காலியில் நடக்கவுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினப் பேரணியில், பங்கேற்காத சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் மகிந்த சமரசிங்க.
கொழும்பில் இன்று நடத்திய ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், மேதினப் பேரணியில் பங்கேற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே கூட்டு எதிரணியினர் நடத்திய ஹைட்பார்க் கூட்டத்தில், பங்கேற்கும் சுதந்திரக் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
கட்சியின் மீதான அன்பினால் தான் அவர்கள் மீது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க பதிலளித்தார்.
“அவர்களைத் தண்டிக்கவில்லை என்பதை பலவீனமாக எடுக்கக் கூடாது. இம்முறை நிலைமைகள் வித்தியாசமானது.
கிருலப்பனையில் கூட்டு எதிரணியினரின் மேதினப் பேரணியில் பங்கேற்பவர்கள் மீது சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.
இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்குபற்றினால் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபற்றிய இறுதி முடிவு சிறிலங்கா அதிபராலேயே எடுக்கப்படும். ஏனென்றால் அவர் ஒரு முன்னாள் அதிபர். அத்துடன் கட்சியின் போசகரும் கூட” என்றும் அவர் தெரிவித்தார்.
சிகிச்சைக்காகவே அமெரிக்கா சென்றாராம் கோத்தா
18-04-2016
மருத்துவ சிகிச்சைக்காக தாம் வெளிநாடு சென்றிருப்பதால், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு முன்பாக இன்று முன்னிலையாக முடியவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படை விமானங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக, கோத்தாபய ராஜபக்ச இன்று அதிபர் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், அமெரிக்கா சென்றுள்ளதால் கோத்தாபய ராஜபக்ச இன்று ஆணைக்குழு முன் விசாரணைக்கு வரவில்லை.
எனினும், தாம் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருப்பதால், விசாரணைக்க வரமுடியவில்லை என்றும் ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக, ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் நாடு திரும்பியதும், விசாரணைக்கான புதிய நாள் அறிவிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
சிறிலங்காவின் புதிய காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர
18-04-2016சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக பூஜித ஜெயசுந்தர நியமிக்கப்படவுள்ளார். அரசியலமைப்பு சபை இன்று பிற்பகல் இவரை பெயரை சிறிலங்கா அதிபருக்குப் பரிந்துரை செய்துள்ளது.
சிறிலங்கா காவல்துறை மா அதிபராக இருந்த இலங்ககோன் ஓய்வு பெற்றதையடுத்தே, அந்த இடத்துக்கு பூஜித ஜெயசுந்தர நியமிக்கப்படவுள்ளார்.
புதிய காவல்துறை மா அதிபர் பதவிக்கு, பிரதி காவல்துறை மா அதிபர்களான எஸ்.எம்.விக்கிரமசிங்க, பூஜித ஜெயசுந்தர, சந்தன விக்கிரமரத்ன ஆகிய மூவரில் ஒருவரது பெயரைப் பரிந்துரைக்குமாறு அரசியலமைப்பு சபையிடம் சிறிலங்கா அதிபர் கோரியிருந்தார்.
இந்த நிலையிலேயே இன்று மாலை மூவரையும், நேர்காணல் நடத்திய அரசியலமைப்பு சபை, பூஜித ஜெயசுந்தரவை காவல்துறை மா அதிபர் பதவிக்கு நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபருக்கு பரிந்துரைத்துள்ளது.