அல்-கைதா வலைப்பின்னலின் தலைவர் ஐமான் அல்---ஸவாஹ்ரி நீண்ட நாட்களுக்குப் பின்னர் வீடியோ செய்தியை விடுத்திருந்தார். இந்த வீடியோ காணொளி 55 நிமிடங்கள் நீடித்தது.
இதில் பல விடயங்கள் பேசப்பட்டன. ஜிஹாத் கொடியை இந்திய துணைக்கண்டம் முழுவதும் பறக்க விட வேண்டும் என்பது முக்கியமான செய்தி. இந்தியா, பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளில் ஒடுக்குமுறைகளில் இருந்து முஸ்லிம்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது அதன் தொடர்ச்சி.
அல்-கைதா வலைப்பின்னல் இந்தியாவில் புதிய பிரிவை ஆரம்பித்துள்ளதாக ஐமான் அல்-ஸவாஹ்ரி தெரிவித்தார். இந்தப் பிரிவு இந்திய துணைக்கண்டம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுமென அவர் கூறினார்.
இந்தியாவின் அஸாம், குஜராத், காஷ்மீர் மாநிலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகள் மற்றும் அநீதியில் இருந்து அவர்களைக் காப்பாற்றப் போவதாகவும் அவர் உறுதியளித்தார்.
ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் அல்-கைதா தலைவரின் எச்சரிக்கை வெளியானது. அந்த அமைப்பு, எந்தத் தாக்குதல் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்ததோ, அந்தத் தாக்குதலின் ஆண்டு நிறைவு நெருங்கும் சமயத்தில் தமது இருப்பை ஞாபகப்படுத்தினார், அல்-ஸவாஹ்ரி.
விமானங்களைக் கடத்தி நியூயோர்க் உலக வர்த்தக நிலைய இரட்டைக் கோபுரங்கள் உள்ளிட்ட இலக்குகளை அல்-கைதா வலைப்பின்னல் தாக்கி, எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதியுடன் 13 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
அல்--ஸவாஹ்ரியின் வீடியோவைத் தொடர்ந்து இந்தியாவில் எச்சரிக்கை சங்கு ஊதப்பட்டது. இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புலனாய்வு நிபுணர்களைக் கூட்டினார். இந்த வீடியோ உண்மையானது தானா என்பதை ஆராயுமாறு பணித்தார்.
அதன் பின்னர், இந்திய பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் கூடி, அச்சுறுத்தல் பற்றி பரிசீலனை செய்தார்கள். தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் தகுந்த முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனை விடுக்கப்பட்டது.
அமெரிக்கா மீதான தாக்குதலுக்குப் பொறுப்பான அமைப்பு, தமது நாட்டை நோக்கி ஜிஹாத் போராட்டத்தை விஸ்தரிக்கிறது என்ற செய்தி இந்தியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இஸ்லாமிய கடும்போக்கு சக்திகளின் அடாவடித்தனங்கள் தமக்குப் புதிதல்ல என்பதை இந்தியர்கள் நினைவுகூர்ந்தபோதிலும், அல்–கைதாவின் ஊடுருவல் பற்றிய அச்சம் அவர்களை சற்று அதிகமாக ஆட்டிப் படைக்கிறதென ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்தியா பற்றி அல்-கைதா பேசுவது, இது முதற்தடவை அல்ல. 2001ஆம் ஆண்டில் இதே போன்றதொரு காணொளியின் மூலம் இந்திய இஸ்லாமியர்களுக்கும் ஐமான் அல்--ஸவாஹ்ரி அறைகூவல் விடுத்திருந்தார்.
ஆப்கானிஸ்தான், காஷ்மீர், பொஸ்னியா-ஹெர்ஸிகொவினா, செச்சன்யா ஆகிய பிராந்தியங்களில் போராட வரவேண்டும் என்பது அன்று அவர் விடுத்த கோரிக்கை. அப்போது இல்லாத பயம் இப்போது தோன்றியிருக்கிறது என்றால், அதற்கும் காரணங்கள் இருந்தன.
இதில் முக்கியமான காரணம், அல்--ஸவாஹ்ரி அன்று ஆப்கானிஸ்தானுக்கும், இன்று இந்தியாவிற்கும் அளித்த முக்கியத்துவம். கடந்த புதன்கிழமை இணையத்தில் சேர்த்த காணொளியில், இந்தியாவில் ஜிஹாத் போராட்டத்தை விஸ்தரிப்பது பற்றி அவர் அதிகம் பேசியிருந்தார்.
இந்தியாவில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தை இரண்டாவது காரணமாகக் குறிப்பிடலாம். இஸ்லாமிய குழுக்களின் சந்தேகக் கண்கொண்டு நோக்கும் நரேந்திர மோடியின் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சி நிர்வாகத்தை பொறுப்பேற்று 100 நாட்கள் கழிந்த நிலையில், அல்--கைதாவின் அறிவித்தல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், இஸ்லாமிய கடும்போக்கு அமைப்புக்களின் செயற்பாடுகள் புதியவையல்ல. ஜம்மு--காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்தப் பிராந்தியத்தை பாகிஸ்தானுடன் இணைப்பதற்காக ஆயுதப் போராட்டம் நடத்தும் லஷ்கார் ஈ-தொய்பா முதற்கொண்டு, மேற்குலகின் உலோகாதய கலாசாரத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுத்து இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு அமைய வாழும் முஸ்லிம் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்காக போராடும் சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) வரை எத்தனையோ குழுக்கள் இருக்கின்றன.
தெற்காசிய பிரந்தியம் முழுவதிலும் இஸ்லாமிய இராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதற்காக ஆயுதப் போராட்டம் நடத்தும் இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பையும் மறந்து விட முடியாது.
இந்த அமைப்புக்கள் இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பற்றவையாக மாற்றியிருப்பதுடன், முக்கியமான நகரங்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்தி சிவிலியன்களையும் கொன்றிருக்கின்றன.
பாகிஸ்தான் உள்ளிட்ட அயல்நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள உறவுகளை சீர்குலையச் செய்வதிலும், இந்தியாவின் பல மாநிலங்களில் மதக்கலவரங்களைத் தூண்டி விடுவதிலும் இத்தகைய கடும்போக்கு அமைப்புக்கள் கொண்டுள்ள வகிபாகம் புறக்கணிக்க முடியாததாகும்.
இன்று மும்பையிலோ, புதுடில்லியிலோ, காசியிலோ வாழும் சராசரி இந்தியர் ஒருவர் குண்டுத் தாக்குதல்கள் பற்றிய பீதியுடன் வாழ்வாராயின் அல்லது பாதுகாப்பற்ற உணர்வைக் கொண்டிருப்பாராயின், அதற்குக் காரணம் கடும்போக்கு முஸ்லிம் அமைப்புக்களின் செயற்பாடுகள் தான்.
இத்தகைய சூழ்நிலையில், அல்-கைதாவின் இந்தியத் துணைக் கண்ட ஊடுருவல் பற்றிய அறிவித்தலை ஆராய வேண்டியிருக்கிறது. இந்த வலைப்பின்னலின் பிரதான போராட்டக் களம் ஆப்கான், – பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பொது எல்லை அமைந்துள்ள பிரதேசமாகும்.
இந்தப் பிராந்தியத்தை எந்த நோக்கத்திற்காக அல்–கைதா தலைவர்கள் தேர்ந்தெடுத்தார்களோ அந்த நோக்கம் இன்னமும் நிறைவேறவில்லை. இங்கு ஆரம்பித்த ஜிஹாத் போராட்டம் நலிவடைந்திருக்கிறது.
அல்--கைதாவுடன் இணைந்து செயற்பட்டக் குழுக்கள் சிதறியிருக்கின்றன. பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. ஈராக்கை எடுத்துக் கொண்டால், அங்கும் அல்-கைதா வலைப்பின்னல் முக்கியத்துவத்தை இழந்திருக்கிறது.
அதன் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தலையாய பொறுப்பை ‘இஸ்லாமிய இராஜ்ஜியம்’ என்ற பெயரால் இயங்கும் குழு தானாகவே சிரமேற்றுள்ளது. அல்--கைதாவின் கோட்பாடுகள் மற்றும் வியூகங்களுடன் மாறுபட்டு நிற்கக்கூடிய கொடூரமான பாதையை ஐ.எஸ். தேர்ந்தெடுத்தபோதிலும், இன்று சகல கடும்போக்கு சக்திகளும் அதனைச் சுற்றி அணி திரண்டுள்ளன.
இன்று அல்-கைதாவை எல்லோரும் மறந்து விட்டார்களா என்ற கேள்வி கேட்கக்கூடிய அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது.
ஒரு இலக்கு நோக்கிய போராட்டத்தில் இலட்சியங்களை அடைவதற்கு முன்னர் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை, அல்–கைதாவிற்கு எழுந்துள்ளதாக கருத முடியும்.
‘இதோ பாருங்கள்! நாங்களும் இருக்கிறோம். எமது செல்வாக்கு மறைந்து விடவில்லை,’ என்று பறைசாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் அதற்கு ஏற்பட்டுள்ளதென கருதுவதில் தவறேதும் இருக்க மாட்டாது. ஐ.எஸ், அல்–கைதா ஆகியவை வெவ்வேறு பாணியில் செயற்படும் வேறுபட்ட அமைப்புகளாக இருக்கும் சமயத்தில், ஐ.எஸ் இற்கும், அல்--கைதாவிற்கும் தனித்தனி இஸ்லாமிய இராஜ்ஜியங்கள் இருக்க முடியாது.
இஸ்லாமிய இராஜ்ஜியம் தான் இறுதி இலக்கென்றால், அது ஐ.எஸ் இற்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் அல்லது அல்--கைதாவிற்கு சொந்தமானதாக இருத்தல் அவசியம்.
இந்த அவசியத்தின் மத்தியில், ஐ.எஸ் அமைப்பின் இலக்கில் இருந்து தமது இலக்குகள் வேறுபட்டவை என்று உலகிற்கு எடுத்துரைப்பது ஐமான் அல்--ஸவாஹ்ரியின் நோக்கமாக இருந்திருக்கலாம்.
உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கடும்போக்கு இஸ்லாமியர்கள் ஐ.எஸ் அமைப்பை நோக்கி காந்தம் போல் ஈர்க்கப்படும் சந்தர்ப்பத்தில், தமது அமைப்பிற்கும் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டிய தேவை அவருக்கு எழுந்திருப்பதாகவும் கருத முடியும். இதற்கு இந்திய துணைக்கண்டம் தான் சிறந்த களம் என்று அல்-கைதா தலைவர் கணக்குப் போட்டிருக்கலாம்.
இந்திய துணைக்கண்டத்தில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் பாதுகாப்பற்ற உணர்வு துளிர்த்தபோதிலும், அது ஐமான் அல்--ஸவாஹ்ரி போன்றவர்கள் போதிக்கும் கடும்போக்கு இஸ்லாமிய சிந்தனையாக முழுமையாக பரிணமிப்பது கடினம் என்பதை இந்தியாவின் அனுப வம் எடுத்துரைக்கிறது.
உள்ளேயிருந்தும் வெளியில் இருந்தும் எத்தனையோ அழுத்தங்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டபோதிலும், இந்திய முஸ்லிம்கள் இஸ்லாமிய கடும்போக்கு அமைப்புக்களை முழுமையாக அங்கீகரித்ததும் இல்லை, வளரவிட்டதும் இல்லை.
தாம் வாழும் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்பிற்கு அவர்கள் சவால் விடுத்தபோதிலும், அதனைத் தகர்த்தெறிந்துச் செல்வதன் மூலம் தான் விடுதலை கிடைக்கும் என்ற எண்ணம் இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிந்தித்தது கிடையாது. இவ்வாறு சிந்தித்திருந்தால், ஈராக், சிரியா ஆகிய நாடுகளைப் போன்று இந்திய துணைக்கண்டத்திலும் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடி இருக்கும்.
இன்று ஐ.எஸ் இயக்கத்தின் அசுர வளர்ச்சியினது முன்னிலையில், அல்-கைதாவின் இருப்பை பறைசாற்றுவதற்காகவும், பிரசாரம் தேடிக் கொள்வதற்காகவும் இந்திய துணைக்கண்டத்தில் கால்பதிக்க நினைக்கின்ற ஐமான் அல்--ஸவாஹ்ரி, இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் தமது கணிப்பீடுகளில் தவறிழைத்து விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை