சென்னையை நோக்கி வரும் புயல் 2ம் தேதி கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது.
சென்னைக்கு தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது சென்னையில் இருந்து 1,070 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் புதுவையில் இருந்து 1,030 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 720 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இவ்வாறு மாறி வடமேற்கு திசையை நோக்கு நகரும். இது அடுத்த 24 மணிநேரத்தில் புயலாக மாறி சென்னையை நோக்கி வரும்.
இந்த புயல் வரும் 2ம் தேதி காலை சென்னை-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று இரவு முதல் லேசானது முதல் மிதமான மழையும், நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தவிர கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சில சமயத்தில் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசலாம். இதனால் இன்று இரவு முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
சென்னை, கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் திருச்சி, கோவை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட உள்மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.