ரூபாய் தாள்கள் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று ஒரு படி மேலே சென்று, பிரதமர் மோடி மோசமான அரசியல்வாதி எனவும் பொய்களை பரப்புகிறார் என்றும் கடுமையாக விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநில முதல் மந்திரியும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“ மோடி அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்து விட்டார். மோசமான அரசியல்வாதி மோசமான நிர்வாகியாக அவர் திகழ்கிறார்.
அவர் பொய் கூறுகிறார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று பட்டு நிற்கின்றன. மோடி மட்டும் வேறுபட்டு நிற்கிறார்.
ரூ.500, 1000 தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ரூ.1.28 லட்சம் கோடி ரூபாய் ஏற்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு தடை இந்திய பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக பாதித்துள்ளதாக உலகின் மிகச்சிறந்த ஆய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது. சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோடிஜி இளைப்பாறிக்கொண்டு பொய்களை பரப்பி வருகிறார்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்திய மம்தா பானர்ஜி ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தார். மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நவம்பர் 28 ஆம் தேதி பேரணி நடத்தவும் திரிணாமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.