்கு வடக்கே, ஏ9 வீதியில் ஓமந்தை சோதனைச்சாவடி திகழ்கின்றது.
நாட்டில் யுத்தம் முடிந்துவிட்டது. விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். பயங்கரவாதத்தை இல்லாமல் ஒழித்துவிட்டோம். நாட்டில் அமைதி ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள் என்று அரசாங்கம் கூறுகின்றது.
அப்படியானால் ஓமந்தை சோதனைச்சாவடியை ஏன் இன்னும் வைத்திருக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு தேசிய பாதுகாப்புக்காகவே அதனை வைத்திருக்கின்றோம் என்று அரசாங்கத்திடமிருந்து சுற்றுமாத்து ரீதியிலான பதிலே சொல்லப்படுகின்றது.
யுத்தம் முடிந்துவிட்ட போதிலும், யுத்த மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து இராணுவத்தை அரசாங்கம் இன்னும் விலக்கிக்கொள்ளவில்லை. யுத்தம் இல்லாத இடத்தில் அமைதி நிலவுகின்ற ஒரு பிரதேசத்தில் இராணுவத்தின் பிரசன்னம் அவசியமற்றது என்பதே பொதுவாக மக்களின் கருத்தாகும்.
இராணுவத்தினரை யுத்த வீரர்கள் என்றும் குறிப்பிடுவார்கள். யாருடனும் சண்டை செய்வதற்காகவே இராணுவத்தினரை அல்லது யுத்த வீரர்களைப் படையணிகளாக அரசாங்கங்கள் வைத்திருக்கின்றன. வைத்துப் பராமரிக்கின்றன.
யுத்தம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்கூட இயற்கையாக அல்லது செயற்கையாக இடர்கள் ஏற்படும் வேளைகளில் அவற்றில் சிக்கித் தவிப்பவர்களைக் காப்பாற்றுவதற்கும், அவர்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் இராணுவத்தினரை அரசாங்கங்கள் பயன்படுத்துவது வழக்கம்.
ஆனால் இலங்கையில் யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில், யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கழிந்த நிலையிலும் இராணுவத்தினர் இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை.
மாறாக அவர்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை மேலும் மேலும் வசதிகளுடன் வைத்திருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
சுருக்கமாகச் சொல்வதானால், இராணுவத்தினரை, வடபகுதியின் பொதுமக்களாக மாற்றி அவர்களை அங்கேயே நிரந்தரக் குடிகளாக்குவதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது.
விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இன்னும் இருக்கின்றன. அவர்கள் இன்னும் வெளிநாடுகளில் இருக்கின்றார்கள். அங்கிருந்து கொண்டு இங்கு மீண்டும் பயங்கரவாதத்திற்கு உயிர் கொடுக்க முயற்சிக்கின்றார்கள். எண்ணற்ற இராணுவத்தினரின் உயிர்த்தியாகத்தின் மூலம் நாங்கள் அடைந்துள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அடைந்துள்ள வெற்றியை இல்லாமல் செய்ய முடியாது.
அந்த வெற்றியை நாங்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். தேசத்தின் பாதுகாப்பை நாங்கள் ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு செயலிலும் நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகத்தான் வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கின்றார்கள்.
அது மட்டுமல்லாமல், அவர்கள் மீள்குடியேறியுள்ள பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவும் காரியங்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்கள் யாரையும் அச்சுறுத்துவதில்லை.
எவருக்கும் இடையூறு ஏற்படுத்துவதுமில்லை. பொதுமக்களோடு அவர்கள் அந்நியோன்னியமாகப் பழகி வருகின்றார்கள். இராணுவத்திற்கும் தமிழ் மக்களுக்கும் நல்ல உறவு ஏற்பட்டிருக்கின்றது என்று அரசாங்கம் கூறுகின்றது.
சுயமாக ஆளக் கூடிய ஆட்சி முறைமை
வடமாகாணம் என்பது முற்று முழுதாக தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசமாகும். இதேபோன்று, கிழக்கு மாகாணமும் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வரும் பிரதேசமாகும். இதனால்தான் வடக்கையும் கிழக்கையும் தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசம் என்று சொந்தம் கொண்டாடி வருகின்றார்கள்.
அந்தப் பிரதேசங்களில் அவர்கள் தமது கலை கலாசாரம், பண்பாடு என்பவற்றையும், தமது சமய வழிபாடுகளையும் காலம் காலமாகப் பின்பற்றி வந்துள்ளார்கள். இவற்றுக்கான வரலாற்று அடையாளங்கள், வரலாற்றுச் சான்றுகள் என்பன தாராளமாகவே அந்தப் பிரதேசங்களில் காணப்படுகின்றன.
இதற்கும் அப்பால், அந்தப் பிரதேசங்களில் அவர்களின் வாழ்க்கை முறைகள், நிர்வாகச் செயற்பாடுகள் என்பவற்றைக் குறிக்கும் வகையில் தேச வழமைச்சட்டங்களும் நடைமுறையில் இருந்து வருகின்றன.
இவற்றின் அடிப்படையிலேயே வடக்கு கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது பிரதேசத்தைத் தாங்களே சுயமாக ஆளக்கூடிய ஆட்சிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று கோருகின்றார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கையை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஏற்க மறுத்ததன் விளைவாகத்தான் தனிநாட்டுக்கான ஈழக் கோரிக்கை எழுந்தது. அதனையொட்டி, ஆயுத மோதல்களும் ஏற்பட்டிருந்தன.
பூர்வீக தாயக நிலத்தில் தம்மைத்தாமே ஆள வேண்டும் என்ற அரசியல் உரிமைக்கான போராட்டத்தையே இந்த அரசாங்கம், 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்க நியூயோர்க் நகரத்தின் இரட்டைக் கோபுரத்தின் மீதும்,
பென்டகன் எனப்படும் அந்த நாட்டின் பாதுகாப்புத் தலைமையகத்தின் மீதும் அல்கைதா இயக்கத்தினரால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து எழுந்திருந்த பயங்கரவாதத்திற்கு எதிரான உலக ஒழுங்கு போக்கைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, அவர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை பல நாடுகளின் ஒத்துழைப்புடன் தீவிரப்படுத்தி, விடுதலைப்புலிகளை ஆயுத ரீதியாக ஒழித்துக்கட்டியது.
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த போதிலும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் அரசு ஆக்கபூர்வமாக இதுவரையில் முன்னெடுக்கவில்லை.
விடுதலைப்புலிகளின் மறைவையடுத்து, தமிழ் மக்களின் அரசியல் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன், காலத்தைக் கடத்தி போக்கு காட்டும் வகையில், போலியான ஒரு பேச்சுவார்த்தையை அரசு நடத்தியிருந்தது.
ஆயினும் பேச்சுவார்த்தை மூலமாகத்தான் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற வெற்று அரசியல் கோஷத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு வசதியாக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அரசு அமைத்திருக்கின்றது.
அந்தக் குழுவில் சேர்ந்து பேச்சுவார்த்தைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ள வேண்டும். அந்தக் குழுவில் பங்குபற்றினால் மாத்திரமே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று பிடிவாதமாக அரசாங்கம் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது.
இந்தப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தைகள் ஒருபோதும் அர்த்தமுள்ளதாக அமையமாட்டாது. அந்தக் குழுவில் இடம்பெற்றிருக்கின்ற அரச சார்பு தீவிரவாதக் கட்சிகள் தமிழ் மக்ளுக்கு நியாயமான ஒரு தீர்வை வழங்குவதற்கு ஒருபோதும் முன்வரப் போவதில்லை.
என்பது அனுபவரீதியாக உணர்ந்திருப்பதன் காரணமாக, இந்தத் தெரிவுக்குழுவுக்கு வரப்போவதில்லை என்று கூட்டமைப்பும் தீர்க்கமாக முடிவெடுத்து அதனை அரசாங்கத்திற்குத் தெரிவித்திருக்கின்றது. இந்த நிலையில்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய பேச்சுவார்த்தைகள் ஒரு முட்டுக்கட்டை நிலையில் தேங்கிக்கிடக்கின்றது.
மறுபக்கத்தில் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினருக்காகப் பொதுமக்களின் காணிகளை அபகரிப்பதிலும், பொதுச் செயற்பாடுகள், அரசியல் செயற்பாடுகள் என்பவற்றில் ஈடுபடுகின்ற பொது மக்களையும் அவர்களின் சட்டரீதியான பிரதிநிதிகளையும் தொடர்ச்சியாகவும் வெளிப்படையாகவும் கண்காணிக்கின்ற நடவடிக்கையில் இராணுவத்தினர், ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனநாயக வழிமுறையிலான பொதுமக்களின் செயற்பாடுகளை, அரசுக்கு விரோதமான நடவடிக்கைகளாகக் காட்டி, அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை இராணுவத்தினர் அச்சுறுத்தி வருவதாக வடமாகாண முதலமைச்சர் தொடக்கம், அந்தப் பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.
காணி அபகரிப்பும், பொதுமக்களைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அவர்களை அச்சமடையச் செய்வதும், பகிரங்கமாக இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு, பெரும்பான்மையான தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள கூட்டமைப்பினர் வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள்.
இராணுவத்தினரிடமிருந்தே மக்களுக்கு இன்று பாதுகாப்பு தேவைப்படுகின்றது. மற்றும்படி, அவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் அவசியமில்லை என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடபகுதி மக்களின் இன்றைய நிலைமை குறித்து தெளிவாகக் கூறியிருக்கின்றார்.
இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில்தான் வரும் டிசம்பர் மாதத்திற்கிடையில், இந்த நெருக்குவாரங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது 15 ஆவது தேசிய மாநாட்டில், தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றது.
இந்த தீர்மானமானது, அரசாங்கத்தினாலும் வேறு சிலராலும் இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. காலக்கெடுவுடன் கூடிய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு நிபந்தனையாகவும் சிலர் இதனைக் கருதுகின்றார்கள்.
புதிய பாதைக்கு வழிகோலுமா?
தமிழ் மக்கள் மீதான நெருக்குவாரங்கள் டிசம்பர் மாதத்திற்கிடையில் முடிவுக்குக் கொண்டு வரப்படாவிட்டால், ஜனவரி மாதம் தொடக்கம் தொடர் சாத்வீகப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகிய மாவை சேனாதிராஜா அந்தக் கட்சியின் தேசிய மாநாட்டில் தெரிவித்திருக்கின்றார்.
அரசாங்கத்திற்கு பகிரங்கமாக விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவித்தலானது, தேர்தல் காலத்தைக் கருத்திற்கொண்டு விடுக்கப்பட்ட ஒன்றாகக் கருத முடியவில்லை. அதேநேரம் புதிய பொறுப்பை ஏற்றுள்ள நீண்டகால அரசியல்வாதியாகிய மாவை சேனாதிராஜா, ஓர் அரசியல் ஸ்டன்டுக்காகக் கூறிய வார்த்தைகளாகவும் இதனைக் கொள்ள முடியவில்லை.
ஆயினும், இந்த நிலைப்பாடு குறித்து தமிழரசுக் கட்சியின் மாநாட்டிற்குப் பின்னர் அரசாங்கம் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கின்றாரே தவிர, கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா மேலதிக விளக்கம் எதனையும் கூறவில்லை.
தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில், போராட்டம் என்பதே வாழ்க்கையாகியிருக் கின்றது. சொந்தக் காணிகளில் மீள் குடியேறு வதற்கு, சொந்தக் காணிகளைப் பெறுவதற்கு, மீள்குடியேறிய பின்பும், நிரந்தர வீடு ஒன்றைப் பெறுவதற்கு, நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு, சாதாரணமாக ஒரு தொழிலைப் பெற்று சீவிப்பதற்கு என்று எல்லாவற்றுக்குமே போராட்டம் நடத்த வேண்டியவர்களாகவே இருக்கின்றார்கள்.
இந்த நிலையில் நெருக்குவாரங்கள் நிறுத்தப் படாவிட்டால், மாநாட்டில் அறிவித்திருப்பதைப் போன்று தமிழரசுக் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்குமா, அவ்வாறு முன்னெடுத்தால் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகளுக்கு எவ்வாறு அந்தக் கட்சி முகம் கொடுக்கப் போகின்றது, அத்தகைய ஒரு நிலைமைக்கு மக்களை எவ்வாறு தயார்படுத்துவது என்பது போன்ற கேள்விகள் இன்று பூதாகரமாக எழுந்து நிற்கின்றன.
அதேநேரம், தமிழரசுக் கட்சியின் இந்த அறிவிப்பு குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது என்பதும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகக் கருதப்படுகின்ற தமிழரசுக் கட்சியின் மாநாடு முடிவடைந்ததன் பின்னர், கூட்டமைப்பின் இணைப்புக் குழு கூட்டமோ அல்லது பாராளுமன்றக் குழு கூட்டமோ இன்னும் கூட்டப்படவில்லை.
சாத்வீகப் போராட்டத்தைப் பல இடங்களிலும் நடத்தப் போவதாகத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ள நிலையில் ஜனவரி மாதத்தில் அல்லது அந்தக் காலப் பகுதியில் காலத்துக்கு முந்தியதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இத்தகைய ஒரு முக்கியமான ஒரு தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சியினால் இத்தகைய சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுக்க முடியுமா, என்ற முக்கியமான கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்திருக்கின்றது.