நீண்ட கருமையான கூந்தல் பெண்களின் சாமுத்ரிகா லட்சணங்களில் ஒன்று. முக பொலிவுக்கு அழகை கூட்டுவது கூந்தல். அடர்த்தியான, சுருட்டையான, கூந்தலை அடைவதில் எல்லா பெண்களுக்கும் ஆசை. தலைமுடி நமது தோற்றத்திற்கு பொலிவு தருவதோடு மட்டுமல்லாது, கருகருவென மிளிரும் தலைமுடி ஆரோக்கியத்தின் அறிகுறி. தலைமுடி, வெய்யில், வெப்பம், இவைகள் மூளையை தாக்காமல் காக்கிறது.முகத்தை போலவே கூந்தல்களுக்கும் தனித்தன்மை உண்டு.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான முடி அமைப்பு இருக்கும். கூந்தலை எண்ணைப்பசை மிகுந்த கூந்தல், வறண்ட கூந்தல், சாதாரண கூந்தல் என இயற்கையிலேயே மூன்று வகை உண்டு.
எண்ணை சுரப்பியான செபாசியஸ் சுரப்பி, சேபம் எண்ணையை அதிகம் சுரப்பதால் கூந்தலின் எண்ணை அதிகமாகும். எண்ணைப்பசை அதிகமானால் மயிர்க்கால்கள் அடைத்துக் கொள்ளும்.
தலையில் அழுக்கு சேரும். ஒரு சிலருக்கு எண்ணை சுரப்பி போதிய அளவு சுரக்காததால், கூந்தல் வறண்டு விடும். எண்ணை போஷாக்கில்லாததால் முடி பலவீனம் அடைந்து, உலர்ந்து உடையும். எண்ணை சுரப்பி சரியான அளவில் சுரந்தால், கூந்தல் ஆரோக்கியமாக வளரும். முடிப்பிரச்சனைகள் தோன்றாது.