தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலக்கூட்டணியில் ஏற்கனவே தேமுதிக இணைந்துள்ள நிலையில், இன்று தமாகா தலைவர் ஜி.கே.வாசனை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
இதைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் அலுவலகத்திற்கு வந்தார்.
அவரை தேமுதிக இளைஞரணி தலைவர் சுதீஷ் வரவேற்றார். பின்னர், விஜயகாந்தை அவர்கள் சந்தித்து பேசினர். இதையடுத்து, கட்சிகளுக்குள் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.
இந்த உடன்பாட்டில் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், ஜி.கே.வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அதில், தேமுதிக 104 தொகுதிகளிலும், மதிமுக 29 தொகுதிகளிலும், தமாகா 26 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 25 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு கேப்டன் எவ்வளவோ மேல்…!’ – கூட்டணியை இறுதி செய்த வாசன்
09-04-2016
‘அ.தி.மு.க கூட்டணிதான் ஒரே சாய்ஸ்’ என்று நம்பிக் கொண்டிருந்த வாசன், தற்போது மக்கள் நலக் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். இன்று விஜயகாந்தை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘அ.தி.மு.க அணியில் ஏழு சீட்டுகள் மட்டுமே கொடுப்போம். அதுவும் இரட்டை இலை சின்னம்தான்’ என ஜெயலலிதா உறுதியாகக் கூறியதால், ரொம்பவே நொந்து போனார் ஜி.கே.வாசன்.
கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசும்போது, ” நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியடையும் வகையில் கூட்டணி அமைய வேண்டும் என்றுதான் விரும்பினேன்.
அ.தி.மு.கவின் முடிவுக்கு நாம் கட்டுப்பட்டால், பதினைந்து மாதம் பாடுபட்டு வளர்த்த கட்சியை நாமே அடகு வைத்ததுபோல ஆகிவிடும். நமகென்று ஒரு கௌரவம் இருக்கிறது.
உண்மையான காங்கிரஸ் தொண்டர்களும் நம் பக்கம் இருக்கிறார்கள். பா.ம.கவுடன் சேர்ந்தால் டெபாசிட்தான் இழப்போம். எனவே, மக்கள் நலக் கூட்டணிதான் நம் கண்முன் பிரகாசமாக இருக்கிறது.
அ.தி.மு.க அணிக்கு சரியான போட்டியும் மக்கள் நலக் கூட்டணிதான். தி.மு.க, காங்கிரஸை மக்கள் ஒருபொருட்டாகவே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கேப்டனோடு சேர்ந்தால் கௌரவமான வெற்றியும் கிடைக்கும்” என்று சொல்லி உற்சாகப்படுத்தினார்.
இதனை, கட்சியின் சீனியர்களான ஞானதேசிகன், பீட்டல் அல்போன்ஸ், ஞானசேகரன் உள்ளிட்டவர்கள் ஏற்றுக் கொண்டனர். இதில், ஒருசிலர் தி.மு.க கூட்டணிக்குக் கடைசிவரையில் முயற்சி செய்தார்கள்.
சோனியாவின் கண்டிப்பான உத்தரவால், தி.மு.க அணியில் வாசன் இணைய முடியவில்லை. ‘இதுவும் ஒருவகையில் நல்லதுதான்’ என நினைத்த வாசன், ஒருவழியாக மக்கள் நலக் கூட்டணியை டிக் அடித்துவிட்டார்.
இன்று மதியம் 3 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வருகிறார்கள்.
அவர்களிடம் பேசிவிட்டு, சரியாக நான்கு மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.திக. அலுவலகத்தில் விஜயகாந்த்தை சந்திக்கிறார் வாசன். எத்தனை தொகுதிகள், எந்தெந்த இடங்கள் என்பதைப் பற்றியும் இன்றே இறுதி செய்கிறார்கள்.
இதுபற்றி நம்மிடம் பேசிய மக்கள் நலக் கூட்டணியின் நிர்வாகி ஒருவர், ” மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் வரும்போதே, முக்கியமான ஒரு கண்டிஷனையும் முன்வைத்தோம்.
புதிதாக வேறு எந்தப் பெரிய கட்சி வந்தாலும், அவர்களுக்கு தே.மு.தி.கவுக்கு ஒதுக்கிய இடங்களில் இருந்துதான் சீட் ஒதுக்க வேண்டும் என்று சொன்னோம்.
கேப்டனும் ஏற்றுக் கொண்டார். இதன்படி பார்த்தால், வாசனுக்கு 24 இடங்களை தே.மு.தி.க ஒதுக்கும். நாங்கள் சில இடங்களை ஒதுக்கவும் வாய்ப்பிருக்கிறது. 35 இடங்கள் வரையில் த.மா.காவுக்கு சீட் இறுதி செய்யப்படலாம்” என்றார் உறுதியாக.
மக்கள் நலக் கூட்டணியின் தோப்புக்குள் தென்னையும் இடம் பெற்றுவிட்டது. தேர்தல் முடிவில் எத்தனை தேங்காய்கள் காய்க்கும் என்பதும் தெரிந்துவிடும்.
ஆ.விஜயானந்த்