உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் 45வது அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கிய வாக்குப்பதிவு, இன்று காலை 10.30 மணிவரை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு கென்டகி மற்றும் இன்டியானா மாகாணங்களில் வாக்குப்பதிவு முதலாவதாக நிறைவடைந்தது. இதையடுத்து 5:30 மணியளவில் ஃபுளோரிடா, விர்ஜினியா, ஜார்ஜியா, சவுத் கலிபோர்னியா மற்றும் வெர்மோன்ட் பகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.
இதன்பிறகு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவர தொடங்கியுள்ளன. சிஎன்என், ஃபாக்ஸ் செய்தி சேனல்கள் டொனாட்ல்ட் ட்ரம்ப் ஏறுமுகத்தில் இருப்பதாக கணித்துள்ளன. 538 பிரநிதிகளில் குறைந்தது 270 பிரநிதிகளை பெறும் கட்சி வேட்பாளர் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்ப்புக்கு கென்டகியில் 79.1 சதவீத வாக்குகளும், ஹிலாரிக்கு 18 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. இன்டியானாவில் டிரம்ப்புக்கு 69.3 சதவீத வாக்குகளும், ஹிலாரி கிளிண்டனுக்கு 27.5 சதவீத வாக்குகளும் கிடைத்தன. அதேநேரம் வெர்மோன்ட்டில் ஹிலாரிக்கு வெற்றி முகம் கிடைத்துள்ளது.
இந்திய நேரப்படி காலை 5.45 மணி நிலவரப்படி, டிரம்ப்புக்கு 19 உறுப்பினர்களும், ஹிலாரிக்கு 3 உறுப்பினர்களும் கிடைத்துள்ளனர். தெற்கு கலிபோர்னியா மற்றும் ஜார்ஜியாவில் இருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறது. புளோரிடாவிலும் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். இந்த டிரெண்ட் தொடருமாஇ அல்லது மாறுமா என்பது அடுத்தடுத்த சுற்றுகளில் தெரியவரும்.