கருணா அம்மான் பகிரங்கமாக தெரிவித்தருக்கும் விடயம் எமக்கு நல்லது. இதன்மூலம் சர்வதேசத்துக்கு விடுதலைப் புலிகளின் கொடூரத்தன்மை மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை உணர்ந்துகொள்ளலாம் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
கருணா அம்மான் அண்மையில் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கருணா அம்மான் தவறு செய்திருந்தால், அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கடமை. அதேபோன்று மன்னிப்பு கேட்கக்கூடியதாக இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பதற்கும் அரசாங்கத்துக்கு முடியும்.
என்றாலும் கருணா அம்மான் அல்லது அவர் சார்ந்தவர்கள் அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்படும் அறிவிப்புக்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் எந்தவகையிலும் பொறுப்பு கூறமுடியாது.
அத்துடன், கருணா அம்மான் தெரிவித்த கருத்து தொடர்பாக, விசாரணை மேற்கொண்டு தகவல்களை தேடிக்கொள்வது எமக்கு பிரயோசனமாகும்.
அதேபோன்று கருணா தெரிவித்த கருத்துக்களை, ஜெனீவா மனித உரிமை அமைப்பு செவியுற்றிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
விடுதலைப்புலிகளின் கொடூரத்தன்மை மற்றும் அவர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை இதன் மூலம் உணர்ந்துகொள்ளலாம்.
அத்துடன் கடந்த காலங்களில் மேற்கத்திய நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டிருந்தன. ஆனால், தற்போது கருணா தெரிவித்திக்கும் விடயங்கள் தொடர்பாகவும் அந்த நாடுகளுக்கு குரல் கொடுக்கலாம்.
ஆனால், அவர்கள் வாய்திறக்க மாட்டார்கள். அதனால் கருணா அம்மான் தங்களது கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக வாய்திறந்து பகிரங்கமாக தெரிவித்தது எமக்கு நல்லது.