ஸ்ரீலங்காவின் களுத்துறைப் பகுதியில் கைதி ஒருவர் பொலிஸ் நிலையத்தின் சுவரைத் துளைத்துத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நேற்றிரவு நடந்த இந்தச் சம்பவத்தால் களுத்துறை புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக நபர் ஒருவர், மாத்துகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் புளத்சிங்கள பொலிஸ் நிலைய தடுப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு தடுப்பறையின் கழிப்பறைக்குள் சென்று அதன் ஒருபக்கச் சுவரை மிகவும் நூதனமான முறையில் துளையிட்டுள்ளார்.
பின்னர் அந்தத் துளையினூடாக வெளியேறி பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், குறித்த சந்தேகநபரைக் காண்பதற்காக அவரது உறவினர்கள் நேற்றிரவு பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அதன்போது குறித்த நபரை தடுப்பறையில் தேடிய பொலிஸார் அங்கு அவர் இல்லாமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கழிப்பறைப்பக்கம் சென்று பார்த்தபோதே அவர் துளையிட்டுத் தப்பிச் சென்ற விடயம் தெரியவந்தது.
சந்தேக நபரைத் தீவிரமாகத் தேடிவந்த பொலிஸார் இன்று முற்பகல் மீண்டும் அவரைக் கைது செய்துள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.