உத்தரபிரதேச மாநிலத்தில் வங்கியில் பணம் செலுத்த சென்ற பெண் இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
குஷிநகர் மாவட்டத்தில் வங்கிகள் ஆயிரம் ரூபாய் நோட்டை இனி பெறாது என்ற பொய்யான செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பெண் உயிரிழந்தார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தீர்த்தராஜி என்ற 40 வயது பெண் சலவை தொழில் செய்து வந்து உள்ளார். தனக்கு கிடைத்த பணத்தை சேமித்து வைத்து அதனை இரு ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றி கையில் வைத்து வந்து உள்ளார்.
தேவையின் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வைத்து உள்ளார். இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பினால் தீர்த்தராஜி பெரும் கவலை மற்றும் குழப்பத்திற்கு உள்ளாகினார். இதனையடுத்து இன்று காலையில் தனது வங்கி கணக்கில் பணத்தை செலுத்திவிட இரண்டு 1,000 ரூபாய் நோட்டுக்களையும் கொண்டு சென்று உள்ளார். கேப்டைன்காஞ்ச் தாலுகாவில் இச்சம்பவம் நடந்து உள்ளது.
வங்கிகளுக்கு வெளியே டீ கடையில் கூடிய கூட்டத்தில் இருந்தவர்கள் வங்கிகள் இனி ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறாது என்று தவறான தகவல்களை பேசிஉள்ளனர்.
இது தொடர்பாக பலரும் பலவிதமாக பேசிஉள்ளனர். இதனால் தீர்த்தராஜிக்கு கவலை அதிகரித்தது. கஷ்டப்பட்டு சேமித்த காசு, கைவிட்டு போகிறதே என்று கவலையில் உறைந்து உள்ளார்.
இந்த அதிர்ச்சியில் அவர் உயிரிழந்தார். இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டு, பாஸ்புக்குடன் அவர் உயிரிழந்து கிடக்கும் புகைப்படங்கள் டுவிட்டரில் வைரலாக பரவிவருகிறது. பின்னர் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவித்த அவருடைய உறவினர்கள் சடலத்தை தூக்கிச் சென்றனர்.
குஷிநகர் மாவட்ட மாஜிஸ்திரேட் பேசுகையில், இறந்த தீர்த்தராஜியின் வீட்டிற்கு சென்று விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியின் மூலமாக நடைபெற்ற சம்பவம் என்பது உறுதிசெய்யப்பட்டால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதேபோல், மற்றொரு சம்பவத்தில், மஹுவா மாபி கிராமத்தில் நேரிட்டு உள்ளது. 8 வயது சிறுமிக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் வழியில், அவரது தந்தை பெட்ரோல் நிரப்ப சென்று 1,000 ரூபாய் நோட்டைக் கொடுத்து, பெட்ரோல் வங்கியில் சில்லறை பெற காலதாமதம் ஆனதால் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.